வருமானவரிச் சோதனையில் இளவரசி குடும்பமும் சிக்கி இருக்கிறது. இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மகன் விவேக், சம்பந்திகள் கலியபெருமாள், பாஸ்கர் என்று ஒட்டுமொத்த குடும்பமுமே வருமானவரித் துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில் சசிகலாவுடன் இளவரசியும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா.
அவரது வீடு சென்னை தி.நகரில் உள்ளது. மருத்துவச் சிகிச்சையில் இருந்த கணவர் நடராஜனைப் பார்க்கப் பரோலில் வந்த சசிகலா, அந்த வீட்டில்தான் ஐந்து நாள்கள் தங்கி இருந்தார்.
தற்போது அந்த கிருஷ்ணபிரியா வீட்டிலும் சோதனை நடந்துவருகிறது. கிருஷ்ணபிரியா, சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் -இளவரசி தம்பதியின் மூத்த மகள். இரண்டாவது மகள் ஷகிலா.
கடைசி மகன் விவேக். இதில், ‘ஜெயா டி.வி.’, ஜாஸ் சினிமா ஆகியவற்றை விவேக் கவனித்து வருகிறார்.
இந்த விவேக்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவை அடிக்கடி சந்தித்து வந்தார். விவேக் மாமனார் பாஸ்கர் வீடும் இந்தச் சோதனையில் இருந்து தப்பவில்லை.
இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, ‘கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2015-ம் ஆண்டு வெள்ளத்தில், சென்னை தத்தளித்தபோது தனது அறக்கட்டளை மூலம் பல உதவிகளைச் செய்தார்.
மருத்துவ உதவி, கல்வி உதவி, மரம் நடுதல் என்று அவர் தனி ரூட்டில் பிஸியாக இருந்து வந்தார். நீட் தேர்வு வேண்டாம் என்று அனிதா தற்கொலை செய்து கொண்டபோது செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இளவரசியின் இன்னொரு மகள் ஷகிலா. இவரது கட்டுப்பாட்டில்தான் மிடாஸ் சாராயக் கம்பெனி நிர்வாகம் உள்ளது என்கிறார்கள்.
இந்த நிறுவனத்தில் புழங்கும் கோடிக்கணக்கான பணம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது.
அ.தி.மு.க அணி மோதல் உருவான பிறகுதான் மிடாஸ் நிறுவனத்தின் சரக்கு விற்பனை டாஸ்மாக் நிறுவனத்துக்குக் குறைந்தது. இந்த நிறுவனத்தின் பணம் கறுப்பு, வெள்ளை என்று இரண்டு வடிவில் இருப்பதாகப் புகார் வந்துள்ளது.
மேலும், பல நிறுவனங்கள், சொத்துகள் இளவரசி குடும்பத்தினர் பெயரில் உள்ளன.
போலி நிறுவனங்கள் பெயரில் பல நூறுகோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற புகார்கள் அடிப்படையில்தான் இளவரசியின் ரத்த உறவுகள் வீடுகளில், நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனை நடந்தது என்கிறார்கள்.
இன்றைய வருமானவரிச் சோதனையில் இளவரசியின் குடும்பமே சிக்கி இருக்கிறது. அதாவது, ‘ஜெயா டி.வி.’, ‘நமது எம்.ஜி.ஆர்.’, மிடாஸ் நிறுவனம், கொடநாடு எஸ்டேட் எல்லாம் இளவரசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உள்ள இந்தச் சொத்துகள், அதன் வரவு – செலவுகள் பற்றி இந்தச் சோதனையில் வருமானவரித் துறை அதிகாரிகள் கணக்குக் கேட்டார்கள்.
அதுவும் குறிப்பாக ‘ஜெயா டி.வி.’ கணக்கு மூலம் நடந்த பரிவர்த்தனைகள் குறித்து துருவித்துருவி விசாரித்து இருக்கிறார்கள்.