பாலு மகேந்திராவால் அறிமுகமான, , குணசித்திர வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தார். சற்று இடைவேளைக்கு பின், தற்போது, காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். காலா பட அனுபவங்கள் குறித்து, நம்முடன் அவர் பேசியதிலிருந்து…
* காலா பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
கடவுளுக்கு தான் தெரியும். திடீரென ஒரு நாள் போன் வந்தது. ரஜினி கூட நடிக்க வேண்டும் என கேட்டனர். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.
* ரஜினிக்கு மனைவியாக நடித்தது பற்றி?
முதல் நாள், புதுமுகம் போல் கை, கால் எல்லாம் நடுங்கியது. போகப்போக தைரியம் வந்து விட்டது. எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். ரஜினி சாரும் தெலுங்கு நன்றாக பேசுவார். படப்பிடிப்பில் எனக்கு ரொம்பவே ஊக்கமாக இருந்தார்.
மனம் திறந்து அனைவரையும் பாராட்டுவார். அவரிடம் எனக்கு பிடித்த குணமே, இது தான். எங்க இரண்டு பேர், கெமிஸ்ட்ரியை பற்றி ரசிகர்கள் தான் கூற வேண்டும்.
* தங்கச்சிலை… உங்களுக்காகவே எழுதப்பட்ட பாடலா?
இதற்கு, அந்த பாடல் ஆசிரியருக்கு தான், நன்றி சொல்ல வேண்டும். ரஜினி சார் வாயால், என்னை தங்கச்சிலையே என கூப்பிடும் போது, பயங்கர மகிழ்ச்சியாக இருந்தது. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தான், நடனம் ஆட சொல்லிக் கொடுத்தார். ரஜினி சார், இளம் நடிகர்களைப் போல், உற்சாகமாக பயிற்சி எடுத்து ஆடினார்.
* ரஜினியுடன் நடிக்கும் போது கற்ற விஷயங்கள்?
படப்பிடிப்புக்கு, புதுமுக நடிகர் போலவே வருவார். அவருக்கு உள்ள அனுபவத்திற்கு, இப்போதும் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைப்பார். தனக்கு எல்லாம் தெரியும் என, ஒரு நாளும் அவர் நினைத்தது இல்லை. அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளேன்.
* காலா படத்தை பற்றி?
இது அரசியல் படம் இல்லை. படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும், மக்கள் கண்டிப்பாக ரசிப்பர். சமூக அக்கறையுடன், மக்கள் நலன் பேசும் படமே காலா. சினிமாவுக்கு வந்து, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை சினிமாவை நான் சீரியசாக பார்க்கவில்லை. ஆனால் காலா தான், என்னை மாற்றியுள்ளது.
* இனி அடுத்தடுத்து படங்களில் நடிப்பீர்களா?
எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரும் ஊடகத்துறையில் தான் இருக்கிறார். காலாவுக்கு பின், பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.
* ரஜினி ஆதரவாக தங்கச்சிலை பிரசாரம் செய்யுமா?
சமுதாயத்திற்கு யார் நல்லது செய்ய வந்தாலும், என் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். என்னால் பணம் செலவு செய்ய முடியாது. நல்ல விஷயத்திற்கு என் ஆதரவு உண்டு. முதலில் பெண்களை, மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். தாய், மனைவி, தங்கை என அனைவரும் குடும்பமாக பார்க்கும் சூழலை, இங்கே உருவாக்க வேண்டும்.
* நன்றி சொல்ல விரும்பும் நபர் யார்?
எனக்கு தமிழ் சினிமாவில், விசிட்டிங் கார்டு கொடுத்த பாலு மகேந்திரா சாரை இன்றும் நினைத்து பார்க்கிறேன். அவருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன்.
* தயாரிப்பாளர் தனுஷ் பற்றி?
செட்டில் ஒரு முறை பார்த்தேன். பேசினேன். சுள்ளான் படத்தில் தனுஷ் எனக்கு தம்பியாக நடித்தார் .இப்போதும் அதே தம்பியாக பார்க்கிறேன்.
எந்த மாற்றமும் அவரிடம் இல்லை. அவ்வளவு இயல்பானவர் .தமிழ் சினிமாவே கௌரவப்படும் அளவு அவர் வளர்ச்சி இருக்கிறது..பெருமையும் கூட.
*காலாவில் நிறைய நட்சத்திர கூட்டம் இருக்கிறதே?
படப்பிடிப்பு தளமே கல கல என்று இருக்கும்..கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பு நடக்கும் . படப்பிடிப்பு முன்பே ஒருவருக்கு ஒருவர் பழக வேண்டும் என்பதால் ஒர்க்ஷாப் வைத்து 15 நாட்கள் நடிப்பு பயிற்சி கொடுத்தனர்.
எல்லோரும் நன்கு பழகினோம். படப்பிடிப்பு முடிந்ததும் ஒருவித கஷ்டமான சூழல் வந்தது. அந்த அளவு மொத்த படக்குழுவும் ஒற்றுமை.