தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் கூட்டமைப்பாக இல்லாது தனித்து போட்டியிடுவதாக இருந்தால் சுதந்திரமாக வெளியில் போய் கேட்கலாம்.
இதேபோன்று வேறு கட்சிகள் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிடப் போகிறோம் என்று கேட்டால் அதனையும் சாதகமாகப் பரிசீலித்து உள்வாங்குவோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் யார் இருக்கிறார்கள் யார் இல்லாதுள்ளார்கள் என்பது தெரியாதுள்ளது.
காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்றும் கைச்சாத்திட்டு கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
கைச்சாத்திடப்பட்ட ஆவணத்தில் இந்த மூன்று கட்சிகளும் தான் கைச்சாத்திட்டுள்ளன.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிறதாக நாங்கள் கூறுகின்ற இலங்கை தமிழரசுக் கட்சியோ, புளொட் அமைப்போ உள்ளே இருக்கவில்லை.
ஆரம்பத்தில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாணசபைத் தேர்தலின் போது உள்ளே இருந்தது தற்போது இல்லாதது போல் தெரிகின்றது.
ஆரம்பத்தில் உள்ளே இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இப்போது உள்ளே இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அப்படிப் பார்க்கும் போது தமிழீழ விடுதலை இயக்கம் ஒன்றுதான் ஆரம்பத்திலும் இருந்தது இப்போதும் இருக்கின்றது.
மஹிந்த ராஜபக் ஷ ஒருதடவை சொன்னது போல தங்களுடைய கட்சி சலூன் கதவு போல யாரும் வரலாம் யாரும் போகலாம்.
அது மாதிரித்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இருக்கிறது போல தென்படுகின்றது. ஆகையால் தேர்தலின் போது தனியே சென்று கேட்பதற்கு யாருக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது. வலுக்கட்டாயமாக பிடித்து யாரையும் அமர்த்தமாட்டோம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் கூட்டமைப்பாக இல்லாது தனித்துக் கேட்பதாக இருந்தால் சுதந்திரமாக வெளியில் போய் கேட்கலாம்.
அல்லது வேறு கட்சிகள் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிடப் போகிறோம் என்று கேட்டால் அதனையும் சாதகமாகப் பரிசீலித்து உள்வாங்குவோம் என்றார்.