கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதீய ஜனதா இளைஞர் அணியினர் அந்த ஹோட்டலை சூறையாடினார்கள். பாரதீய ஜனதாவினரின் இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் குறும்பட இயக்குனர் தலைமையில் சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற இணைய தள அமைப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடந்த ஹோட்டல் அருகே பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் மோதல் ஏற்பட்டு பொலிஸ் தடியடியில் முடிந்தது.
மேலும் முத்த போராட்டம் நடத்திய சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய கோரி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவ–மாணவிகள் நூதன முறையில் கட்டி பிடிக்கும் போராட்டத்தை கல்லூரியில் நடத்த போவதாக அறிவித்தனர்.
இந்த போராட்டத்திற்கு அந்த கல்லூரி தடை விதித்தது. இதுபோன்ற போராட்டங்கள் நடத்தினால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி 30க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கல்லூரியில் திரண்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ–மாணவிகளை கல்லூரி நிர்வாகம் 2 வாரத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து உள்ளது.