யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட ஆர்னோல்ட், அதில் வெற்றிபெற்று மாகாண சபைக்கு தெரிவானார். கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வடக்கு மாகாண சபை உறுப்பினராக பதவியேற்ற ஆர்னோல்ட், மாகாண விளையாட்டு அபிவிருத்தி மற்றும் நிறுவன ஊக்குவிப்புத் தொடர்பாக கண்காணிப்பதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.