ஞானசார தேரரின் கைது பொதுபல சேனா அமைப்பினை மேலும் பலமான சக்தியாக மாற்றியுள்ளது. ஒரு சிறிய அமைப்பாக செயற் பட்ட நாம் இனிமேல் மிகப்பெரிய அமைப்பாக மாற்றம் பெறுவதை எவராலும் தடுக்க முடியாது. பெளத்த காவியின் மீது கைவைத்ததன் விளைவை அரசாங்கம் அனுபவிக்க நேரும் என்று அந்த அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம்களுக்கு கொடுத்த பரிசே ஞானசார தேரரின் கைதா கும் எனவும் அவ்வமைப்பினர் சுட்டிக்காட் டினர். பொதுபல சேனா அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில் அவ்வமைப்பினர் இக் கருத்துக்களை முன்வைத்தனர்.
இது குறித்து பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதானந்தனிய நந்த தேரர் கூறுகையில்,
ரமழான்…
நாட்டின் அமைதிக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பிய எமது அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைதின் பின்னணியில் பொய்யான காரணிகளை ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இன்று முஸ்லிம் மக்களின் ரமழான் பண்டிகை நாளாகும்.
அவர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். அதேபோல் அவர்களுக்கு அரசாங்கம் நல்லதொரு பரிசையும் கொடுத்துள்ளது.
நாட்டில் ஊழல், கொள்ளை, கொலை என்ற பாரிய தவறுகளை செய்த பல அரசியல்வாதிகள் இன்றும் சுதந்தரமாக நடமாடி வருகின்றனர்.
இனவாதத்தை பரப்பும், இனவாதத்தை போசிக்கும், பல குற்றங்களை செய்யும், காடுகளை அழிக்கும், சட்டவிரோத குடியேற்றங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு எதிராக அரசாங்கமோ, நீதி மன்றமோ எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை. அதேபோல் மத்திய வங்கி விவகாரத்தில் மிகப்பெரிய ஊழலை செய்த நபர்களை கைது செய்ததாகவோ அல்லது அதற்கான முயற்சிகளை எடுத்ததாகவோ எமக்கு தெரியவில்லை.
ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஒரு சாதாரண சம்பவத்தை கருத்தில் கொண்டு இன்று ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றவியல் குற்றத்தின் கீழான எந்த குற்றங்களையும் அவர் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.
இங்கு மாகல்கந்தே சுத்தத தேரர் கருத்து கூறுகையில்,
ஞானசார தேரர் ஒரு சிங்கம் போன்றவர். அவர் சிறையில் அரைக்கால்சட்டை அணிவதை பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அவருக்கு ஒருபோதும் சிறை அச்சம் இருந்ததில்லை.
இந்த அரசாங்கம் நாட்டின் பெளத்த காவிகளின் மீது கை வைத்துவிட்டது. இதற்கான பலனை அரசாங்கம் அனுபவிக்கும். இன்னும் சிறிது காலத்தில் தேர்தல் வரப்போகின்றது. அதில் எமது பதிலடி என்ன என்பதை பிரதமர் ரணிலும், ஜனாதிபதி மைத்திரியும் அனுபவிப்பார்கள்.
இன்று புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு அமைய பெளத்த பிக்குகளை சிறைப்பிடிக்கும் கொள்கை உருவாகியுள்ளது. இந்த நாட்டின் பெளத்த சிங்கள சக்திகள் உள்ளன.
இந்த சக்திகள் இன்றும் அமைதிகாக உள்ளன. ஆனால் என்றும் அமைதியாக இருக்கப்போவதில்லை. ஞானசார தேருக்கு பல்வேறு தரப்பிலும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது, சிறையிலும் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே சிறையில் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற அச்சம் எமக்கு உள்ளது. அவரை பாதுகாக்க வேண்டும்.
இன்று ஞானசார தேருக்கு நேர்ந்த கதி நாளை இன்னொரு தேரருக்கும் நடக்கும். ஞானசார தேரர் மீது எடுத்த சட்ட நடவடிக்கையை ஏன் அர்ஜுன மகேந்தரன் விடயத்தில் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.
இந்த நாட்டில் பெளத்த பிக்குகள் மீது மட்டும் ஏன் கை வைக்கின்றீர்கள். மைத்திரி-ரணில் ஆகிய இருவரும் தைரியம் இல்லாத தலைமைகள். கள்வர்களை, குற்றவாளிகளை தண்டிக்க தைரியம் இல்லாது சிங்கள கொள்கையின் மீது கை வைத்துவிட்டனர்.
ஞானசாரர் என்ற நபரை பார்க்க வேண்டாம். அவரது கொள்கையை பாருங்கள். அவர் என்ன கூறுகின்றார் என்பதை பாருங்கள்.
அது நாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை பார்க்க வேண்டும். அந்த கொள்கை பலமான கொள்கையாகும். இது நாட்டின் ஒற்றுமைக்கான கொள்கையாகும் . சிங்கள பௌத்தத்தை பாதுகாக்கும் கொள்கையாகும்.
இந்த நாட்டில் இராணுவத்தினர் தண்டிக்கப்படுகின்றனர். அவர்களின் சலுகைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக ஞானசார தேரர் குரல் கொடுத்தார்.
நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்தவரது வாயை மூடிவிடீர்கள். இது இப்படியே முடிந்துவிடப் போவதில்லை. அடுத்த கட்ட போராட்டம் தொடரும். சகல பெளத்த அமைப்புகளையும் இணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஒரு அமைப்பாக இருந்த நாம் இனிமேல் பெளத்த அமைப்புகளை இணைத்த பாரிய கூட்டணி அமைப்பாக மாற்றம் பெறுவோம்.
அதன் மூலமாக எமது அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அதனை எவராலும் தடுக்க முடியாது. ரமழான் பண்டிக்கையில் முஸ்லிம்களுக்கு அரசாங்கம் கொடுத்த பரிசே இந்த கைதாகும். எமக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தனை காலமாக அமைத்தி காத்த அரசாங்கம் இப்போது முஸ்லிம் மக்களுக்காக இந்த கைதை செய்துள்ளது. அதேபோல் அடுத்த தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை தக்கவைக்கவும் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளது.
மிகவும் மோசமான வகையில் இந்த சம்பவங்கள் அமைந்துள்ளன. இந்த நாட்டில் என்ன இடம்பெறுகின்றது என்பது எமக்குத் தெரியவில்லை. நாட்டில் ஏன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்து எமக்கு தெரியவில்லை.
அரசாங்கம் தமக்கு எதிரான சக்திகளை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இதனை கையாண்டுள்ளது. இது நாட்டில் உள்ள சகல பிக்குகளுக்கும் ஒரு மரண அடியாகும் எனக் குறிப்பிட்டார்.
டிலந்த விதானகே
பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே கூறுகையில்,
எம்மை மேலும் பலப்படுத்தவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. சமூகத்தின் பிழைகள் எமது கண்களுக்கு தென்படும் போது நாம் செயற்படவேண்டிய தேவை உள்ளது. அதையே ஞானசார தேரர் செய்துள்ளார்.
இன்று நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை வழங்கியுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ அந்த சட்டத்தை மதிக்க வேண்டிய தேவை உள்ளது. நாம் விமர்சிக்கவும் விரும்பவில்லை.
எனினும் இந்த சட்ட நகர்வுகளில் எமக்கு சந்தேகம் எழுகின்றது. சாதாரண ஒரு குற்றத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை எவ்வாறு வழங்கப்பட்டது. இதில் சந்தேகம் உள்ளது.
இதற்கு முன்னர் தேரர் மத மாற்றத்திற்கு எதிரான பலமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார், பிரிவினைவாத கொள்கைக்கு எதிராக போராடியவர். இவற்றை ஏற்றுகொள்ளாத ஒரு அரசாங்கம் இன்று ஆட்சிக்கு வந்துள்ளது.
அதனால் தான் எம்மை சிறையில் அடைப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தனர். இப்போது இடம்பெறும் அனைத்து சம்பவங்களும் சர்வதேச அழுத்தத்தின் காரணத்தினாலேயே நடைபெறுகின்றது.
சர்வதேசம் எம்மை தண்டிக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதுவே இன்று இடம்பெற்று வருகின்றது. இதுவரை நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை இதற்கும் அப்பால் கொண்டு சென்று பாரிய அமைப்பாக நாம் ஒன்றினைவோம் என்ற வாக்குறுதியை கொடுப்போம்.
ஞானசார தேரர் விடுதலையாக வேண்டும். அதற்கான போராட்டம் ஆரம்பிக்கும். அரசாங்கம் நேரடியாக பிக்குகளுக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலே இதுவாகும்.
ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதியை சந்திக்கவோ அவர்களிடம் மன்னிப்பு கேட்கவோ தயாராக இல்லை. எம்மீது தவறு இல்லாத நிலையில் நாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சம்பவம் திட்டமிட்ட சதியாகும்.
அது எமக்கு நன்றாக தெரிகின்றது. ஏனைய அரசியல்வாதிகளிடம் வளையும் சட்டம் ஞானசார தேரர் விடத்தில் நேரடியாக செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.