அது 2004 ஆம் ஆண்டு. அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். 17 வயதில் அரும்பிய மெல்லி காதல் அது.
வகுப்பறையில் உட்கார்ந்திருந்த போது தன்னை கடந்த சென்ற ஒருத்தியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதுவரை அப்படி யாரையும் பார்த்ததில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவில்லை.
பார்த்தவுடனேயே மெய்மறக்கச் செய்த அந்தக் காதல் ஜெயித்ததா? உண்மையில் அது காதல் தானா என்று சொல்லும் உண்மைக் கதை.
சில நாட்களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போது எனக்கு பிரம்மிப்பாய் இருக்கும்.
எனக்காக பிறந்தவள் இவள் தான் என்று முழுமையாக நம்பினேன். இது காதல் தானா என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை.
ஒரு வித பயம் என்னை போட்டு அழுத்த, அவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டேன். அவளுக்கு காரணம் தெரியப்படுத்தவில்லை.
பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு ஒரு வழியாக முடிந்தது பிரியப்போகிற தருணம். இன்னுமமும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
மவுனமாக ஸ்லாம் புக்கை அவளிடம் நீட்டினேன். அதை வாங்கிக்கொண்டவள், தன்னுடைய செதுக்கிய கையெழுத்துக்களால் உன்னிடம் பேச வேண்டும். என்று எழுதியிருந்தாள்.
அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சந்திக்கும் வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. நான் கல்லூரிக்குச் சேர்ந்து விட்டேன்.அவள், பெங்களூருக்குச் சென்றுவிட்டாள்.
மூன்றாண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டு, என்னுடைய போனுக்கு ஒரு கால் வந்தது.
அன்றைக்கு எனக்கு பிறந்தநாள் என்பதால் வழக்கமாக நண்பர்கள் வாழ்த்துச் சொல்ல அழைத்திருப்பார்கள் என்று நினைத்து, ஹலோ…. என்றேன்.
எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. இரண்டாவது முறை ஹலோ சொன்னதும்… ஹலோ நான் சுனிதா பேசுறேன் என்றது அந்தக் குரல்.
சுனிதா. பள்ளியில் பிரம்மித்த ஒருத்தி. அவளது குரலா இது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னும் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாளா? அதுவும் என்னுடைய பிறந்த நாளை மறக்காமல் இருக்கிறாளா? என்ற ஆச்சரியமே அன்றைய பிறந்தநாளுக்கு எனக்கு கிடைத்த உணர்வுப்பூர்வமான பரிசாக அமைந்தது.
பேசியது என்னவோ குறைந்த நிமிடங்கள் தான் ஆனால் வாழ்நாளுக்கும் மறக்காத தருணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு அவ்வப்போது பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.
2011 ஆம் ஆண்டு நவம்பரில் என்னுடைய நண்பன் ஒருவன் சுனிதாவிற்கு விபத்து ஏற்பட்டு கோவையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினான்.
முதலில் பதட்டமடைந்தாலும். பின்னர் சுதாரித்து அவளை பார்க்கச் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன். சரி மைனர் ஆக்ஸிடண்ட்டாகத் தான் இருக்கும் என்று நினைத்து இரண்டு நாட்கள் கழித்து அவளது போனுக்கு அழைத்தேன்.
பேசியது யாரென்று தெரியவில்லை ஆனால் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மட்டும் யூகிக்க முடிந்தது.
அடித்து பிடித்து மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே நான் பார்த்த சுனிதா, முகம் சிதைந்து, தலையில் முடியில்லாமல் மூக்கு இல்லாமல், வாய் கிழிந்து பற்கள் இல்லாது கிடந்தாள்.
90 வயதைத் தாண்டிய பாட்டியைப் போல அவளது நடை இருந்தது. இருவர் கைதாங்கலாக பிடித்திருந்தார்கள்.
அதிர்ந்தே விட்டேன். அந்த நொடியில் தான். உருக்குலைந்து கிடந்த சுனிதாவை பார்த்த அந்த நொடியில் தான் நான் முடிவு செய்தேன் இனி அவளை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று. ஆம், என்னுடைய முதல் காதலி, என் ஆசை நாயகி அவள்.
என்னைத் தவிர வேறு யாராலும் அவளை நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது. நேராக அவளிடம் சென்று என் காதலைச் சொன்னேன்.
புரியாதது போல் முழித்தாள். மீண்டும் சொன்னேன். வா திருமணம் செய்து கொள்ளலாம் என்றேன். அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை சரியென்றும் சொல்லவில்லை . சிரித்தாள்.
நான் சொன்னாவுடன் என்னுடைய அம்மா அதிர்ந்துவிட்டார். வேண்டாம் என்பது போல செய்கை செய்தார்.
ஆனால் என் அப்பா எனக்கு துணையாக இருந்தார். சில மணி நேரத்தில் அம்மாவும் என் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். இப்போது என் காதல் கண்மணி மட்டும் தான் சம்மதிக்க வேண்டும்.
விபத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஐ.சி.யுவில் கிடந்தாள். முழுவதும் அவளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையதாக ஏற்றுக் கொண்டேன்.
ஒரு வழியாக தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவள் பெங்களூரில் இருக்கும் அவளது வீட்டிற்குச் சென்று விட்டாள்.
2014 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பெங்களூருக்கு நான் சென்றேன். என்னை அவள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். காரணம் எதுவும் கேட்காமல் இரவு ஒரு மணிக்கு அவள் வீட்டு மொட்டை மாடியில் காத்திருந்தேன்.
கையில் மூன்று ரோஜாப்பூக்களுடன் வந்தவள், என்னை காதலிக்கிறேன் என்று வெட்கப்புன்னகை சிந்த பூக்களை நீட்டினாள்.
இந்த தருணம், இந்த நொடிக்காக தானே இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் என்றபடியே அவளது கையிலிருந்த பூக்களை வாங்கிக் கொண்டேன்.அன்றைக்கே எங்களுக்கு பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்திற்கு பொருட் செலவு செய்யும் அளவிற்கு இருவருமே கொஞ்சம் தடுமாற்றத்தில் இருந்தோம்.
எளிமையான திருமணமாக இருக்கட்டும் என்று நாங்கள் நினைத்தாலும் எங்களது உறவுகள் ஏற்கவில்லை.
அதோடு, இவளை ஏன் திருமணம் செய்தாய், முகம் சிதைந்திருப்பவளை யாராவது திருமணம் செய்வார்களா?
உங்களுக்கு குழந்தையே பிறக்காது என்று பலவாறு வசைபாடினார்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் யாருக்குமே இந்த திருமணத்தில் விருப்பமில்லை.
இன்னும் சிலரோ எதோ நான் மிகப்பெரிய தியாகம் செய்தது போல வர்ணித்தார்கள். உண்மையில் அப்படி ஒன்றுமில்லை. நான் காதலித்தேன்.
அவளை பிரம்மித்தேன் அவளையே திருமணம் செய்திருக்கிறேன். இப்போது அவளைப் பார்த்து, அவளது தன்னம்பிக்கையை பார்த்து பிரம்மிக்கவே செய்கிறேன். என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததாய் உணர்கிறேன். அவளால் என்னுடைய வாழ்க்கை அழகாகியிருக்கிறது.
பல எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டேன். டீன் ஏஜ் பருவத்தில் அரும்பிய காதல், என்னுடைய முதல் காதல் இனி என் வாழ்க்கை முழுவதும் உடன் வரப்போகிறது.
காதல் முகத்தைப் பார்த்து வெளித்தோற்றத்தைப் பார்த்து வருவது அல்ல. இரு மனங்களும் ஒத்துப் போகவேண்டும்.
இவள் எனக்கானவள் என்று சொல்லும் உள்ளுணர்வை கவனித்தாலே போதும். இவள் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறையாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இப்போது எங்களுக்கு ஆத்மியா, ஆத்மிக் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.