புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுவது தொடர்பான ஆலோசனை கோரி சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி எனத் தீர்பளிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில் அவரது மனைவி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வறுமை காரணமாக மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஒருவரை நியமிக்க முடியாத நிலையில் இந்திரகுமாரின் குடும்பம் அவதியுற்றனர்.
எனினும் இளம் சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் இலவசமாக இந்திரகுமாருக்கு பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சி.ரிஷிகேசனுடன் சட்டத்தரணி வி.திருக்குமரனும் அண்மையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இந்திரகுமார் சார்பான பிணை மனுவுக்கு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், எதிர் மனுதாரர்களான சட்ட மா அதிபர் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
பிணை விண்ணப்பம் மீதான விசாரணை இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தரான கோபி என்பவருக்கே கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு பூபாலசிங்கம் இந்திரகுமார் மீது பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.
எனினும் மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் பொலிஸ் உத்தியோகத்தர் கோபி சாட்சியாக இல்லை என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான வழக்கை மீளப் பெற்று அவரை விடுவிப்பது தொடர்பான ஆலோசனையை சட்ட மா அதிபரிடம் கோரி ஊர்காவற்றுறை பொலிஸாரால் அறிக்கை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகிறது.