திருதிரு துறுதுறு’ படத்தில் நடித்தது போலவே சுறுசுறுப்பாகப் பேசுகிறார் ரூபா மஞ்சரி. தமிழில் “நான்’ நேற்றைய ஹிட்… “யாமிருக்க பயமே’ இன்றைய ஹிட். “சிவப்பு’ படம்கூட எனக்கு நாளைய ஹிட்தாம்பா’ என்று பேட்டியைக் கலகலப்பாக்கியவாறே பேசுகிறார் இந்தச் சுருள் முடி சுந்தரி ரூபா.
“”யாராவது இப்ப என்னைப் பார்த்தாங்க, யாழ்ப்பாணத்துல இருந்து வந்த பொண்ணு இங்க என்ன பண்ணுதுன்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு அந்த மக்களோட மொழி, வலி எல்லாம் உணர்ந்தவளாக என்னை மாற்றிவிட்டார் “சிவப்பு’ படத்தின் இயக்குநர் சத்யசிவா.
இந்த ஷார்ட் பீரியட்ல எனக்கு இவ்ளோ பெரிய வாய்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் படத்தில் நடிக்க எந்த நடிகையை அழைத்திருந்தாலும் கண்டிப்பாக நடிக்க மறுத்திருக்க மாட்டார்கள். அவ்வளவு சிறந்த படம்; அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்”
என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு நடிகைதான்… இலங்கைத் தமிழர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
சோ வாட்… நடிகை என்றால் ஏதும் தெரியாதவர்கள் என்று அர்த்தமா? சினிமாவில்தான் கதாநாயகிகளுக்கு ஏதும் தெரியாதது போல காட்டுவார்கள். ஆனால், உண்மையில் என்னைச் சுற்றி, இந்த உலகத்தைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியும்.
இலங்கை மக்களோட வாழ்க்கை ரொம்ப துயரம் மிக்கது. அந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு நேர்ந்தது மாதிரியான ஒரு கொடுமை, வேற யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது.
சொந்த நாட்டைவிட்டு வெளியேறி, மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து அகதிகளாக அந்த மக்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாதவை. நான் பெங்களூருவில் பிறந்தாலும், நானும் ஒரு தமிழச்சிதான். அதனால் எனக்கும் அவர்களுடைய வலி, வேதனை புரியும்.
“சிவப்பு’ படத்தில் உங்களின் கதாபாத்திரம்?
இந்தப் படத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அகதிப் பெண்ணாக மேக்கப் போடாமல், கட்டட சித்தாளாக நடித்திருக்கிறேன். என்னைச் சுற்றிதான் கதை நகரும். ஒரு அகதிப் பெண்ணாக நான் படும் அவஸ்தையுடன், காதல், துரோகம், வஞ்சகம், அரசியல் என்று இலங்கைத் தமிழர்களின் முழு வலியும் இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
“யாமிருக்க பயமே’ இந்த அளவுக்கு ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
கண்டிப்பாக ஹிட்டாகும் என்று தெரியும். படத்தின் இயக்குநர் டி.கே., இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். பேய்க் கதை என்று போர் அடிக்காமல், நகைச்சுவை என்று வந்த படங்கள் மாதிரியும் பண்ணாமல் இரண்டையும் கலவையாக்கி ரசிக்கும்படி தந்தார்.
அது நன்றாக இருந்தது. “நான்’ படத்தில் கிடைத்த பாராட்டைவிட அதிகமாகவே இந்தப் படத்தில் என் கேரக்டர் பாராட்டப்பட்டது, பெருமையாக இருக்கிறது.
“திருதிரு துறுதுறு’ படத்துக்கும், “நான்’ படத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி. “நான்’ படத்துக்குப் பிறகு “யாமிருக்க பயமே’ படத்துக்கும் பெரிய இடைவெளி. இப்படிப் படத்துக்குப் படம் நிறைய இடைவெளி இருந்தால் எப்படி?
இந்த இடைவெளிகள் நானாக உருவாக்கியதுதான். சினிமாவில் இடைவெளி என்பது தவிர்க்க முடியாதது. நல்ல கதை, நல்ல இயக்குநர், நல்ல பேனர் அமைந்தால்தான் என்னால் நடிக்கமுடியும். வந்தவரை லாபம் என்று நடிக்க முடியாது.
அப்படி நடித்தால் நிறைய படங்களில் நடிக்கலாம். ஆனால் எனக்கு அது வேண்டாம் என்று தோன்றுகிறது. ஒரே மாதிரியாக நடிப்பது போரடித்து
விடும். ஒரு நடிகை 10 வருடம் சினிமாவில் இருக்க முடியும் என்றால், தொடர்ந்து ஒரே மாதிரி நடித்தால் சீக்கிரமே காணாமல் போய்விடுவார். அதுமட்டுமல்ல, “திருதிரு துறுதுறு’ படம் முடித்தவுடன் மலையாளத்தில் “டோர்னமெண்ட்’, “மல்லு சிங்’ போன்ற படங்களில் நடித்தேன். தொடர்ந்து மலையாளத்திலும் நடிப்பதால் கொஞ்சம் இடைவெளியைத் தவிர்க்க முடியவில்லை.
மலையாள சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?
ஒர்க்கிங் ஸ்டைல் எல்லாம் ஒன்றுதான். பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், மலையாளத்தில் ஒரு படத்தை ஒரு மாதம், இரண்டு மாதம் இடைவெளியில் தொடர்ச்சியாக எடுத்து முடித்து, மூன்றாவது மாதத்தில் திரைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். எவ்வளவு பெரிய நடிகருக்கும் இது பொருந்தும்.
தொடர்ந்து சின்ன நாயகர்களுடனும், அறிமுக நாயகர்களுடனும் மட்டுமே நடிக்கிறீர்களே?
விஜய், அஜித், சூர்யா போன்றவர்களுடன் நடிக்க அழைப்பு வந்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன். தற்போது நான் நடித்துள்ள, நடித்துவரும் படங்களின் நாயகர்களும் ஒரு நாள் பெரிய நாயகர்களாக மிளிர்வார்கள்.
உங்களைப் பற்றி கிசுகிசுக்களே இல்லையே?
இப்போது மட்டுமல்ல, எப்போதுமே நான் யார் பேச்சுக்கும் போகமாட்டேன். என்னை எல்லோரும் நல்ல பொண்ணுன்னுதான் சொல்வாங்க. சினிமாவுக்கு வந்த பிறகும் நான் ஒரு தனிமை விரும்பிதான்.
பார்ட்டி, பங்ஷன் என்று எங்கும் யாருடனும் போகமாட்டேன். இதெல்லாம் நான் சினிமாவுக்கு வந்த பிறகு உருவான பழக்கமில்லை. பள்ளியில் இருந்தே தொடர்கிறது. அதனால் உங்களுக்குக் கிசுகிசுவுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ரொம்ப நல்லா தமிழ் பேசுறீங்களே?
அதுதான் முதலிலேயே சொன்னேனே நான் தமிழச்சி என்று. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் என்றாலும் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படித்தது சென்னையில்தான். வீட்டில் தமிழில்தான் பேசிக்கொள்வோம்.