விளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளைஞனை கைது செய்த தெல்லிப்பளை பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்படுத்தினார்கள்.
அதனை அடுத்து நீதிவான் குறித்த இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
அளவெட்டி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று முன்தினம் இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தவேளை இளைஞர் ஒருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அங்கிருந்து சென்ற இளைஞன் பின்னர் வாளுடன் மைதானத்திற்குள் நுழைந்து தன்னுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதால், அங்கிருந்த இளைஞர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.