பிரேஸிலின் தூதுவராகவிருந்து ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பதவிக் காலத்தை பூர்த்தி செய்த பின்னர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு எதிராக அதிகளவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இராணுவ அதிகாரி மற்றும் தூதுவராக அவர் பதவி வகித்ததுடன் தொடர்புபட்டதாக அக்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.
வன்னி தளபதியாக தான் இருந்த போதிலும் போர் முனையில் தான் இருந்திருக்கவில்லையெனவும் இராணுவத் தளபதியாக அச்சமயம் இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவே போர் நடவடிக்கைகளை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் வவுனியா விமான நிலையத்திற்கு அருகிலேயே இருந்தேன்.
நந்திக்கடல் அங்கிருந்து 100 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது. அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பது எவ்வாறு எனக்குத் தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1959 ஜனவரி 3 இல் பிறந்த ஜகத் ஜயசூரிய 19 வயதில் இராணுவத்தில் இணைந்தார். எந்தவொரு இடம் மற்றும் சூழலுக்கு அமைவாக சமாளித்துக் கொள்ளும் ஆளாக நான் இருக்கின்றேன்.
ஆனால் இப்போது நான் எனக்குப் பொறுப்பில்லாத ஏதோவொரு விடயத்திற்காக வேட்டையாடப்படுகின்றேன் என்று சிலோன் டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார்.
அவரின் பேட்டி வருமாறு;
கேள்வி: பிரேஸிலில் நீங்கள் இருந்தபோது அங்கு என்ன நடந்து என்பது குறித்து எங்களுக்கு கூறுங்கள். ஏனெனில் நீங்கள் பிரேஸிலை விட்டு ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அங்கு போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றதே?
பதில்: 2015 ஆகஸ்ட் 5 இல் பிரேஸிலில் நான் கடமைகளைப் பொறுப்பேற்றேன். பிரேஸிலில் தூதுவராக இரு வருட பதவிக் காலத்திற்கான ஒப்பந்தத்தில் நான் கைச்சாத்திட்டிருந்தேன்.
2017 ஆகஸ்டில் பதவிக் காலம் முடிவடைந்தது. 2017 ஜூனில் எனது இரு வருட பதவிக்காலம் முடிவடையவிருப்பதாகவும் நான் நாட்டுக்கு திரும்பி வருவதா அல்லது ஆசிய நாடொன்றுக்கு பதவியொன்றை பெற்றுக் கொள்வதா என்பது குறித்து வெளிவிவகார செயலாளருக்கு நான் தனிப்பட்ட முறையில் எழுதியிருந்தேன்.
ஜூலை 10 இல் அச்சமயம் செயலாளராகவிருந்த எசல வீரக்கோனின் கையெழுத்துடனான கடிதமொன்றை நான் பெற்றிருந்தேன். அது எனது கடமை பூர்த்தியடைந்ததற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது. 31 ஆகஸ்டுக்கு முன்னர் இலங்கைக்கு நான் திரும்பி வரவேண்டியிருந்தது. இரு வருடங்களின் பின்னர் திரும்பி வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைந்திருந்தேன். எனது பயணத் திட்டங்கள் உட்பட சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தேன்.
உரிய காலத்திற்கு முன்னர் எனது விமானப் பயணப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 27 இல் பிரேஸிலியாவிற்கு செல்ல இருந்தது. டுபாய் ஊடாக கொழும்புக்கு எமிரேட் விமானத்தின் மூலம் வந்தேன்.
28 காலை நாட்டை வந்தடைந்தேன். எனது பொதிகள் ஆகஸ்ட் 7 இல் அனுப்பப்பட்டிருந்தன. கப்பல் கம்பனி ஒன்றினூடாக அவை அனுப்பப்பட்டன .
வெளிவிவகார அமைச்சினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நான் வசித்தேன். அதன் பின்னர் ஆகஸ்ட் 8 இல் வீட்டை திரும்ப வழங்கி விட்டு ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கிருந்து இலங்கைக்கு பயணமானேன். என்னைக் கௌரவித்து பிரியாவிடை மதியபோசன நிகழ்வை பிரேஸில் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
ஆகஸ்ட் 24 இல் அந்நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆசிய பிராந்திய திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஒரு சில தூதுவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். எனக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது. ஞயாயிற்றுக்கிழமை நான் பிரேஸிலை விட்டு வெளியேறினேன்.
நான் அங்கிருந்து வரும் வரை எந்தவொரு பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. மறுநாள் செய்தியொன்றை நான் பெற்றுக் கொண்டேன். இலங்கை தினசரிப் பத்திரிகையொன்று போர்க்குற்றங்களை முன்னிலைப்படுத்தியிருந்த செய்தி தொடர்பாக தகவலைப் பெற்றேன். பிரிட்டனின் பி.பி.சி.யினால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
உடனடியாகவே பிரேஸிலிலிருந்து பொறுப்பதிகாரியாகவிருந்த ஜெயக்கொடியிடமிருந்து அழைப்பொன்று வந்தது. பிரேஸில் பத்திரிகைகளிலும் பல்வேறு இணையத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் என்னைப் பற்றிய கட்டுரைகள், செய்திகள் காணப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
எனது அறிவுறுத்தல்களுக்காக அவர் கேட்கப்பட்டிருந்தார். 28 ஆகஸ்டில் அவர் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். எனது பதவிக் காலம் முடிவடைந்து நான் வெளியேறிவிட்டேன் என்ற உண்மையை கூறுமாறு அவருக்கு தெரிவித்திருந்தேன்.
போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட ஏதாவது விடயம் இருக்குமானால் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சைத் தொடர்பு கொண்டு அவருக்கு அழைப்பு விடுத்த ஆட்களுக்கு தெரிவிக்குமாறு நான் அவருக்கு கூறியிருந்தேன். பின்னர் பி.பி.சி. செய்திக் கட்டுரையை நான் வாசித்தேன். அங்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் ஜஸ்மின் சூகாவின் என்னைப் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன.
கேள்வி: சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு முறைப்பாட்டை எங்கு தெரிவித்திருந்தது?
பதில்: அது எனக்கு எதிரான வழக்கு அல்ல எனவும் முறைப்பாடு எனவும் நான் கேள்விப்பட்டேன். உண்மையில் மூன்று நாடுகளுக்கு எனக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. நான் தூதுவர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல எனவும் போர்க்குற்றங்களை இழைத்திருந்ததாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு தெரிவித்திருந்தது.
இணையத்தளத்தில் சனல் 4 ஒளிநாடா போன்று குற்றச் செயல்களின் முழுப் பதிவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களை இழைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது விசேடமாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களை இழைத்ததாக கூறப்படுகிறது.
வன்னியில் குறிப்பிட்டதொரு முகாமில் நான் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் செயற்பாட்டு கட்டளை அட்டவணை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். வன்னி முகாம் தொடர்பான சில விபரங்களையும் தெரிவித்துள்ளனர். சூகா ஒருபோதும் வன்னி முகாமுக்கு வந்திருக்கவில்லை.
இலங்கைக்கும் வருகை தந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் யதார்த்தபூர்வமானது என்ற தொனியைக் கொண்டுள்ளனர். சட்டத்தரணிகள் அந்த மாதிரியாக இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். இவை யாவற்றையும் இணையத்தளத்தில் நான் வாசித்தேன். அத்துடன் போர்த்துக்கேய ஆவணமொன்றையும் நான் பெற்றிருந்தேன்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்திடமிருந்து அந்த ஆவணம் அனுப்பப்பட்டிருந்தது. பிரேஸிலிலிருந்து ஜயக்கொடியினால் அது எனக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டிருந்தது. என்னைப் பற்றிய ஆவணம் பிரேஸில் சமஷ்டி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்கு அல்ல.
கேள்வி: சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன?
பதில்: அது 49 பக்க ஆவணம். வழக்கறிஞரின் மூன்று கோரிக்கைகளை கொண்டிருந்தது. போர்க்குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், சித்திரவதை, வைத்தியசாலை மீதான கண்மூடித்தனான ஷெல் வீச்சு, பொதுமக்களை மனிதாபிமான உதவிகள் சென்றடையாமல் தடுத்தமை தொடர்பாக தூதுவரை விசாரணை செய்யுமாறும் அந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
நான் இந்தக் குற்றங்கள் யாவற்றையும் இழைத்துள்ளதாக குறிப்பிடும் விதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவை ஐ.நா. அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தன. புதிதாக எதுவும் இல்லை. என் மீது மூன்று நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு வலியுறுத்தியிருந்தது.
தூதுவர் ஜயசூரியவுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அவரின் இராஜதந்திர சிறப்புரிமையை நீக்கிவிடுமாறு இலங்கையை கோருமாறும் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு அவர் செல்வதை, அந்நாட்டில் இருப்பதை தடை செய்யுமாறும் கோரப்பட்டிருந்தது.
கேள்வி: பிரேஸில் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டதா?
பதில்: எனக்குத் தெரியாது. ஆனால் ஜஸ்மின் சூகா ஊடகங்களுக்கு பொய் கூறியுள்ளார். அவர் கூறுவது போன்று நான் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. இடம்பெற்ற விடயம் தொடர்பாக நான் எதனையும் அறிந்திருக்கவில்லை.
பிரேஸிலை விட்டு வெளியேறிய பின்னர் அதனை வாசித்த நான் அதிர்ச்சியடைந்தேன். யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் என் மீது தெரிவிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும். நான் ஒருபோதுமே போரிட்ட தளபதியாக இருந்ததில்லை.
கேள்வி: அச்சமயம் என்னவாக இருந்தீர்கள்?
பதில்: வன்னி தளபதியாக இருந்தேன். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதைக் கவனித்தேன். ஒருபோதுமே நான் படைகளுக்கு கட்டளையிடுபவராக இருக்கவில்லை. சண்டையிடுமாறும் சுடுமாறும் உத்தரவிடுபவராக நான் இருந்திருக்கவில்லை.
கேள்வி: யார் அந்த வேலையைச் செய்தார்கள்?
பதில்: இராணுவத் தளபதியே அதனைச் செய்திருந்தார். பிரதேச தளபதிகளுக்கு அவரே நேரடியாக அதனைச் செய்திருந்தார்.
கேள்வி: இராணுவத் தளபதியாக யார் இருந்தார்?
பதில்: ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த எட்டு வருடங்களில் முதற்தடவையாக இப்போது எனது பெயர் வந்துள்ளது.
கேள்வி: ஆனால் முன்னரும் பல தடவைகள் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததே?
பதில்: நிச்சயமாக, ஐ.நா. அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. வன்னி தளபதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படவில்லை.
ஐ.நா.வின் உதவிச் செயலாளராகவும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்களுக்கான விசேட பிரதிநிதியாகவும் 2012 ஜூலை 13 வரை இருந்தவர் ராதிகா குமாரசாமி. உங்களுக்கு எதிராக எதுவும் இல்லையென அவர் என்னிடம் கூறியிருந்தார்.
கேள்வி: அமெரிக்காவிற்கு செல்வதற்கான உங்கள் விசாவுக்கு என்ன நடந்தது?
பதில்: இது எனது தனிப்பட்ட முறைப்பாடாகும். யுத்தம் முடிவடைந்தபோது மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தின் கீழ் போர்க் கதாநாயகர்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. படையினரின் அந்த மாதிரியான ஐம்பது புகைப்படங்கள் இலங்கையின் பத்திரிகைகள் பலவற்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அந்தப் பட்டியலில் நானும் இருந்தேன்.
அமெரிக்க அரசாங்கம் இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தியுள்ளது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். இப்போது போர்க்குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்படுவதற்கான மூல வளமாக இந்த புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் பயன்படுத்தியது என்பது எனது கருத்தாகும்.
கேள்வி: விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் பொறுப்பாகவிருந்த இலங்கையின் போர்க் கதாநாயகர்களில் ஒருவராக இருந்தார் என சில வரிகள் உள்ளனவா?
பதில்: முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிரதான குழுவினரில் ஒருவராக இருந்ததையிட்டு நான் பெருமையடைகிறேன். வன்னி தளபதியாக இருந்ததையிட்டு பெருமிதமடைகிறேன். அந்த நடவடிக்கை வெற்றிகரமானதொன்றாகும். யுத்தத்துக்கு அப்பால் அதிகளவு விடயங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதில் நான் ஈடுபட்டிருந்தேன். இறுதியில் சரணடைந்தவர்கள் உட்பட 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் விடயங்களை மேற்கொள்வது இலகுவான காரியமல்ல. அது மிகவும் குழப்பகரமானதாக இருந்தது.
கேள்வி: யுத்தத்தில் பொதுமக்கள் இழப்புகள் எதுவும் இருக்கவில்லையென நீங்கள் குறிப்பிடுவீர்களா?
பதில்: கடுமையாக போராடி வெற்றி கொண்ட யுத்தமாக அது அமைந்தது. பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நாங்கள் சண்டையிட்டோம் என நான் கருதவில்லை. ஏனெனில் இது முழு அளவிலான போராகவே இருந்தது. அவர்கள் ஆட்டிலெறி மற்றும் விமானத்தையும் வைத்திருந்தனர். அவர்கள் குறைந்த எண்ணிக்கையினராக இருக்கக்கூடும். ஆயினும் அவர்கள் எங்களுக்கு சமமானவர்களாக சகல தருணத்திலும் இருந்தார்கள். அது ஒரு சாதாரண யுத்தமாக இருந்திருக்கவில்லை.
கேள்வி: வட கிழக்கிலுள்ள மக்கள் காணாமல் போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற விவகாரங்களுக்கு தீர்வு காணுமாறு தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். காணாமல் போனோர் உள்ளனரா? போர்க்குற்றம் உண்மையில் இடம்பெற்றதா?
பதில்: பல குடும்பங்கள் தமது குடும்ப உறுப்பினர்கள் புலிகள் அமைப்பில் இருந்தார்களா என்பதை அறிந்திராமல் இருந்தமையும் பிரச்சினையாகும். புலிகளினால் அவர்கள் பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். யுத்தத்தின் போது சிலர் காணாமல் போயிருந்தனர். இறந்திருந்தனர்.
ஆனால் சிலர் படகுகளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றிருந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் கூட மெனிக் பாமிலிருந்து பலர் தப்பிச் சென்றிருந்தனர். ஏனெனில் அங்கிருந்து மன்னார் அண்மித்ததாக காணப்பட்டது.
நான் இராணுவத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கூட கணக்கிடப்படாத ஆட்கள் அங்கிருந்தனர். அவர்கள் சிறையில் உள்ளனர். அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருக்கின்றனர். ஷெல் வீச்சு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் யாவுமே பொய்யானவையாகும்.
கேள்வி: போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா?
பதில்: போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை விசேடப்படுத்துவது அவசியமாகும். விசேடமான ஆள் ஒருவரை குறிப்பிடாமல் வெறுமனே இதனை கூற முடியாது. இந்த நபர் இதனைச் செய்திருந்தார். இந்த நேரத்தில் அதனைச் செய்திருந்தார் என்று எவராவது கூற வேண்டும். அதற்கான ஆதாரம் காட்டப்பட்டால் அதன்பின்னர் விசாரணை செய்ய முடியும். ஆனால் பொதுவாக கூறப்படும் எந்த விடயத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் எவரும் உரிமை கோர முடியும்.
கேள்வி: ஆதலால் ஏதாவது விசேடமான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தனவா?
பதில்: களத்தில் அந்த மாதிரி ஏதாவது இடம்பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் போர் முன்னணியில் இருந்திருக்கவில்லை. நான் வவுனியா முகாமில் இருந்தேன்.
தனிப்பட்ட ஒவ்வொருவரும் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. உயர்மட்டத்தில் நாங்கள் அதனை அறிந்திருக்கவில்லை. தாழ்ந்த மட்டத்தில் இது இடம்பெற்றதோ இல்லையோ என்பதை அவர்கள் சில சமயம் அறிந்திருக்கக்கூடும். யுத்த முனையில் படை வீரர் ஒருவர் என்ன செய்கிறார் என்பதை ஜெனரல் ஒருவர் அறிந்திருக்க மாட்டார்.
கேள்வி : இந்த அட்டூழியங்கள் எவற்றையும் நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லையா?
பதில்: இல்லை. அந்தத் தருணத்தில் எமது இராணுவம் சிறப்பான அனுபவத்தைக் கொண்டிருந்தது. அவர்கள் பாடங்களை கற்றிருந்தார்கள். அவர்கள் அதிகளவுக்கு உதவும் ஆட்களாகவே இருந்தார்கள்.
போர்க்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்கள் பார்க்க முடியும். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை இராணுவம் எவ்வாறு கொண்டு சென்றது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அது மிகவும் வியப்பானதாக இருந்தது.
கேள்வி: வன்னியில் இருந்த கூட்டு சேவை விசேட நடவடிக்கை தலைமையகம் அல்லது ஜோசப் முகாம் சித்திரவதை கூடமாகச் செயற்பட்டது என பலர் குற்றம் சாட்டுகின்றனர். தங்களின் கட்டளையின் கீழ் அது இருந்திருக்கவில்லையா?
பதில்: ஆம், எண்பதுகளின் பிற்பகுதியில் அது அங்கிருந்தது. அந்தத் தருணத்தில் தளபதியை நினைவில் வைத்திருக்கவில்லை. அதுவொரு சிறிய முகாமாக இருந்தது. கூட்டு நடவடிக்கைக்கான தொகுதி ஒன்றாக அது நிர்மாணிக்கப்பட்டது. வவுனியா விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஒரேயொரு இராணுவ நிலையமாக அச்சமயம் அது விளங்கியது. விமானப் படையினர் அதனைப் பயன்படுத்தினர்.
இராணுவத்தின் பிரசன்னத்திற்கான கோரிக்கை அங்கு விடுக்கப்பட்ட போது இராணுவப் படையணி அதனை முகாமாக்கியது. எனது பாதுகாப்புப் படை தலைமையகமும் அந்தத் தொகுதியில் வைக்கப்பட்டது.
கேள்வி: அந்த முகாமின் உட்புறத்தில் சித்திரவதை கூடம் இருந்ததா?
பதில்: புலனாய்வு அங்கு இருந்தபோது அந்தக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. உட்புறத்தில் சில சமயம் அவர்கள் விசாரணையை மேற்கொண்டிருக்கலாம். அதனாலேயே அந்த மாதிரியாக உரைபெயர்க்கப்படுகிறது.
அதே கட்டிடத் தொகுதிக்குள் எனது தலைமையகத்தை நான் கொண்டிருந்ததால் என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அதே கட்டிடத் தொகுதியில் ஏனைய முகாம்களின் பல்வேறு தரத்திலுள்ள தளபதிகளும் இருந்தார்கள். ஆதலால் அந்த முகாம்களில் என்ன நடந்தது என்பதற்கு நான் பொறுப்பல்ல.
கேள்வி: இந்த முகாமுக்கு நீங்கள் முழுமையாக பொறுப்பை கொண்டிருக்கவில்லையா?
பதில்: முழுமையான பொறுப்பை வவுனியா படையணித் தளபதி கொண்டிருந்தார். அவரே பாதுகாப்புக்கு பொறுப்பானவராக இருந்தார்.
கேள்வி: ஆதலால் அது தங்களின் கீழ் இருக்கவில்லையா?
பதில்: இல்லை. பாதுகாப்புக்குப் பொறுப்பான ஒருவராக நான் இருந்திருக்கவில்லை. அங்கு ஒருவரே முழு விடயத்திற்கும் பொறுப்பாக இருந்தார். நாங்கள் ஏனைய சிறிய விடயங்களை கவனித்தோம். அங்கு சித்திரவதை இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தால் சத்தமிடுதல் அல்லது கூச்சலிடுதல் என்பவற்றை சுவர்களைத் தாண்டி நான் கேட்டிருக்க முடியும். நான் பக்கத்து அறையில் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்.
கேள்வி: எந்தவொரு சித்திரவதைக்கும் நீங்கள் பொறுப்பாக இருக்கவில்லையென நீங்கள் கூறுகிறீர்களா?
பதில்: வேறொருவர் அதனைச் செய்யும் போது நான் அதற்கு எவ்வாறு பொறுப்பாக இருக்க முடியும். முழுக் கட்டிடத் தொகுதியுமே எனது கட்டளையின் கீழ் இருக்கவில்லை.
கேள்வி: முகாமின் அந்தப் பகுதியில் என்ன இடம்பெற்றுக் கொண்டிருந்தது என்பதை அடிப்படையில் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
பதில்: இல்லை.
கேள்வி: இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. பெயர்களை உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டிருக்கவில்லையென பி.பி.சி. சிங்கள சேவைக்கு நீங்கள் கூறியிருந்தீர்கள். நீங்கள் எதனை அதன்மூலம் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
பதில்: இணைந்த தீர்வொன்றை தாங்கள் கண்டறிந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. மின்சாரக் கதிரை இல்லையெனவும் விசேட நீதிமன்றம் இல்லையெனவும் கூறப்படுகிறது. நாங்கள் சர்வதேச சமூகத்தின் இதயங்களை வென்றெடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
அவ்வாறாயின் இந்தக் குற்றச்சாட்டுகள் இப்போது வர முடியாது என்பதே எனது கேள்வியாகும். சகல விடயங்களுக்கும் தீர்வு காணப்படுவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது சொந்த அனுகூலங்களுக்காக கூற முடியும். ஆனால் ஐ.நா. இதுவரை எதற்கும் தீர்வு காணவில்லை. நீண்ட நடவடிக்கையாக இருக்மென நான் நினைக்கிறேன்.
கேள்வி: இலங்கை தனது பெயரை தூய்மைப்படுத்துமென நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள்?
பதில்: அரசாங்கம் அதனை செய்ய வேண்டுமென நான் கருதுகிறேன்.
கேள்வி: தங்களின் பெயர் எவ்வாறு தூய்மைப்படுத்தப்படும்?
பதில்: அதனை நான் செய்ய முடியாது. நான் ஐ.நா. அமர்வுகளுக்கு செல்வதில்லை.
கேள்வி: நீங்கள் சாட்சியமளிக்க விரும்புகிறீர்களா?
பதில்: எவராவது விசாரணை நடத்தினால் அல்லது எனக்கு எதிராக ஏதாவது விடயங்கள் நிரூபிக்கப்பட்டால் அவை குறித்து விசாரணை செய்ய வேண்டும். அதன் பின்னர் நான் சாட்சியத்தை வழங்க வேண்டியிருக்கும். அதன் பின்னர் நான் ஆதாரத்தை வழங்க வேண்டியிருக்கும். புகாரிட்டவர்களும் தமது சாட்சியத்தை வழங்க வேண்டியிருக்கும். எனது தரப்பு கதையை நான் அறிவேன்.
ஏனைய நாடுகளிலும் எமக்கெதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளன. எனக்கு எதிராக அவர்கள் ஏதாவது ஆதாரத்தை கொண்டுள்ளார்களா என்பதை நான் கேட்க வேண்டும். நான் குற்றவாளியாக கண்டறியப்படும் வரை நான் நிரபராதியே.
கேள்வி: உயர் நீதிமன்றத்தின் விசாரணையை நீங்கள் விரும்புகிறீர்களா?
பதில்: நாடு எந்தவொரு பொறிமுறையை ஏற்றுக் கொண்டாலும் அதற்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டும். நாங்கள் அழைக்கப்பட்டால் அந்த விசாரணைக்கு போக முடியாது என எம்மால் தெரிவிக்க முடியாது. யாவும் வரிசைப்படுத்தப்பட்டு விசாரணைப் படுத்தப்படுவது அவசியமாகும்.
கேள்வி: விசேட நீதிமன்றம் தொடர்பாக எதிர்ப்பு காணப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த நீதிமன்றம் போர்க்குற்றங்கள் தொடர்புபட்ட ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்தும் என அர்த்தப்படுகிறதே?
பதில்: விசேட நீதிமன்றம் என நீங்கள் எதனை கூறுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீதிமன்ற விடயத்தில் அவர்களே அதனைச் செய்ய வேண்டும். பிரச்சினை இல்லை. நாங்கள் விரும்புவது என்னவென்றால் நீதிமன்றம் ஒன்றைக் கொண்டிருத்தல் அல்லது விடயங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
கேள்வி: சித்திரவதை, காணாமல் போதல், வல்லுறவு, பாலியல் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிக்கிறீர்களா? அத்தகைய குற்றங்கள் இடம்பெற்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? உதாரணமாக பாதுகாப்பு அமைச்சு இசைப்பிரியா போரின் போது கொல்லப்பட்டது தொடர்பாக பதிவு செய்துள்ளது. ஆனால் ஒளிநாடா பிரதிமை ஒன்று உள்ளது. அது வேறுவிதமாக காண்பிக்கிறது. இசைப்பிரியாவும் உயிருடன் பிரிக்கப்பட்டு பாலியல் ரீதியாக தாக்குதலுக்குள்ளாகி அவர்களின் அந்தரங்க உறுப்புகள் முடமாக்கப்பட்டு இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஒளிநாடா கூறுகிறதே?
பதில்: நான் அந்த ஒளிநாடாக்களைப் பார்த்துள்ளேன். ஆனால் இந்தச் சம்பவம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. கடைசி நிமிடத்தில் போர் முனையில் அந்த விடயங்கள் சில சமயம் இடம்பெற்றிருக்கக்கூடுமென நான் நினைக்கிறேன். தனிப்பட்ட ரீதியில் நான் இந்த விடயங்களை அறிந்திருக்கவில்லை.
கேள்வி: ஒளிநாடா பிரதிமைகளை நீங்கள் பார்த்தபோது அது தொடர்பான தங்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?
பதில்: ஒளிநாடாவின் உண்மைத் தன்மை குறித்து என்னால் உறுதிப்படுத்த முடியாது. என்னைப் பற்றிய செய்திகளிலும் அதே ஒளிநாடா இப்போது உள்ளது.
கேள்வி: ஏன் நீங்கள் அது உண்மையா பொய்யா என்பது குறித்து விசாரணை செய்யவில்லை?
பதில்: இல்லை, நாங்கள் அதனை செய்தோம் என நான் நினைக்கவில்லை.