மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் வனப்பகுதியில் உள்ள பல்லர்பூர் கிராமத்துக்குள் நேற்று சிறுத்தைப்புலி புகுந்தது. இதனால் அந்த கிராம மக்களிடையே ‘கிலி’ ஏற்பட்டது. விவசாயி ஒருவரின் வீட்டு வாசல் வழியாக உள்ளே புகுந்தது. உடனே உள்ளே இருந்தவர்கள் பின்வாசல் வழியாக வெளியே ஓடி உயிர் தப்பினர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், சிறுத்தைப்புலியை பிடிக்க தேவையான வலை மற்றும் உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.
கூரை வழியாக பாய்ந்தது
சிறுத்தைப்புலி புகுந்த வீடு, ஓடுகளால் கூரை போடப்பட்டதாகும். அந்த வீட்டை சுற்றி வலையை கட்டினர். பின்னர் அந்த வீட்டின் கதவை திறந்து விட்டு அதை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. உள்ளேயே பதுங்கிக்கொண்டது.
இதனால் வனத்துறை ஊழியர்கள் வீட்டு கூரை மீது ஏறி மெதுவாக ஓடுகளை பிரித்து உள்ளே பார்க்க முயன்றனர். அப்போது திடீரென்று அந்த சிறுத்தை கூரை வழியாக வெளியே பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத வனத்துறையினரும் பொதுமக்களும் சிதறி ஓடினர். அப்போது சிறுத்தை கடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வலையில் சிக்கியது
பின்னர் அந்த சிறுத்தை அதே வீட்டின் குளியலறைக்குள் புகுந்து கொண்டது. தொடர்ந்து வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்குப்பின் வலையை போட்டு அந்த சிறுத்தையை பிடித்தனர். அதன் பின்னரே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அங்கு நிலவிய பரபரப்பும் பதற்றமும் தணிந்தது.
பின்னர் அந்த சிறுத்தைப்புலி வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. சிறுத்தை கடித்து காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.