அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் வழிபட்டு தலம் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துல்கொள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட யூதர்கள் வழிபட்டு தலத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது அங்குப் புகுந்த 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தர்வகள் மீது கண்மூடித்ததானமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனை எதிர்பாராத அங்கிருந்த மக்கள் ஓடி ஒளிந்தனர். உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் கைது செய்தனர்.
கன நொடியில் நடந்த கண்மூடித்ததானமான இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி எட்டு ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு போலீஸார் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “அவர் யாரெனத் தெரியவில்லை. திடீரென எங்கள் மீது இப்படி கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளார்.
துப்பாக்கியால் சுடும் போது `யூதர்கள் சாக வேண்டும்… எங்கள் மக்கள் வாழ வேண்டும்’ எனக் கூறியபடியே சுட்டார். கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது” எனச் சோகமாக கூறினர்.
போலீஸார் கூறுகையில், “துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெயர் ராபர்ட் பாவர்ஸ். வெறுப்புணர்வால் இதனைச் செய்திருக்கலாம். அவர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார் அதிபர் ட்ரம்ப். “இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இனியும் இனவெறி, மதவெறி தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் அவ்வப்போது இனவெறி, நிற வெறி பிரச்னை எழுந்து பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் மீண்டும் அதுபோன்று நிகழ்ந்திருப்பது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.