விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்று முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் உள்ள வயல் நிலம் ஒன்றில் இந்த வாழ்த்து மடல் காணப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த வயல் நிலங்களில் காலபோக நெல் விதைப்பு செய்யும் நோக்கில் வயலை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வயல் நிலத்தில் மறைந்திருந்த நிலையில் குறித்த வாழ்த்து மடல் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் “களத்தடை என் சோதரரே. சோலையில் மலர்ந்திடும் என் எதிர்காலங்களே.
முதுசமாய் ஒளிர்ந்திடும் எம் மூதாளர்களே. உலகெலாம் வாழ்ந்திடும் எம் உறவுகளே.
தமிழராய் பிறந்திட்ட அனைவருமே… தலைவரே எங்கள் திருவிளக்கு.
பிறக்கின்ற புத்தாண்டில் அவர் வழி தொடருங்கள் வெல்லும் எங்கள் இலக்கு”
எனும் வாசகம் அதில் எழுதப்பட்டுள்ளதுடன் சு.ப.தமிழ்ச்செல்வனின் கையெழுத்து அதில் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.