காதல் என்ற பெயரில் சிறுவர் பூங்காவில் சில்மிஷம் செய்த காதலர்களைப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கி விடுவித்தனர்.
மதுரையில் திருப்பரங்குன்றம் பூங்கா, ராஜாஜி சிறுவர் பூங்கா, அண்ணா நூற்றாண்டுப் பூங்கா, அழகர்கோயில், மன்னர் திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காதல் என்று சொல்லிக்கொண்டு காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று மதுரை காந்தி மியூசியம் எதிரே உள்ள ராஜாஜி சிறுவர் பூங்காவில் காவல் துறையினர் திடீர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
காதல் ஜோடிகளை பிடித்துச் செல்லும் போலீஸ்
அப்போது, பொதுமக்கள் முகம்சுழிக்கும் விதமாக நடந்துகொண்ட 15-க்கும் மேற்பட்ட ஜோடிகளை காவல் துறையினர் பிடித்து வாகனத்தில் ஏற்றி, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
பின்னர், பெற்றோர்களுக்குத் தகவல்கொடுத்து வரவழைத்தனர். பின்னர், அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, இரவு 12.30 மணிக்கு மேல் பெற்றோர்களுடன் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறை தெரிவிக்கும்போது, “காதல் என்ற பெயரில் சிலர் பூங்கா, கோயில் பகுதிகளில் தவறான செயலில் ஈடுபட்டுவருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்காக தற்போது நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என்றனர்.