குற்ற வழக்கில் தொடர்புடையதாக கூறி தமிழகம் – மதுரையில் 3 வயது குழந்தையை சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, விளாச்சேரி மொட்டைமலையை சேர்ந்த மாரி என்ற பெண் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த 21-ஆம் திகதி களிமண் சிலைகள் விற்க சென்றபோது என்னுடைய கணவர், சகோதரி, அவருடைய கணவர் மற்றும் எனது மூன்று வயது மகன் ஆகியோரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தற்போது சட்டவிரோதமாக அடைபட்டிருக்கும் என் குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருட்டு வழக்கு தொடர்பாக மூன்று பேரையும் மார்த்தாண்டம் காவல்துறை கைது செய்து, குழித்துறை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர் என அரசு வழக்கறிஞர் கூறினார்.
மேலும் அந்த மூன்று வயது குழந்தை சித்தியுடன் சிறையில் உள்ளான் என அரசு வழக்கறிஞர் கூறி நீதிமன்றத்தையே அதிரவைத்தார்.
மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை மீது கடும் அதிருப்தியடைந்த நீதிபதி குழந்தையை உடனே தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
குற்றம் செய்த சிறுவர்களையே சிறைக்கு அனுப்பாமல் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் காலத்தில், விவரம் அறியா மூன்று வயது குழந்தையை தாயிடமிருந்து பிரித்து சிறைக்கு அனுப்ப காவல்துறைக்கு யார் அனுமதி அளித்தது, மாஜிஸ்திரேட் குழந்தைக்கு எதிராக எந்த அடிப்படையில் ரிமாண்ட் செய்தார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கவும், மாஜிஸ்திரேட் மற்றும் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.