மும்பை: மகாராஷ்டிரத்தில் விவசாயி ஒருவர் பாலில் குளித்துவிட்டு ஆடு மாடுகளையும் குளிப்பாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று மும்பை பால் பண்ணை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு லிட்டர் பாலை ரூ. 27-க்கு அரசு கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால் விவசாயிகளுக்கு வெறும் ரூ.17 மட்டுமே கிடைக்கிறது. லிட்டருக்கு ரூ 5 -ஐ நேரடி மானியமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கடந்த இரு தினங்களாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டரில் பாலை கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் சூறையாடப்பட்டன.
பால் பாக்கெட்டுகளை போராட்டக்காரர்கள் சாலைகளில் வீசி எறிந்தனர். இதனால் மாநிலத்தில் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் மாநில அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை.
இதையடுத்து சோலாப்பூர் மாவட்டம் மகால்வேதா நகரின் சாகர் லென்டேவா என்னும் இளைஞர் 35 லிட்டர் பாலில் குளித்தார். அத்துடன் தனது ஆடு மாடுகளை பாலில் குளிப்பாட்டி கவனத்தை ஈர்த்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகியது.