தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்!
கடந்த வாரம் ( 21-09-2017) அரசியல் அமைப்புப் பேரவையின் வழிகாட்டுக் குழு தனது ஆலோசனைகளை மக்களின் கவனத்திற்கு, விவாதத்திற்கு முன்வைத்துள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே முதன்முறையாக மக்களின் விவாதத்திற்கு நாட்டின் அரசியல் அமைப்பு விடப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்தபோது பிரித்தானியர்கள் தாம் வரைந்த மக்களின் அபிப்பிராயம் பெறப்படாத சோல்பரி அரசியல் அமைப்பைக் கையளித்தார்கள்.
1972ம் ஆண்டு அமுலுக்கு வந்த முதலாவது குடியரசு யாப்பில் நாட்டின் பிரதான சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்படாததால் அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே. தமது பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள்.
அதனால் அந்த அரசியல் அமைப்பின் ஆயுட் காலம் 6 வருடங்களில் முடிவடைந்தது. 1978 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இன்றைய இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டில் 30 வருடகால ஆயுதப் போராட்டத்தினையும், ராணுவம் கலந்த ஜனாதிபதி ஆட்சிமுறைiயையும் தந்தது.
இரண்டாவது குடியரசு யாப்பு
தேசத்தில் நிகழ்ந்த மிக மோசமான ஆட்சிக் காலமாக ஐ தே கட்சியால் தரப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நாட்டின் பிரதான தேசிய இனமான தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் உயிர்களை இழந்தும், உடமைகளை இழந்தும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் அகதிகளானார்கள்.
இதனால் தேசிய இனங்களிடையே பிளவுகள், ஜனநாயக நிறுவனங்கள் ஊழல் மையங்களாக மாறியமை, தேர்தல் முறைகள் குடும்ப ஆட்சியைத் தோற்றுவித்தமை, ராணுவம் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியமை என நாட்டின் அரசியல் தலைவிதி தலைகீழாக மாறியது.
இலங்கை சுதந்திரமடைந்த அதே காலத்தில் விடுதலைபெற்ற நாடுகள் பல பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து செல்கையில் இலங்கை பல விதங்களில் வீழ்ச்சி அடைந்தது.
நாட்டில் காணப்பட்ட ஸ்திரமற்ற ஆட்சி தொடர்ந்து காணப்பட்டதாலும், ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்தமையாலும், மனித உரிமை மீறல்கள் அதிகரித்தமையாலும் இலங்கைக்குக் கடன் வழங்கபல நாடுகள் மறுத்தன.
கடன் வழங்கிய நாடுகள் குறுகிய கால அடிப்படையிலும், உயர்ந்த வட்டி விகிதத்திலும் கடன் வழங்கின. போரின் காரணமாகவும், அரசில் காணப்பட்ட ஊழல் காரணமாகவும், அதிக அளவு கடன்கள் பெற்றமையாலும் உள் நாட்டில் அமைதி குலைந்தது. வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி அடைந்தது.
2015ம் ஆண்டு தேர்தல்கள்
இவ்வாறான ஓர் அரசியல், சமூக, பொருளாதார பின்னணியில்தான் 2015ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றது. ஊழலும், சர்வாதிகாரமும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த அரசை, அந்த அரசு போரில் வெற்றியைத் தந்து சிங்கள பௌத்த ஆதிக்க சக்திகளைத் திருப்திப்படுத்திய போதிலும், இலங்கை இரண்டாவது சுதந்திரத்தைப் பெற்றதாக இனவாதிகள் கூறிய போதிலும் பிரித்தானியப் பிரதமர் வின்சன்ற் சர்ச்சிலை அகற்றியது போல் மக்கள் மகிந்த ஆட்சியைத் தூக்கி எறிந்தார்கள்.
2015ம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி அரசு அரசியல் அமைப்பை மாற்றுவதாகவும், பாரளுமன்ற ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதாகவும், தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது.
இந்த அரசு மிகவும் சிக்கலான அரசியல், பொருளாதார பின்னணியில் பதவிக்கு வந்துள்ளதை நாம் எமது கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக தேசிய அரசியல் குறித்து எமது கவனத்தைத் தற்போது குவிப்பது அவசியமாகும். ஏனெனில் அரசாங்கம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக கடந்த 2 வருடங்களாக அரசியல் தீர்வு குறித்து கடும் பிரயத்தனங்களை எடுத்து வந்துள்ளது.
தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சியின்போது சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகளுடன் போராடி வருகிறது. கடந்த 30 வருடகாலப் போரின்போது அதற்கான ஆள் திரட்டலுக்காக மிக மோசமான சிங்கள பௌத்த தேசியவாதத்தினை விதைத்திருந்தார்கள்.
அதன் காரணமாக தேசிய இனங்களிடையே காலம் காலமாகக் காணப்பட்ட இன நல்லுறவு சீர் குலைந்தது. இனவிரோத செயற்பாடுகள் மிகவும் அப்பட்டமாக நிறைவேறின.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொலீசார் அரசியல் மயப்படுத்தப்பட்டதால் கடமையிலிருந்து தவறினர். இதனால் சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்தது.
இவ்வாறான புறச் சூழலைச் சீர் செய்யாமல் தேசியப் பிரச்சனைகளைக் கையாளமுடியாத நிலை ஏற்பட்டது. இன்று அரசியல் யாப்பு வரைபில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றிய உரையாடலின்போது இந்த நிலமைகளை நாம் அவதானிக்காமல் கடந்து செல்ல முடியாது.
இன்றைய அரசின் மீது உள்நாட்டு அழுத்தங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளின் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. கடன் வழங்குவது முதல் மனித உரிமை வரை அரசு பதிலளிக்கவேண்டியுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள், காணாமல் போனோர் பற்றி விபரங்களை அறிவதற்கான காரியாலயம் அமைத்தல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளித்தல்.
மீண்டும் அதேமாதிரியான நிலமைகள் ஏற்படாது தடுக்க ஆவன செய்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்தி கட்டுதல் என பல சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு இலங்கை இணங்கியுள்ளது.
இவ்வாறான ஒரு நிலமை இலங்கை அரசிற்கு இதவரை ஏற்பட்டதில்லை. அந்த அளவிற்கு இலங்கை சர்வதேச சமூகத்தடன் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த அரசு அவற்றைச் செய்ய முடியாது என முற்றாக மறுத்தும் செயற்படவில்லை. செயற்படவும் முடியாது. இவை யாவும் யாரால் ஏற்படுத்தப்பட்டன? வெளிநாடுகளால் ஏற்படுத்தப்பட்டதா?
வாசகர்களே!
தற்போதைய அரசாங்கம் மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதை தெளிவாக புரிந்த கொள்ளாமல் நாம் பிரச்சனைகளை அணுக முடியாது.
எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் புரிந்து கொண்டால் மாத்திரமே வெற்றிக்கான மார்க்கத்தைத் திறக்க முடியும். 2015ம் ஆண்டின் பின்னர் அரசியல் கட்டுமானங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை விபரிக்கும்போது அவற்றை அரச ஆதரவு விபரங்களாக கொள்ளாமல் அவை அடிப்படை மாற்றத்தை நோக்கித் திரும்பியுள்ளனவா? என்பதை நோக்குவது அவசியமாகும்.
பிரபாகரனைப் பற்றியும், புலிகளின் உள் கட்டுமானம் பற்றியும் திரட்டிய தகவல்களின் பிரகாரம் தாம் தெளிவாக ஆராய்ந்த காரணத்தினால்தான் பலராலும் வெற்றி கொள்ள முடியாது என எண்ணிய போரை வெற்றி கொள்ள முடிந்ததாக 53வது படைப்பிரிவின் முன்னாள் தளபதி கமால் குணரத்ன கூறுகிறார். இது போருக்குமட்டுமல்ல அரசியலுக்கும் இதுவே உபாயமாகும்.
கூட்டமைப்பும் அதன் நிலைப்பாடுகளும்
ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்த அரசாங்கம் பலவிதமான அழுத்தங்களுக்குள் இருந்த போதிலும் நாட்டின் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதும், தேசிய இனப் பிரச்னையைத் தீர்ப்பதும் தேசத்தின் எதிர்காலத்திற்கு அவசியமானது என்பதை அரசு நன்கு புரிந்துள்ளதாக கூட்டமைப்பினர் கூறுகிறார்கள்.
எனவே இந்த அரசைப் பலப்படுத்துவது தேவை எனக் கருதுகிறார்கள். எனவேதான் தமக்கு அரசியல் ரீதியாக பாதிப்புத் தருவதான கொள்கைகளாக இருந்த போதிலும் அரசை ஆதரிக்கின்றனர்.
உதாரணமாக அரசின் வரவு செலவுத் திட்டம் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிந்த போதிலும் அவர்கள்அந்த நவ தாராளவாத பொருளாதாரத் திட்டங்களை ஆதரிப்பதாக கருதவேண்டியுள்ளது.
“முன்னெப்போதையும் விட மிகவும் வாய்ப்பான அரசியல் சூழல் தற்போது காணப்படுவதால் முன்னைய காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிட்டு பின்னர் கவலைப்பட்டது போல இம் முறையும் அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என்பதால்தான் கூட்டமைப்பினர் தொடர்பாக மிகவும் விமர்சனங்களுடன் அவர்களது இன்றைய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம்.”
கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் இரண்டுபட்ட சமஷ்டி, தமிழீழம் என்ற அரசியல் கோட்பாடுகளுடன் பயணித்திருந்தன. இதனால் சிங்கள அரசியல் சமூகம் அவற்றை நன்கு பயன்படுத்தி சந்தேகங்களை வளர்த்தன.
ஆனால் இன்று தமிழ் அரசியல் தலைமை பிளவுபடாத, ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செல்வதாக தெளிவாக உரைத்த காரணத்தால் சிங்கள அதிகார வர்க்கத்தினால் அச் சவாலை எதிர்கொள்ள முடியவில்லை.
சிறுபான்மையினர் என்போர் இல்லை. பயங்கரவாதமே எஞ்சியுள்ளது எனக் கூறிய சிங்கள அரசியல் தலைமைகள் இன்று ஜெனிவா தீர்மானங்களுக்குப் பயந்து செயற்படுவது ஏன்? தமிழ்த் தலைமைகளின் விவேகமான, தெளிவான தீர்மானமேயாகும்.
இதனைப் பல இடதுசாரிகள் காலம்காலமாக கூறிய போதிலும் அவை செவிமடுக்கப்படவில்லை. இதனால்தான் பயணம் முள்ளி வாய்க்கால் வரை சென்று இழப்புகளைச் சந்தித்தது. இந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் இன்றைய புதிய அரசியல் பயணம்.
தற்போதைய அரசியலின் சாதக, பாதகங்கள்
இன்றுள்ள தமிழ் அரசியல் சூழலும், சிங்கள அரசியல் சூழலும் தர வாரியாக பார்க்குமிடத்து முன்னெப்போதையும் விட முன்னேற்றமாக உள்ளது என்பதே எமது வாதமாகும். எனவேதான் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.
அது மட்டுமல்ல இந்த அரசிற்குப் பதிலாக அடுத்து வரக்கூடிய அரசு இதைவிட பலமடங்கு மோசமாக இருக்கும் எனத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் நிலமைகளைச் சிக்கலாக்குவது அர்த்தமுள்ள நடைமுறையல்ல.
கடந்த காலங்களில் இனவாத அரசியலை நடத்திய இன்றைய அரசின் பிரதான கட்சிகள் தமது வரலாற்றுத் தவறினை நன்கு புரிந்துகொண்டுள்ள போக்கினையும், இப் பயணத்தில் ஜே வி பி இனர் இணைந்துள்ளமையும் மிகச் சிறப்பான அம்சங்களாகும்.
தற்போதைய வழிகாட்டுக் குழு அறிக்கையில் சகல பிரதான கட்சிகளும் தமது எண்ணங்களை, நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிகார பரவலாக்கம் தொடர்பாக ஒத்த கருத்தினையே சகல தரப்பினர் மத்தியிலும் காண முடிகிறது.
அது மட்டுமல்ல தமிழர் தரப்பினரும் இணைந்து செயற்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பம்சமாகும். இதனை எவ்வாறு நழுவ விட முடியும்? இவ் அறிக்கை தேசம் தழுவிய ரீதியில் மக்களின் அபிப்பிராயங்கள் ( தமிழ் மக்கள் உட்பட ) பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையில் உப குழுக்கள் ஆராய்ந்த பின்னரே வழிகாட்டுக் குழவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
நியாயமான அளவிலான ஜனநாயக நெறிகளின் அடிப்படையில் நடந்தேறியுள்ள அரசியல் அமைப்புத் தயாரிப்பினை அதன் இறுதி முடிவு வரை எடுத்துச் செல்ல வாய்ப்பளித்தல் அவசியமானது.
இவ்வாறான வரலாற்று நிகழ்வு பல சிக்கலான பயணங்களின் பெறுபேறாக கிடைத்தமையால் அதனை நன்கு பயன்படுத்த உதவுவது எமது தேசியக் கடமையாகும். அதன் அடிப்படையிலேயே கூட்டமைப்பினர் மத்தியிலே காணப்படும் பல்வேறு விதமான ஜனநாயக விரோத போக்குகள் தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியிலும் அவர்களது கரங்களைப் பலப்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம்.
“அது மட்டுமல்ல தற்போதைய அரசியல் அமைப்பு முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும் என்ற கற்பனையும் எமக்கு இல்லை. வரலாறு எமக்கு அதனை நன்கு உணர்த்தியுள்ளது. ஆனாலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நம்பிக்கையைத் தருவதால் இணைந்து பயணிப்பது தவிர்க்க முடியாதது.”
வாசகர்களே!
அரசியல் அமைப்பு மாற்ற முயற்சிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் நடைபெற்று வருவதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
இவை தமிழ்க் குறும் தேசியவாத சக்திகள் தரப்பிலும், சிங்கள பௌத்த பெரும் தேசியவாத சக்திகள் மத்தியிலும் மிகவும் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளது.
இச் சந்தர்ப்பவாத சக்திகளின் உள் நோக்கங்கள் அம்பலப்படுத்தப்படாத வரை அவை சிங்கள பௌத்த பெரும்தேசியவாத சக்திகளுக்கு உதவுவதிலேயே முடிவடையும். எனவே மிகவும் கடுமையான வகையில் இவற்றிற்கு முகம்கொடுத்தல் அவசியம்.
(தொடரும்)
வி. சிவலிங்கம்
செய்தி மூலம்: தேனி இணையம்