கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் இலங்கை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அம்பாறை தளபதி ராம் தலைமையில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கக் கூடும் என அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அப்படியான எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை.
இந்நிலையில் திருக்கோவில்- தம்பிலுவில் உள்ள தமது வீட்டில் இருந்த ராமை வேனில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ராமின் மனைவி திருக்கோவில் போலீசில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இலங்கை அரசு, ராம் கடத்தப்படவில்லை; தீவிரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது கிளிநொச்சியில் வைத்து ராமிடம் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.