வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நாட்டினை பிரிக்க ஒருபோதும் எத்தனிக்கவில்லை மாறாக விடுதலைப்புலிகளே நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கப்பற்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் யாப்பானது சிலர் கூறுவதைப்போன்று 24 மணித்தியாலங்களுக்குள்ளோ அல்லது 3மாத காலத்திலோ செய்து முடிக்க இயலாது. மாறாக ஒரு பகுதியினருக்கு மாத்திரம் உதவும் வகையில் அரசியல் யாப்பினை உருவாக்க முடியாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் அது நாட்டினை அழிவுப்பாதையிலேயே இட்டுச்செல்லும்.
தற்போது தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் காலம் வந்துவிட்டது. இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையிலும் ஜனாதிபதி கால அவகாசத்தினை கோரியிருந்தார்.
அதேவேளை ஜனாதிபதி தற்போது ஆற்றிய உரையினை ஊடகங்கள் திரிவுபடுத்தி பிரசுரித்துள்ளது. உரையினை தனிப்பட்ட ரீதியில் கேட்டிருந்தேன் அதில் எந்தவொரு பிழையும் இல்லை. நாட்டில் உள்ள திணைக்களங்கள் தொடர்பில் குறைகள் காணப்படின் அதனை கூற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உரிமை உண்டு.
இவ்வாறு ஜனாதிபதியின் கூறுவதை கடந்த ஆட்சியில் ஊடகங்கள் திருவுபடுத்தி கூறியிருந்தால் அவர்கள் தற்போது காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள்.
சிறுசிறு தவறிழைத்தவர்களை தண்டிப்பதைவிட பாரிய குற்றமிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என அமைச்சர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சு பதவியில் இருக்கும் அமைச்சர்கள் தவறிழைத்திருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சியினை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. மஹிந்த ராஜபக்ஸ போன்றவர்கள் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் இருந்தால் நாட்டினை பிரதான இரு கட்சிகளும் சரியான பாதையில் நடத்தி செல்லும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.