ஆந்திர மாநிலம் தோட்டரவுலபாடு கிராமத்தை சேர்ந்தவர் கோட்டையா. இவரது மகள் சந்திரிக்கா. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு சந்திரிக்காவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சந்திரிக்காவோ தனது காதலை கைவிடப்போவதில்லை, காதலனைதான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக கூறியுள்ளார்.
அப்படி நடந்தால் குடும்பத்திற்கு அவமானமும் கெட்டப்பெயரும் தான் வரும் என குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால் அதனை காதில் போட்டுக்கொள்ளாத சந்திரிக்கா குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவர்களுக்கு தெரியாமல் தனது காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிக்கா தனது 18 வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது சந்திரிக்காவின் தந்தை மகளுக்கு ஆசை ஆசையாக செல்போன் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.
பிறந்த நாளை குடும்பத்தினருடன் சந்தோஷமாக கொண்டாடினார் சந்திரிக்கா. இதைத்தொடர்ந்து அடுத்த நாளான கடந்த சனிக்கிழமை சந்திரிக்கா தனது போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட அவரது தந்தை யாருடன் பேசுகிறாய் என கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது காதலனுடன் தான் பேசுகிறேன் என்று கூறிய சந்திரிக்கா, அவரைதான் திருமணம் செய்துகொள்வேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த தந்தை 18 வயதில் உனக்கு என்ன காதல் என்று கேட்டதோடு, எங்களுடன் பேச போன் வாங்கிக்கொடுத்தால் காதலனுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறாயா என கேட்டு கோடரி கைப்பிடியால் அடித்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்திரிக்கா சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சந்திரிக்காவின் உடலை கைப்பற்றியதோடு அவரது தந்தையை கைது செய்தனர்.
காதலனுடன் பேசியதற்காக 18 வயது மகளை பிறந்த நாளுக்கு மறுநாளே தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.