சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட இளைஞனுக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி வழங்குவதுடன் தண்டமாக 10 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் உத்தரவிட்டார்.
2006ஆம் ஆண்டு செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் காட்டில் வைத்து பாலியல் ரீதியாக துண்புறுத்தப்பட்டார்.
சிறுவனைத் துன்புறுத்தி னார் என்ற குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் சிவசோதி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் வவுனியா நீதிவான் மன்றில் இடம்பெற்றன. ஆரம்ப விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது.
சிறுவனைக் கடத்தினார் என்று முதலாவது குற்றச் சாட்டாகவும் சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்பு றுத்தல்களை மேற்கொண்டார் என்று இரண்டாவது குற்றச்சாட்டாகவும் இளைஞனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்றன. வழக்கு தீர்ப்புக்காக நேற்று நியமிக்கப் பட்டிருந்தது.
“எதிரிக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடருனரால் நிரூபிக்கப்பட வில்லை. சிறுவனைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் எதிரி விடுவிக்கப்படு கிறார்.
எதிரி மீதான இரண்டாவது குற்றச்சாட்டான சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டார் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட் டுள்ளது என்ற முடிவுக்கு மன்று வருகிறது” என்று தீர்ப்பளித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி.
“சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டார் என்று எதிரியைக் குற்றவாளி யாக இனங்கண்டு அவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படு கிறது.
மேலும் குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுவ னுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீட்டைச் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத்தவறின் மேலும் ஒரு வருடகாலம் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
அத்துடன் எதிரி 10ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும். தண்டப்பணம் செலுத்தத்தவறினால் ஒரு மாத காலம் சாதாரண சிறைத்தண்டனை குற்றவாளி அனுபவிக்க நேரிடும்” என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தண்டனைத் தீர்ப்பளித் தார்.
வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார்.