யாழ். குருநகர்ப் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் தலைமையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் தந்தை மற்றும் தாயாரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டதுடன் வழக்கினை மே மாதம் 12ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
கடந்த 13ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போன குறித்த யுவதி மறுநாள் வருடப்பிறப்பு அன்று பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் பெற்றோர் இன்று யாழ் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தமது மகளின் சாவுக்கு யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த இரண்டு பாதிரிமார்களே காரணம் என தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களிடமும் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பெற்றிருந்தனர். விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டுக்களை இருவரும் முற்றாக மறுத்திருந்தனர்.
இந்நிலையில் யுவதியின் பெற்றோர்களினால் இன்றைய தினம் நீதிமன்றில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின் போதும் தமது மகளின் மரணத்திற்கு குறித்த இரு பாதிரிமார்களும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
எனது மகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் முத்தம் கேட்டு, இரு அருட்சகோதரர்கள் அதட்டினர் என ஜெரோமி கொண்சிலிட்டாவின் பெற்றோர் நீதிவானிடம் வாக்குமூலம் தெரிவித்தனர்.
கடந்த 14 ஆம் திகதியன்று யாழ் குருநகர் பகுதி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க ஜெரோமி கொண்சிலிட்டாவின் மரணம் தொடர்பான வழக்கு இன்று காலை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் பி.சிவகுமார் பெண்ணின் மரணம் தொடர்பில் பெற்றோரிடம் வாக்குமூலங்களை பெற்றதுடன், மரணமடைந்த யுவதி பாவித்த கையடக்க தொலைபேசியை மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பரீசிலிக்க பொலிஸாரிடம் வழங்குமாறு பெண்ணின் பெற்றோருக்கு உத்தரவிட்டார்.
இதன் போது முறைப்பாட்டாளர் சார்பில் பொலிஸார் மன்றில் அறிக்கைகளை சமர்ப்பித்ததுடன் சட்டத்தரணிகளான என்.சிறிஸ்காந்தா, கே.சுகாஷ், ரி.கணதீபன், ரி.பிரதீபன் ஆகியோர் ஆஜராகினர்.
முதலில் மகளின் மரணம் குறித்து இறந்த யுவதியின் தந்தை வாக்குமூலம் வழங்குகையில்..,
“இறந்தவர் எனக்கு 2ஆவது மகள்.சம்பவதினத்துக்கு (இறந்த தினம்) முன்னர் நாங்கள் வெளியில் சென்ற போது, வீட்டில் நின்ற சகோதரர்களிடம் பூங்காவிற்கு செல்வதாக கூறி சென்றிருந்தார். இவர் மறையாசிரியராக பெரிய தேவாலயத்தில் கடமையாற்றி இருந்தவர். மகள் காணமல் போனதால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்தோம்.அடுத்த நாள் பொதுமக்கள் மூலமாக கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் உள்ளதாக அறிந்தேன். சென்று பார்த்த போது எனது மகள் தான் என அடையாளம் கண்டு கொண்டேன்.
மகளின் சடலம் காணப்பட்ட கிணறு பாதுகாப்பாக மறைக்கப்பட்ட கிணறு. கடந்த 1 மாதமாக அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. இதற்கு காரணம் இரு அருட்சகோதரர்கள்.. அவர்களின் வற்புறுத்தலினால் தான் எனது மகள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட போது மகளின் உடலில் எதுவித காயமும் காணப்படவில்லை.
இதுவரை என்ன நடந்தது என்று தெரியவில்லை. மகளை கொலை செய்து விட்டனர். வேறு எவரிடமும் எமக்கு சந்தேகம் இல்லை. இரு அருட்சகோதர்களிலும் தான் சந்தேகம்.
இவர்களின் பெயரை மன்றத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் என கூறி பாதர் வின்சன் பெனான்டோ, பாதர் நிக்சன் கோலின் என தெரிவித்து பெரியகோவிலில் இவர்கள் கடமையாற்றுவதாக” நீதவானிடம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அடுத்து மகளின் மரணம் தொடர்பில் தாயான கிரகரி ஜெரோம் தனது வாக்குமூலத்தில்…
“எங்களுக்கு 5 பிள்ளைகள். இறந்தவர் 2வது பிள்ளை.ஜெரோமி வயது 22. இறப்பதற்கு முன்னர் அவரது அறையில் கைத்தொலைபேசியில் உரையாடுவது எனக்கு கேட்டது. அதில் பயமாக இருக்கு எனக்கு குளிசை வாங்கி தாங்க பாதர் என கேட்டார்.
இதன் போது நான் உடனே அவரது கைத்தொலைபேசியை பறித்து யார்? என வினவிய போது மறுபுறத்தில் இருந்து அழைப்பு தடைப்பட்டது.
எனது மகளிடம் யாரிடம் கதைத்தாய்? என அதட்டி கேட்டேன். அப்போது அவர் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்… அதாவது “நிக்ஸன், குயின்சன் பாதர்மார் இருவரும் அடிக்கடி என்னிடம் முத்தம் கேட்கின்றனர் அம்மா” என்று அழுததுடன் “ஐ லவ் யூ சொல்லுமாறும் வற்புறுத்துகின்றனர்” என தெரிவித்தார்.
மேலும் இருவரும் “இவ்விடயத்தை வெளியில் கூற வேண்டாம்” எனவும் எனது மகளை வெருட்டியுள்ளனர். மூன்றாம் மாதம் 2 ஆம் திகதி இச்சம்பவத்தை என்னிடம் மகள் தெரிவித்தார்.
இதன்போது நீதிமன்றத்தினால் “அதன் பின்னர் மகளின் நடத்தையில் மாற்றம் வந்ததா?” என கேட்கப்பட்டது.
தொடர்ந்து பதிலளித்த பெண்ணின் தாய் “எனது மகள் எங்கள் சொற்படி நடப்பவள். இதனால் நாங்கள் இரு பாதரும் உள்ள தேவாலயத்திற்கு போக வேண்டாம்” என கூறி அவரை வீட்டில் நிற்குமாறு தெரிவித்தோம்.
மகள் கடந்த 13 ஆம் திகதி நாங்கள் வெளியே சென்ற போது வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
“அன்று போன மகள் அடுத்த நாள் சடலமாக தான் நான் பார்த்தேன்.., சடலம் மீட்கப்பட்ட கிணறு சந்தேகப்படும் இரு அருட்சகோதரர்களும் வதியும் பகுதியில் உள்ளது. எனவே தான் மேற்படி இரு பாதர்மாரையும் சந்தேகிக்க முடிகிறது.
மேலும் மகளிடம் முன்னர் யாரிடம் தொலைபேசியில் பேசினாய்? என நான் கேட்டபோது பாதர் குயின்சன் (0774896595), பாதர் நிக்ஷன்(0773680939) ஆகியோருடன் உரையாடியதாக தெரிவித்தார்.
மகளை காணது நான் தவித்த போது இரண்டு பாதர்களின் தொலைபேசிக்கு நான் அழைப்பினை ஏற்படுத்தி, மகளை பற்றி விசாரிக்க முயன்றேன்.
ஆனால் குயின்சன் பாதரின் தொலைபேசியில் “றோங் நம்பர்” என கூறி அழைப்பை துண்டித்ததுடன். நிக்சன் பாதர் “தான் ஒரு நிகழ்வில் உள்ளதாக” தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
இதனை அடுத்தே பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தோம். அதில் இரு பாதரிடமும் எமக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்தோம் என மன்றில் தெரிவித்தார்.
இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் சிவகுமார் எதிர்வரும் மே.12 திகதி வழக்கை ஒத்தி வைத்ததுடன் கையடக்க தொலைபேசியை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு பெற்றோருக்கு உத்தரவிட்டார்.
எனினும் இவ்வழக்கினை ஆராயும் போது இறந்தவர் எதுவித கடிதத்தையோ அல்லது ஆதாரத்தையோ வலுவாக விட்டுச் சென்றதாக இல்லை. பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள் எதோ ஒரு வகையில் கடிதம், அல்லது குறிப்பினை எழுதுவர். ஆனால் இப்பெண் எழுதாமல் சென்றமை மரணத்தில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி தொலை பேசி உரையாடலை பார்க்கையில் இறந்த பெண் குளிசை கேட்டுள்ளார். குளிசை கேட்க காரணம் என்ன? பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
எனினும் மரணம் அடைந்தவரின் மரணசான்றிதழில் நீரில் மூழ்கியதால் இறந்ததாக சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டு உள்ளதுடன், அன்று எதுவித பாலியல் செயற்பாட்டிற்கும் உட்படவில்லை என தெரிவித்திருந்தார்.
எனினும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும், நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த ஜெரோமியின் பெற்றோர் தமக்கு நீதி கிடைக்கும் என குறிப்பிட்டு சென்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த யுவதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் யாழ் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் அந்த பாதிரிமார் இருவரும் தற்போது தலைமறைவு ஆகியுள்ளதாக தெரிய வருகின்றது.
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
–