பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொள்ளையிட்டுச் சென்றபோது அவர்களை பிரதேச மக்கள் துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை 11.30 மணியளவில் வலயன்கட்டு பரிசங்குளம் பகுதியில் சைக்கிளில் சென்ற இளம் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மூவர் அபகரித்துக் கொண்டு கோயில் குஞ்சுக்குளம் பகுதியால் சென்று கொண்டிருந்த போது அப்பகுதி இளைஞர்களாலும், பொதுமக்களாலும் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரும் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்தவர்கள் எனவும் பரிசங்குளம் பகுதிக்கு மேசன் வேலைக்காக வந்தவர்கள் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தப்பித்து சென்ற மற்றையவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.