கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவியை, அந்தக் கணவனுடன் சேர்த்து வைப்பதற்காக, மனைவியின் வீட்டில் சூனியம் வைக்க முற்பட்டவர்கள், ஊரவர்களால் பிடிக்கப்பட்டு, சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கருத்து முரண்பாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், குறித்த கணவன், மனைவியுடன் இணைந்து வாழ்வதற்கு விருப்பம் கொண்டுள்ளார். மனைவியே அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனைவியை எப்படியாவது தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் நோக்கில், அந்தக் கணவன், வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியைச் சேர்ந்த பில்லி சூனியம் வைக்கும் பூசாரியின் உதவியை நாடியுள்ளார்.
மனைவியை மீள இணைத்து வைப்பதாக, கணவனிடம் உறுதி கொடுத்த பூசாரி, தான் மந்திரித்த விபூதியை மனைவி வீட்டில் தூவ வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.
அந்த ஆலோசனையின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன், பூசாரி மற்றும் பூசாரியின் உதவியாளர் ஆகியோர் அவ்வீட்டுக்கு இரவு சென்றுள்ளனர்.
எனினும். ஒரு வீட்டைச் சுற்றி சந்தேகத்துக்கிடமான முறையில், மூவர் நடமாடுவதை அவதானித்த இளைஞர்கள், சரி, என்ன ஏதுவென்பதை கேட்பதற்காக, அவர்களை அணுகியுள்ளனர்.
இளைஞர்கள் வருவதைக் கண்ட ஒருவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த இளைஞர்கள், அவரிடம் விசாரித்துள்ளனர்.
அதன்போதே, மூவரும் சூனியம் வைக்க வந்த விடயத்தை அறிந்துள்ளனர்.
அதன் பின்னர் மூவரையும் பிடித்து, சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மூவரையும் கைது செய்து, பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.