இந்தியாவின் இணையற்ற பக்திக் காவியம் ராமாயணம். பல மொழிகளில் பலவகை ராமாயணங்கள் வழக்கத்திலிருந்து வந்தாலும், எல்லா ராமாயணங்களுக்கும் மூலமாக இருப்பது வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணமே.
சம்ஸ்கிருத மொழியின் சாசுவதமான புகழுக்கு உரிய காவியம் ராமாயணம்.
வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டப்பகுதியில் அத்தியாயம் 22-ல் சேது பந்தனம் என்னும் பிரிவில் ஸ்ரீராமபிரானின் வானர சேனைகள் கூடி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாலத்தைக் கட்டிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
வானர சேனைகளின் உதவியுடன் 34 கி. மீ. தூரமுள்ள பாலத்தை, 103 சிறிய குன்றுகளை இணைத்து 5 நாள்களில் கட்டிமுடித்தார் ராமபிரான் என்று கூறப்படுகிறது.
ஏழாயிரம் ஆண்டுகளைத் தாண்டிய இந்தப் பாலம், உண்மையானது என்றும் இல்லை என்றும் இன்று வாதப்பிரதிவாதங்களைச் சந்தித்து வருகிறது. ஸ்ரீராமர் எப்படி பாலத்தினை கட்டினார்.
அதற்கு வானரசேனைகள் எப்படி உதவின என்பதைக் குறித்த சுவையான புராணக்கதை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.
சீதையைக் கவர்ந்து சென்ற ராவணன், அவரை இலங்கையில்தான் சிறை வைத்திருக்கிறான் என்பதை ஹனுமான் மூலம் ராமர் அறிந்து கொண்டார்.
உடனே இந்தியாவின் ராமேஸ்வர முனையை அடைந்து இலங்கையை அடையும் வழியைப் பற்றி யோசித்தார். கடலின் மீது ஒரு பாலம் அமைத்தாலன்றி, இலங்கையை அடையமுடியாது என்பதால், கடலில் ஒரு பாலம் அமைக்க விரும்பினார்.
ஆனால், பொங்கி வரும் அலைகளின்மீது பாலம் கட்டமுடியாது என்பதால், கடல் அரசனை வணங்கி, அலைகளை ஓய்ந்திருக்கச் செய்யும்படி வேண்டினார்.
வருணம் சற்று தாமதிக்கவே, கோபம் கொண்ட ராமபிரான் வில்லினை எடுத்து வருணனுடன் போர் செய்ய ஆயத்தமானார்.
உடனே, வருணபகவான் நேரில் தோன்றி ராமபிரானிடம் தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கடல் அலைகளை ஓய்ந்திருக்கும்படிச் செய்தார்.
அலைகள் இல்லாத கடலின் மீது வானர சேனைகள் பாறைகளைக் கொண்டு வந்து போட்டு பாலம் கட்டத் தொடங்கின. இந்தப் பணிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஹனுமான்.
கடலில் போடும் பாறைகள் யாவும் நீரில் மூழ்கி மறைந்தன. இதனால் கடல் பாலம் கட்டும் பணி தாமதமானது.
அப்போது ஸ்ரீராமரின் ஆணைப்படி வானரங்கள் கொண்டு வரும் பாறைகள் இறுதியாக நளன் என்ற வானரத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
நளன் கடலில் வீசிய பாறைகள் மிதந்து அப்படியே நின்றன. இதனால் பாலம் கட்டும் பணி விரைவாகி வானர சேனைகள் உற்சாகமாகின.
ஹனுமான் வலக் கையில் கொண்டு வந்த பாறைகளை நளன் இடக் கையால் வாங்கி வீசுவதைக் கண்டு ஹனுமான் சினம் கொண்டார்.
இதனால் பாறைகளைத் தானே போடத் தொடங்கினார். ஆனால், அந்தப் பாறைகள் நீரில் மூழ்கின. ஹனுமனை நெருங்கிய ஸ்ரீராமர், ‘நல்ல காரியத்தில் ஈடுபடும்போது பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு கூடாது’ என்று அறிவுறுத்தி நளனிடமே பாறைகளைக் கொடுக்கச் சொன்னார். நளனோடு அதனுடைய நண்பரான நீலனும் இந்தப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டது.
இவ்விதம் பணிகள் நடந்துவந்தபோது, நளன் எறிந்த பாறைகள் மட்டுமே மிதப்பதைக் கண்ட லட்சுமணர் அதன் காரணம் என்னவென்று ஸ்ரீராமரை ஆச்சர்யத்தோடு கேட்டார்.
”மாதவேந்திரர் என்ற மகாஞானி ஒரு சூரியகிரகணத்தன்று நீரில் முங்கி கிரகண தோஷநிவர்த்திக்காக நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நளன் என்ற இந்தக் குட்டி வானரம் மகிழ்ச்சி கொண்டது.
பிறந்ததிலிருந்தே சேட்டைகள் செய்து பலரை அவதிக்குள்ளாக்கும் இயல்பு கொண்ட வானரம் நளன். நீராடிக்கொண்டிருந்த ஞானியைக் கண்டதும் அது உற்சாகமாகி, குளத்தின் கரையிலிருந்த கற்களை வீசி, அது முங்கும்போது உண்டான சத்தமும் சாரலும் கண்டு சிரித்தது.
இதனால், முனிவரால் மந்திரங்களை முறையாக உச்சரிக்கமுடியாமல் போனது. அந்த வானரத்தை விரட்டினார். பலமுறை விரட்டியும் நளன் போகவில்லை.
ஞானிக்குக் கோபம் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டார். மந்திரம் சொல்லும்போது கோபம் கொண்டு சாபம் விட்டால் மந்திரசக்தி குறைந்து விடும் என்பது ஐதீகம்.
இதனால், ‘இனி நீ எறியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதந்து கிடக்கட்டும்’ என்று சொல்லி மந்திரத்தைத் தொடர்ந்தார். அதன்படி நளன் எறிந்த கற்கள் மிதக்கத் தொடங்கின.
கல் மூழ்காமலும் சத்தம் வராமலும் போனதால் சுவாரஸ்யம் குறைந்து நளன் அங்கிருந்து சென்றுவிட்டது. அன்று முதல் நளன் எறியும் எந்தக் கல்லும் மிதக்கும் என்பதாலேயே இந்தப் பாலத்தின் பணிகள் ஒழுங்காக நடைபெறுகின்றன” என்று ஸ்ரீராமர் விளக்கினார்.
இப்படி வானரசேனைகள் கூடி, கண்துஞ்சாது கடமை செய்து ஐந்து நாள்களில் சேதுபந்தனம் என்னும் ராமர் பாலத்தைக் கட்டி முடித்தன. மிதக்கும் அந்த அழகிய பாலத்தைக் கண்டு ராமபிரான் மகிழ்ந்து வருணபகவான் தனக்கு பரிசளித்த நவரத்தின மாலையை நளனுக்கு அளித்தார் என்றும் வால்மீகி ராமாயணம் தெரிவிக்கிறது.