பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன பகுதியில் அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம் முரண்பட்டு வருகின்றமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.
ஏற்பட்டுள்ள இப் பதற்றநிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பிரதேசத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு சென்றுள்ள ஞானசார தேரர் உட்பட்ட பொதுபலசேனா அமைப்பினர் மங்களராமய ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் கரடியனாறு பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர்.
விடயத்தை அறிந்த பொலிஸார் பொதுபலசேனா அமைப்பினரை குறித்த பகுதிக்குள் நுழைய விடாமல் தடுப்புக் காவலொன்றை அமைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதிக்குள் பொதுபலசேனா அமைப்பினரை உள்நுழைய விடுமாறு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையால் குறித்த பகுதிக்குள் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி கூச்சலிடும் சுமனரத்ன தேரர்: வேடிக்கை பார்க்கும் பொலிஸார்
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்தால் அந்த பிரதேசத்தில் உள்ள சிங்கள இளைஞர்களை தூண்டிவிட்டுள்ள மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பொலிஸாரினால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி நின்று கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.
எனினும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான பொலிஸாரும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்தவாறு நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாரினால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி நிற்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூச்சலிட்டவாறு இனவாத கருத்துக்களையும் கூறுவதாக தெரியவந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றதுடன், பொலிஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.