இது பெங்களூரு. போயஸ் கார்டன் இல்லை. இது பரப்பன அக்ரஹாரா ஜெயில் என்பதை வெளிச்சம் போட்டதோடு. சசிகலாவுக்குச் சலுகை காட்டிய கிச்சின் விவகாரங்களை எல்லாம் வீடியோ எடுத்து ரகசியம் காத்து வருகிறார் கர்நாடக பெண் டி.ஐ.ஜி. யான துணிச்சல்மிக்க தில்லான “தில்”
இந்த வீடியோ விவகாரம் வெளியானால் ஆளும் காங்கிரஸ், அரசுக்கு பெருத்த அடிவிழும், தூள்பறக்கும் என்று பா.ஜ.க. வும் காத்து இருக்கிறது.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருப்பவர்தான் ரூபா மனிஷ் மவுட்கில். ஜூலை 10 ஆம் திகதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்தார்.
அப்போது மொபைல் மற்றும் கேன்டிட் கமராக்களில் பெண்கள் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பகுதி, ஆண்கள் சிறையில் முத்திரைத்தாள் மோசடி வழக்கின் குற்றவாளியான தெல்கி அடைக்கப்பட்டுள்ள செல் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களைக் காவலர் ஒருவரின் உதவியுடன் படம் பிடித்திருக்கிறார்.
இதன் பின் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.யான சத்திய நாராயணராவுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் சிறையில் சசிகலாவுக்குத் தனிச்சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் (சத்திய நாராயணராவ்) இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாகத் தனக்குத் தகவல் வந்திருப்பதாகவும் எனவே இந்த விவகாரத்தின் மேல் உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென்று அவரிடம் கேட்டிருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் இந்த விஷயம் உலகம் முழுக்கப் பரவி பரபரப்பின் உச்சம் தொட்டது. சத்திய நாராயணராவ் அதிர்ந்து போனார்.
இந்த நிலையில் மறுநாள் காலை தன் அலுவலகத்தில் மீடியாவின் முன்னிலையில் ரூபா தனக்கு அனுப்பிய கடிதக் கவரைப் பிரித்தவர் அதில் ரூபா தன் மீதும் சிறைத்துறை மீதும் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுத்தவர், நான் மிகவும் நேர்மையான அரசுப் பணியாளர்.
எனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரி ரூபா எனக்கு அறிக்கை அனுப்பும் முன் அது மீடியாவில் வெளியானது எப்படி? இதிலிருந்தே தெரியவில்லையா இது திட்டமிட்ட நாடகம். பொய்க் குற்றச்சாட்டு என்று பொங்கினார்.
இந்நிலையில் யார் இந்தத் துணிச்சல்மிக்க தில்லான தில்ரூபா என்று அகிலமே ஆச்சரியப்படுகிறது. ரூபா கர்நாடக மாநிலம் தாவணகெரெவைச் சேர்ந்தவர்.
2000 ஆம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ். பணியில் இணைந்தவர். இவரது கணவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பெயர் மனிஷ் மவுட்கில். கர்நாடகாவில் ஊரக குடிநீர் விநியோகத்துறையின் கமிஷனராக இருக்கிறார்.
கர்நாடகாவில் கனிம வள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை, ஹூப்ளி வன்முறையின் போது உமாபாரதியைக்கைது செய்தது, எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதியில்லாமல் இடம்பெற்ற வாகனங்களை நீக்கியது, மைசூரு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹாவுடன் பேஸ்புக்கில் விவாதம் நடத்தி அவரை வென்றது, கிரைம் பிராஞ்சில் பணியாற்றியபோது உயர் அதிகாரிகளிடம் குறுக்குக் கேள்வி கேட்டுக் குடைவது என்று ரூபாவின் கடமையுணர்வுப் பின்னணி பலராலும் பாராட்டத்தக்க பலமாகவே இருக்கிறது.
கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி.யாக கடந்த ஜூன் இறுதியில் பதவியேற்ற ரூபாதான் இப்போது இந்த அதிரடிகளை அஞ்சா நெஞ்சத்துடன் அரங்கேற்றியிருக்கிறார்.
தென்னிந்தியாவில் அரசுத் துறையில் லஞ்சம் பேயாட்டம் போடும் முதல் மாநிலமாகக் கர்நாடக இருப்பது அகில இந்தியாவுக்குமே தெரிந்த விஷயம்.
அதிலும் கர்நாடக சிறையில் இது உச்சமாம். சசிகலாவை சந்திப்பதற்காக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் உள்ளிட்ட முக்கியமான மனிதர்கள் முன்பு இங்கே வருவதுண்டு.
அப்போது அவர்களை விரட்டி விரட்டி கெஞ்சிக் கூத்தாடிப் பணத்தைக் கறப்பார்கள் சிறைக்காவலர்கள், பணியாளர்கள். துவக்கத்தில் ஐநூறுகளையும் ரெண்டாயிரங்களையும் அள்ளிக் கொடுத்த அமைச்சர்கள் ஒரு கட்டத்தில் இவர்களைப் பார்த்துத் தெறித்து அலறிவிட்டார்கள் என்று நக்கலாக சிரிக்கிறார் இந்த சிறையைத் தொடர்ந்து கவனிக்கும் பெங்களூரு சீனியர் நிருபர் ஒருவர்.
வி.ஐ.பி. கைதிகளை ஸ்பெஷலாகக் கவனிக்க சிறைக்குள்ளிருக்கும் கைதிகளைக் கொண்டே ஒரு டீமை உருவாக்கியிருக்கிறார்களாம் அதிகாரிகள்.
அந்த வகையில் சிவராஜ், ராகேஷ், ராமண்ணா, ஆனந்த் உள்ளிட்ட சுமார் பத்து கைதிகளடங்கிய பட்டாளம் ஒன்று சிறைக்குள் வி.ஐ.பி. சேவைக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் தான் சசிகலாவுக்கு கிச்சினிலிருந்து உணவு எடுத்து வருவது, உணவுகளைப் பரிமாறுவது, சுதாகரனுக்கு உணவு கொண்டு செல்வது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.
இவர்களுக்கு சசி வட்டாரத்திலிருந்து செம கவனிப்பு என்கிறார்கள் சிறையில் பணிபுரியும் நேர்மையான காவலர்கள், இவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்துத்தான் ஒரு ரகசிய டீமை உருவாக்கி அவர்களிடமிருக்கும் மொபைல் மூலமாகவும் சிறைக்குள் அன்றாடம் நடக்கும் அத்து மீறல்களையும் வீடியோ ஆதாரமாக்கி இருக்கிறார் ரூபா.
அவர்கள் மேலும் பேசுகையில்;
முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிக்கின தெல்கியோட அறையில் மெகா சைஸ் எல்.இ.டி. டி.வி. மினரல் வாட்டர், கட்டில், மெத்தை, கூலர் பேன் அப்படின்னு எல்லாமே இருக்கிறதை டி.ஐ.ஜி. மேடத்தின் உத்தரவின் பேரில் எங்கள் டீமினால் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ இந்த சிறையோட அவலத்தை உடைச்சுக் காட்டியிருக்கிறது.
மேற்படி பொருட்கள் எல்லாம் சிறைக்குள்ளே அதிகாரிகளின் கார்கள் மூலமாகவோ, அல்லது சிறைக்குள் ரேஷன் பொருட்களை கொண்டு வரும் லாறிகள் மூலமாகவோ மறைவா வருது.
சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருக்கிற சிறப்பு சலுகைகளையும் எங்க டி.ஐ.ஜி. மேடத்தால் உருவாக்கப்பட்ட லேடி பொலிம் டீம் வீடியோ எடுத்திருக்கிறாங்கன்னு உறுதியாக நம்புகிறோம். அது தேவைப்படும் போது வெளியிடப்படலாம் என்றார்கள்.
பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி, அரசுத்துறையில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாகப் பெரும் போர் தொடுப்பவர் இவர்.
சசிகலா, சுதாகரன் ஆகியோரைச் சிறையில் தினகரன், திவாகரன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து சந்திப்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி சில தகவல்களை வாங்கியிருக்கிறார்.
சில ஆவணங்களைக் காட்டிப் பேசிய அவர், விசாரணைக் கைதிகளை அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வாரத்துக்கு ஒரு முறை சந்திக்கலாம்.
தண்டனைக் கைதிகளைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அதாவது மாதத்துக்கு இருமுறை மட்டுமே சந்திக்க முடியும். ஆனால் சசிகலாவைக் கிட்டத்தட்ட தினமும் அவருக்கு வேண்டியவர்கள் சந்திக்கிறார்கள். பரப்பன சிறையின் அலுவலகமே இந்த விபரங்களை ஆதாரபூர்வமாகத் தந்திருக்கிறது.
பெப்ரவரி 16 முதல் ஜூன் 12 வரையில் எந்தெந்த நாட்களில் யார் யார் எவ்வளவு மணி நேரம் இப்படி சந்திக்கிறார்கள் என்று லிஸ்ட் கேட்டு வாங்கியிருக்கிறேன்.
(அதைக் காட்டுகிறார்) அதன்படி வெறும் 117 நாட்களில் மொத்தம் 32 சந்திப்புகள் நிகழ்ந்திருக்கிறது. 71 பேர் சந்தித்திக்கிறார்கள். ஆனால் கர்நாடகச் சிறைத் துறை விதிகளின்படி இத்தனை நாட்களில் வெறும் எட்டு விசிட் மட்டுமே நடந்திருக்க அனுமதி இருக்கிறது.
சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியைச் சந்தித்தவர்களின் பட்டியலில் சசியைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கிறது.
பெப்ரவரி மாதத்தில் 16, 17, 18, 20, 22, 23, 28 என்று வெகு நெருக்கமான நாட்களில் சந்திப்பு நடந்திருக்கிறது. ஜூன் 9 ஆம் திகதி மட்டும் ஒரே நாளில் சசியையும் இளவரசியையும் 7 பேர் சந்தித்திருக்கிறார்கள்.
பரப்பன அக்ரஹாராவின் சிறை விதிகள் மிக மோசமாக மீறப்பட்டிருப்பது சிறைத்துறை கொடுத்திருக்கும் தகவலின் வாயிலாகவே தெரியவருகிறது என்று தெரிவித்தார் நரசிம்ம மூர்த்தி.
இவருக்குக்கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் ரூபா கடும் நடவடிக்கை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது பெங்களூ போயஸ் கார்டன் இல்லை. என்றுசொல்லி ரூபா எடுத்த நடவடிக்கையை ஆளும் கட்சி ரசிக்கவில்லை.
இது குறித்து ஆளும் கட்சி தரப்பில் சிலரிடம் பேசியபோது சிறைத் துறையில் யாருக்கும் சலுகை காட்டுவதில்லை. ஆனால் சில இடங்களில் கீழ் நிலையில் இருக்கும் காவலர்களின் லஞ்சத்தால் அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக நடந்து விடுகிறது.
டி.ஐ.ஜி. ரூபா கிளப்பி இருக்கும் விவகாரத்தில் மாநில முதல்வர் சித்தாராமையா விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.
இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க. கிளப்பிய பூதம் என்றே தோன்றுகிறது. அதனால்தான் ரூபாவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவுக் குரல் கொடுக்கிறார்கள்.
அது மட்டுமின்றி புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியும் ரூபாவைப் பாராட்டித் தள்ளுகிறார். எப்படி இருந்தாலும் உண்மையை வெளிக்கொண்டுவர ஆளும் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்கிறார்கள். சரி பொறுத்திருந்து தான் பார்ப்போமே?
மிகப் பெரிய முயற்சிக்குப் பின் டி.ஐ.ஜி. ரூபாவிடம் சில நிமிடங்கள் பேசியபோது;
நீங்கள் கிளப்பியி ருக்கும் புயல், பாரத தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறதே?
புயல் கிளப்பிய தாகப் பெரிதுபடுத்த வேண்டாம். யதார்த்தத்தில் சிறையில் நடக்கும் முறைகேடு களை ஒரு அதிகாரி யாகக் கண்டு பிடித்து சுட்டிக் காட்டியிருக்கிறேன். நான் என் அதிகாரத்துக்கு உட்பட்டு மட்டுமே செயற்பட்டிருக்கிறேன்!
சிறைத் துறை டி.ஜி.பி. சமீபத்தில் உங்களுக்கு மெமோ கொடுத்ததுதான் நீங்கள் இந்தக் கலகத்தைக் கிளப்பக் காரணம் என்கிறார்களே?
அபத்தமான குற்றச்சாட்டு, சிறைக்குள் நிகழ்வதாக நான் சுட்டிக்காட்டும் முறைகேடுகளில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதை நேர்மையாக விசாரித்தாலே அவை விளங்கிடுமே.
சிறையில் நடந்த ஒன்பது விதமான முறைகேடுகளில் 8 முறைகேடுகளுக்கு ஆதாரத்துடன் அவற்றைச் சுட்டிக்காட்டத் துவங்கினேன். என் வார்த்தைகள் சத்தியமானவை!
சசிகலாவின் அறையில் எடுக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் அழிந்தது எப்படி?
கேன்டி கமரா மூலமாக எடுக்கப்பட்ட வீடியோ அது. அதை சிறை அலுவலகத்தில் கொடுத்து டவுன்லோடு செய்து பென்டிரைவில் அப்லோடு செய்து வைக்கச் சொன்னேன்.
ஆனால் அந்த வீடியோவே அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் சிறையில் 7 மற்றும் 8 ஆவது பகுதியில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளும் அழிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. செய்தது யாரென்று விசாரிப்போம் என்று முடித்துக் கொண்டார்.
சிறைக்குள் இருக்கும் சி.சி.டி.வி. கமராவில் பதிவாகி இருக்கும் ஆதாரங்களை திட்டமிட்டு யாரோ அழித்து இருக்கலாம்.
ஆனால் தனது டீம் மூலம் எடுத்த வீடியோ ஆதாரங்களை ரூபா பத்திரப்படுத்தி ரகசியமாக வைத்திருக்கிறாராம். தேவைப்படும் பட்சத்தில் விரைவில் அதை வெளியிடுவார் என்றே சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்கள்: ஷண்