புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம்…
“புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது “ என்று கருணாவைக் காட்டி சிரித்தவர்.
எனவே உங்கள் ஆலோசனைகள் தேவையில்லை ஆயுதங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இராணுவம் புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை நோக்கி தாக்குதல்களை கடுமைப் படுத்துவார்கள்.
காரணம் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை மட்டும் கண்காணிப்பதற்காக மேற்குலகமோ ஐ.நா சபையோ சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்க மாட்டார்கள் இழுத்துப் பூட்டிவிட்டு போய் விடுவார்கள்.
திங்கட்கிழமை காலை அவர்கள் தங்கள் அலுவலகங்களை திறந்து கணணியை இயக்கியதுமே இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துமாறு இலட்சக்கணக்காண மின்னஞ்சல்கள் கொல்லப்பட்டவர்களின் படங்களோடு குவிந்துபோய் கிடக்கும்.
அதே நேரம் இலங்கை இராணுவமும் தாக்குதலை தணித்து தங்களிடம் சரணடைந்த பொதுமக்களின் படங்களோடு புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றி வருகிறோம் என செய்திவெளியிட்டிருக்கும் .
ஐ.நா சபையும் உடனே “இலங்கைத்தீவில் நடக்கும் யுத்தத்தை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது. இலங்கையரசு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் ” என்று ஒரு அறிக்கையை விடுவார்கள்.
பின்னர் மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் அகோரமாக இருக்கும் .மீண்டும் அதே மின்னஞ்சல்கள்.. திங்கள் காலை மீண்டும் ஐ.நா சபையின் நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது அறிக்கை வழமையான ஒன்றாகிப் போனது.
இராணுவம் முல்லைத்தீவு நகரை நெருங்கிக்கொண்டிருந்தது அப்போது புலிகள் முதன் முதலாக ஆனந்தபுரம் பகுதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் ஒன்றுக்கு தயாரானார்கள்.
அதுவும் பிரபாகரனே களத்தில் நின்று வழிநடத்தப் போகும் தாக்குதல் அனைத்து தளபதிகளும் தங்கள் படைகளை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.
புலிகள் , மணலாறு காடுகளுக்குள் இறங்கி விடுவார்கள் என்பதால் காட்டுப் பகுதிகள் முழுதும் பலமான இராணுவத்தின் பாதுகாப்பு இருந்ததால் வடக்கு நோக்கிய ஒரு ஊடறுப்பை செய்தபடி ஒரு அணி போக்கு கட்டியபடி இருக்கும்போது இன்னொரு அணி யாழ் குடாநாட்டை நோக்கி நகர்வதே புலிகளின் திட்டமாக இருந்தது.
அனைத்து இராணுவமும் வன்னிக்குள் குவிக்கப் பட்டிருந்ததால் யாழ் குடா பலவீனமாக இருக்கும் இலகுவாக முன்னேறலாம் என்பது அவர்களது கணிப்பு. அதுமட்டுமல்ல புலிகள் அமைப்புக்கான வாழ்வா சாவா என்கிறதை தீர்மானிக்கப் போகும் தாக்குதலும் இதுதான்.
ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கும்போது இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து விட்டிருந்தது.
அது மாத்திரமல்லாது புலிகள் கனரக ஆயுதங்களை நகர்த்துவதை ராடர்கள் மூலம் கண்காணித்துக்கொண்டேயிருந்தது மட்டுமல்லாமல் அவர்களது வாக்கி டாக்கி யிலான பேச்சுக்களையும் இடைமறித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
புலிகள் தாக்குததலை தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னராகவே இராணுவம் புலிகள் அணி மீது தாக்குதலை தொடங்கியது .
மூன்று பக்கத்திலும் இருந்து மழை போல வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கிய எறிகணை குண்டுகளால் திணறிப்போன புலிகள் சுதாகரிக்கு முன்னரே குண்டு மழையில் புலிகளின் முன்னணி தளபதிகளான கேணல் பானு, கேணல் விதுஷா, கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் நாகேஸ், கேணல் சேரலாதன் ஆகியோருடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் கொல்லப் பட்டனர்.
இந்த தாக்குதலில் இலங்கை இராணுவம் சுமார் 100,000 எறிகணைகளையும் , 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தியிருந்தது. என்பது பின்னர் செய்திகளில் வெளியானது.
உலகப் போர் வரலாற்றிலேயே ஒரு நாட்டு இராணுவம் குறுகிய ஒரு பிரதேசத்தில் ஒரு விடுதலைப்போரட்ட இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலும் இதுதான்.
இந்த தாக்குதலில் பிரபாகரனோடு பொட்டம்மான் ஆகியோரோடு கடற்புலி தளபதி சூசையும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தர்கள் .
அந்த சண்டையில் கொல்லப்பட்ட அனைவரையும் இராணுவம் புலிகள் என்கிற வித்தியாசமின்றி புல்டோசர்கள் மூலம் குழி தோண்டி புதைத்தபடி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.
புலிகளின் இறுதி முயற்சியும் தோற்றுப் போயிருந்தது.
அதே நேரம் அமெரிக்க கப்பல் ஒன்று முல்லைத்தீவு வருகிறது.
அது புலிகளின் தலைமையை காப்பாற்றும் என்றொரு கதையும் பரவலாக அடிபட்டது மட்டுமல்லாது செய்திகளாகவும் வெளியாகியிருந்தது.
அதேபோல அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைத்திருந்த தனது ஒரு யுத்தக்கப்பலை இந்துசமுத்திர பிராந்தியத்துக்கு முல்லைத்தீவுக்கு மிக அண்மையாக நகர்த்தியிருந்தது.
அந்தக்கப்பல் எப்படியும் பிரபாகரனைக் காப்பாற்றி விடுமென புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் அந்தக் யுத்தக்கப்பலானது புலிகளை காப்பாற்ற அங்கு நகர்த்தப் பட்டிருக்கவில்லை.
மாறாக முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் செல்கிறார்களா என கப்பலில் இருக்கும் சக்திவாய்ந்த ராடார்கள் மூலம் கண்காணித்து இலங்கை இராணுவத்துக்கு தகவல் சொல்வதுதான் அவர்களது நோக்கம்.
அப்படித் தப்பிச் சென்ற புலகளின் பல படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கியது மட்டுமல்லாமல் பலரை கைது செய்துமிருந்தனர்.
அப்படி தப்பிச் செல்லும்போது கடற்புலி தளபதி சூசையின் மனைவியும் மகளும் கைதானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இனியும் தங்கள் வெளிநாட்டு பணியகமான அனைத்துலகச் செயலகத்தின் முயற்சிகளால் அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கலாலோ இனி எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என புலிகளின் தலைமை உணரத் தொடங்கியிருந்தது.
எனவே உடனடியாக சர்வதேச தொடர்பாளராக மீண்டும் கே .பி யை நியமித்த பிரபாகரன்.
உலக நாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியோ அல்லது அதிரடியாக எதாவது திட்டத்தை நிறைவேற்றி தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இப்போ புலிகளின் தலைமைக்கு கே .பியை நம்புவதைத் தவிர வேறு தெரிவு இருந்திருக்கவில்லை.
அனால் கே.பியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது.
அவர் ஏற்கனவே சர்வதேச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்.
அவரது ஒவ்வொரு அசைவும் புலிகளின் தலைமையுடனான உரையாடல்களும் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.
தான் கண்காணிக்கப் படுகிறேன் என்பதை அறிந்திருந்தும் அதனையும் மீறி புலிகளின் தலைமையை காப்பாற்ற கே. பி சில முயற்சிகளை எடுத்தார்.
ஆனால் அவைகள் சர்வதேச புலனாய்வுத்துறையினரால் முறியடிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் சரணடைபவர்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்க தொடர்ந்தும் இந்தியா மற்றும் வெளி நாடுகளோடும் ஐ.நா சபை அதிகாரிகளோடும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கட்டம் கட்டமாக சரணடைய புலிகள் அணியை தயார் படுத்துமாறு புலிகளின் தலைமைக்கு அவரால் ஆலோசனை வழங்கப்பட்டது .
இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு – சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து புலிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது.
எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.
‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து.
இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும்.
அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.
தொடரும்…
-சாத்தரி-
இதை இன்னும் படிக்கவில்லையா?? படிச்சிருங்க பிளீஸ்