வடமாகாண சபையில் சில அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்து தமிழ்ஈழம் கேட்டுப் போராடியவர்களுக்கு மாகாண சபையைக் கூட நடத்த முடியாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சிங்கள அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சில தமிழ் விமர்சகர்களும் அவ்வாறு கேள்வி எழுப்பியுளளனர்.
சிலருடைய வாதப்பிரதிவாதங்கள்
அதுமாத்திரமல்ல யாழ்ப்பாணத்தில் ஏதுவும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இடம்பெறும் வாள்வெட்டுக்கள், ஊர்ச்சண்டியர்கள் சிலரின் அடிதடி சண்டைகள், காதல் பிரச்சினைகள், விபச்சார விடுதிகள் இயங்குவது போன்ற பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றை தமிழச் சமூகத்தினுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையுடன் தொடர்புபடுத்தி இவர்களுக்கு எதற்கு தமிழஈழம், சமஸ்டி என்றெல்லாம் சிலர் அர்த்தமற்ற வாதங்களை தூண்டிவிடுகின்றனர்.
இங்கே கேள்வி என்னவென்றால் ஒரு சமூகத்தினுடைய இறைமை சார்ந்த அரசியல் உரிமைக் கோரிக்கைகளை அந்த சமூகத்தின் தனிப்பட்ட மனிதர்களின் நடவடிக்கை, மற்றும் பேச்சுக்களுடன் ஒப்பிடுவது எதற்காக?
மாகாண சபை முறை என்பது இனப்பிரச்சினைக்கான நிரந்த அரசியல் தீர்வல்ல. அதை தீர்வாக ஏற்றுக் கொள்ளவுமில்லை. ஆனாலும் துரதிஸ்டவசமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அது செயற்படுகின்றது.
அவ்வாறு இயங்குகின்றது என்பதற்காக அந்த மாகாண சபையைக்கூட ஒழுங்காக செயற்படுத்த முடியாதவர்கள் எவ்வாறு தமிழ்ஈழம், அல்லது சமஸ்டியை கேட்கின்றனர் என்ற கேள்வி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
70 ஆண்டுகாலம் போராட்டிய சமூகம்
30ஆண்டுகள் அஹிம்சை வழியிலும் அதற்கு அடுத்த 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்ட ஒரு சமூகம் அரசியல், கலாச்சார ஒழுங்கங்களை பேண வேண்டும் என்பது கட்டாயம்.
ஆனால் இரண்டு வகையான போராட்டங்களும் தோல்வி கண்ட நிலையில் அல்லது அழிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னரான காலங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தாமே தீர்மானிக்க வேண்டியவர்களாகவே தமிழச் சமூகம் இருக்கின்றது.
ஏனெனில் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தலைமைப் பொறுப்பை எற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த பணியை உரிய முறையில் செய்யவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இது.
இதன்காரணத்தினால்தான் மாகாண சபையில் அமைச்சர்கள் சிலரின் ஊழல் மோசடிகளும் சமூகச் சீரழிவுகளும் ஏற்படுவதாக கூறமுடியும்.
ஆனால் அவ்வாறான செயற்பாடுகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை ஒதுங்கியிருக்க முடியாது. முதமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைமையுடன் கருத்து முரண்பட்டிருப்பதும் மற்றுமொரு காரணம் எனலாம்.
தென்பகுதியில் இல்லையா?
சரி எவ்வாறாயினும் இந்த ஊழல் மோசடிகள் குறித்த பிரச்சினை மற்றும் கலாச்சார சீர்கேடுகள் பற்றி சுட்டிக்காட்டி, கிண்டலடித்து தமிழச் சமூகத்தின் அரசியல் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் நபர்கள் தென்பகுதியில் இடம்பெறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் கலாச்சார சீர்கேடுகள் பற்றி ஏன் கேள்வி எழுப்புவதில்லை?
யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏதும் நடந்துவிட்டால் அதனை பூதாகாரமாக மாற்றி இவர்களுக்கு எதற்கு அரசியல் உரிமை என்று கேள்வி எழுப்புவபர்கள் தென்பகுதியை நோக்கி அந்தக் கேள்விளை முன்வைப்பதில்லை?
தமிழ்ஈழம் கேட்டுப் போராடியவர்களுக்கு மாகாண சபையைக் கூட நடத்த முடியாதா என்று தெற்கு கேட்கின்றது என அமைச்சர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட நல்லாட்சியில் ஊழல் மோசடிகள் மலிந்துள்ளாதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர். அப்படியானால் சிங்களவர்களுக்கு எதற்கு அரசு என்று அமைச்சர் மனோ கணேசனால் கேட்க முடியுமா? மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய தனியான பொலிஸ் ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
எங்கு ஊழல் இல்லை?
நல்லாட்சியில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் கூட அங்கு விசாரணைக்கு சென்று வருகின்றனர். ஆகவே இவர்களுக்கு எதற்கு அரசு மீண்டும் பிரித்தானியாவிடம் கையளித்துவிட்டால் என்ன என்று யாரும் கேட்டால் அதற்கு என்ன பதில்?
இந்திய மத்திய அரசில் ஊழல், குஜராத் மாநிலத்தில் ஊழல், தமிழகத்தில் ஊழல், பாக்கிஸ்தானில் ஊழல், பங்களாதேசில் ஊழல், எங்கு ஊழல் இல்லை? ஆசிய நாடுகளில் அரசியல் பொருளாதார விடயங்களில் ஊழல் மோசடிகள், சதிப் புரட்சிகள் மலிந்துள்ளன.
இந்த நிலையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி விமர்சிக்கும் தென்பகுதி அரசியல்வாதிகள் முதலில் தங்களை திருத்திக் கொண்டு பேச வேண்டும்.
அதை துணிந்து சொல்லக்கூடிய தகுதி அமைச்சர் மனோ கணேசணுக்கு உண்டு. ஆகவே தமிழச் சமூகத்தின் இறைமை சார்ந்த அரசியல் உரிமைக் கோரிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதற்காக வடக்கு கிழக்கில் இடம்பெறும் ஊழல் மோடிகள் கலாச்சார சீர்கேடுகளை தூக்கிப் பிடித்து மலினப்படும் கேள்விகளை கேட்பதை தவிர்ப்பது அரசியல் நாகரீகமாகும்.
தென்பகுதியின் அவதானம்
வடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பதவி விலக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அந்த தனிப்பட்ட நபர்களின் செயற்பாடுகளை வைத்துக் கொண்டு தமிழச் சமூகமே இப்படித்தான் என்று வர்ணிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு எதுவுமே இல்லை.
எங்கே ஒரு சந்தாப்பம் கிடைக்கும் இந்த தமிழச் சமூகத்தின் அரசியல் உரிமைக் கோரிக்கையை தட்டிக் கழிக்க என்று தென்பகுதி பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதற்கு இவ்வாறான ஊழல் மோசடிகள், உள்ளுர் சண்டியர்களின் வாள்வெட்டு செயற்பாடுகளை பயன்படுத்தி, அதனை பெரிதுபடுத்தி இவர்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்றும் மத்திய அரசிடமே அதாவது கொழும்பில் சகல அதிகாரங்களும் இருந்தால் நல்லது என்ற கருத்துக்களை சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். அதற்கு சில தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் விமர்சகர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.
ஆயும் ஏந்திப் போரடிய சமூகம் ஒன்று கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் நியாயம் உண்டு. ஆனால் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டம் ஒன்றில் அதன் மூலமாக வசதி வாய்ப்புகளையும் அதேநேரம் சில தவறான பழக்க வழங்கங்களும் இளவயதுப் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றன.
தமிழச் சமூகத்தின் அரசியல் உரிமைக் கோரிக்கையை மலினப்படுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்ற சில நபர்கள் அவ்வாறான செயற்பாடுகளை தென்பகுதியின் ஆதரவுடன் ஊக்குவிக்கின்றனர்.
ஆகவே அவதானமாக இருக்க வேண்டியது தமிழச் சமூகமும்தான். சரியான அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அரசியல் செயன்முறைகள் அவ்வாறானவர்களின் தவறான போக்கிற்கு இடமளிக்கின்றன.
ஆகவே சாதாரண அரசியல் கட்சி செயற்பாடுகளை தவிர்த்து தேசிய இயக்கம் ஒன்றை உருவாக்கிச் செயற்படுவதன் மூலமே இவ்வாறான ஊழல் மோசடிகள், காலாச்சார அழிவுகள் மற்றும் அது குறித்த தென்பகுதி அரசியல்வாதிகள் ஆகியோரின் விமர்சனங்களை இல்லாமல் செய்யமுடியும்.
அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர்கள் சிலரின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கு அமைத்த தனியான விசாரணைக்குழு தனது பணியை செய்திருக்கின்றது.
இது வடக்கு கிழக்கிற்கு வெளியே உள்ள மாகாணங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையட்டும். ஊழலை வடமாகாண சபை மறைக்க முற்படவில்லை.
அ.நிக்ஸன்