மேட்டூர்: மேட்டூரில் விபத்தை ஏற்படுத்திய காரில் இரு சக்கர வாகனம் சிக்கியது கூட தெரியாமல் 20 கி.மீ. தூரத்துக்கு பைக்கை இழுத்து சென்ற கார் டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
மேட்டூர் நால்ரோட்டில் ஒரு கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் முன்பு சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயற்சித்தது.
அப்போது எதிர்பாராவிதமாக பைக்கின் மீது கார் மோதியபோது அதன் முன்பகுதியில் பைக் சிக்கியது கூட தெரியாமல் டிரைவர் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அந்த காரை வேகமாக சென்று துரத்தினர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்ற போது காரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் பார்த்தபோது டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
அவரை வெளியே இழுத்து போட்டு தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காரின் முன்னால் பைக் மாட்டிக் கொண்டது கூட தெரியாமல் 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட காட்சி பார்ப்பவர்களை பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.