திரைப்பட நடிகர் ரஜினி அவரது ரசிகர்களை கடந்த சில நாட்களாக தனக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வந்தார்.
அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமே இந்நிகழ்ச்சியென ரஜினியின் ரசிகர்கள் கூறிவந்ததோடு அவரை அரசியலுக்கு வர வேண்டுமெனவும் அழைத்தனர்.
தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை கூறிவந்த நிலையில், அவரது ரசிகர்கள் சந்திப்பின் இறுதி நாளான இன்று “தமிழகத்தில் நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப்போய் இருப்பதாக குற்றம் சாட்டினார்”.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த ‘நாம் தமிழர்’ ஒருங்கிணைப்பாளர் சீமான் “ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய தேவையில்லை, தமிழருக்கான தேவைகளைப் புரிந்து அவர்களுக்கான அரசியலை முன்னெடுக்க தமிழருக்கே தெரியும், ரஜினி வேண்டுமானால் அமைப்பு ஏதேனும் துவக்கி நற்செயல்கள் செய்யட்டுமெனவும்,
ரஜினி நேர்மையானவர்கள் என்கிறார்கள் ஆனால் அவர் நேர்மையானவர் அல்ல,இதுவரை தான் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையிலா ஊதியம் பெற்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து,சில படங்களில் நடித்துவிட்டதனாலாயே மக்களை ஆளும் தகுதி வந்துவிடுகிறதா?வென கேள்வியெழுப்பியதோடு மட்டுமன்றி, கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினி “எங்கள் மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும்,ஆனால் எங்களை ஆள நினைக்க கூடாதென” மிகக் காட்டமாக தனது கருத்துக்களை செய்தியாளர்களிடத்தில் முன்வைத்தார்.