• எட்டுமணிநேரத்துக்குள் 9பேரால் பலாத்காரம்
• பிட்டபத்தர, அக்குரஸ்ஸ, மாத்தறை, காலி, நெலுவ, இனிதும, நிட்டம்புவ உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஹோட்டல்கள் மற்றும் பாழடைந்த இடங்களில் வைத்து சந்தேகநபர்கள் பலர் தனித்தனியாகவும் கூட்டாகவும் பலாத்காரம்.
• சுற்றுவா ஜோட்டலுக்கு விற்பணை செய்வும் முயற்சி
• மூன்று ஹோட்டல் முகாமையாளர்கள், ஒரு பெண், தேரர் ஒருவர் உட்பட 16 பேரை இதுவரை கைது
மாத்தறை, பிட்டபத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கல எனும் பகுதியில் பின்தங்கிய கிராமம் அது. அக்கிராமத்தின் 13 வயதுடைய பாடசாலை சிறுமியே தர்ஷி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
நாடளாவிய ரீதியில் இன்று சிறுவர்களுக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் அரங்கேறிவரும் நிலையில் தர்ஷிக்கு நடந்த கொடூரம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.
தர்ஷியை கூட்டாகவும் தனித்தனியாகவும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட மனித மிருகங்கள் அவளது 7 வயது முதல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்களைத் தேடி மாத்தறை பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் விவகார விசாரணைப் பிரிவு பொலிஸார் தொடர் விசாரணைகளை நடத்திவரும் நிலையில் சிறுவர் சிறுமியரின் பாதுகாப்பு மற்றும் பிள்ளை வளர்ப்பின் போது பெற்றோர் எவ்வளவு தூரம் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கொடூரத்தை வாசகர்களுக்கு கூறுகின்றோம்.
அது கடந்த ஜுலை10 ஆம் திகதி மாத்தறை – பிட்டபத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கல எனும் பின்தங்கிய கிராமத்தின் நடுப்பகுதியில் உள்ள வீடு அது.
அந்த வீட்டில் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டை பிடித்துக்கொண்ட நிலையில் அந்த விவகாரம் அவர்களின் மகளான 13 வயதுடைய தர்ஷியை வெகுவாக பாதித்திருந்தது. பெற்றோரின் இந்த முரண்பாடுகளிடையே தர்ஷியும் அவர்களுடன் கோபிக்கும் நிலை கடந்த ஜுலை 10 ஆம் திகதி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோருடன் கோபித்துக்கொண்ட தர்ஷி, வீட்டாருக்கு தெரியாமல் அவர்களிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கால்போனபோக்கில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்றைய தினம் முழுவதும் தர்ஷி வீட்டுக்கு வராததால், மாலை வேளையில் தர்ஷியின் பெற்றோர், தனது மகளைக் காணவில்லை என பிட்டபத்தர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை உடனடியாக பிட்டபத்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சிசிர ஜயவீரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி சிறுமி தர்ஷியை பல இடங்களிலும் தேடிய பொலிஸார் அவரைக் கண்டுபிடிக்க முடியாது நவீன தொழில் நுட்பத்தின் உதவியையும் நாடினர்.
இதனிடையே பிட்டபத்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர ஜயகொடி மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கும் இது குறித்து அறிவித்து அவர்களின் உதவியையும் தேடுதலுக்கு நாடினார்.
அதன்படி மாத்தறை சிறுவர் மகளிர் விவகார விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி கெளஷல்யா போகஹவத்த தலைமையிலான விசேட குழுவும் விசாரணைகளை ஆரம்பித்தது.
தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் நிர்வாகம் மற்றும் தேர்தல் விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மாத்தறை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க, பொலிஸ் அத்தியட்சகர் கயங்க ஹசந்த மாரப்பன ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் மற்றும் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பமாகின.
அதன்படி கடந்த ஜுலை 21 ஆம் திகதி சிறுமி தர்ஷி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
மாத்தறை பிராந்தியத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே மாத்தறை பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி வருணி கெளஷல்யா போகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் அவரை மீட்டனர்.
இதனையடுத்தே விசேட விசாரணைகள் ஆரம்பமாகின.
சிறுமியை மீட்ட பொலிஸ் குழு அவரை உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்து, வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியது.
இதன்போது சிறுமி தர்ஷி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வருணி கெளஷல்யா போகஹவத்த சிறுமியிடம் விசாரணை செய்து வாக்குமூலம் ஒன்றினை வைத்தியசாலையில் வைத்தே பெற்றார்.
அதில் ‘ வீட்டிலிருந்து வெளியேறி குறித்த கிராமத்தை கடந்து நடக்கும் போது எனக்கு அறிமுகமான அயல் வீட்டில் வசிக்கும் பஸ் சாரதியான சிறில் மாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னை அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சிறில் மாமா, தனது தொலைபேசியில் மேலும் பலருக்கு அழைப்பு ஏற்படுத்தி பலரை அங்கு வரவழைத்தார்.
அவர்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்’ என சிறுமி தர்ஷி பொலிஸ் பொறுப்பதிகாரி வருணியிடம் கூறவே உடனடியாக பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர்.
பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது மேலும் பல மனித மிருகங்களுக்கு சிறுமியை பங்குபோட்டமை தொடர்பில் இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த சாரதியை பிட்டபத்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயவீர ஊடாக மாத்தறை சிறுவர் மகளிர் விசாரணைப் பிரிவு கைது செய்தது.
அவரிடம் நடத்திய விசாரணைகளில் அவர் சிறுமியை பங்குபோட்ட மேலும் பலரை பொலிஸார் அடையாளம் கண்டு அவர்களையும் கைது செய்ய முடியுமானது.
இந்நிலையில் சிறுமியை தடுத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அக்குரஸ்ஸ பிராந்தியத்தின் சுற்றுலா ஹோட்டலையும் பொலிஸார் சுற்றி வளைத்தனர்.
இதன்போது அக்குரஸ்ஸ பிராந்தியத்தின் குறித்த சுற்றுலா ஹோட்டலின் உரிமையாளரையும் முகாமையாளர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
மூன்று ஹோட்டல் முகாமையாளர்கள், ஒரு பெண், தேரர் ஒருவர் உட்பட 16 பேரை இதுவரை கைதுசெய்துள்ளதாக தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
இவர்களில் 9 பேரை மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார விசாரணைப் பிரிவும் மற்றைய ஏழுபேரை பிட்டபத்தர பொலிஸாரும் கைதுசெய்ததாகவும் கைதானோரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து மொறவக்க நீதிவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விசாரணைப் பிரிவு இதுவரை செய்துள்ள விசாரணைகளில், வீட்டிலிருந்து வெளியேறிய குறித்த சிறுமியை பிட்டபத்தர, அக்குரஸ்ஸ, மாத்தறை, காலி, நெலுவ, இனிதும, நிட்டம்புவ உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஹோட்டல்கள் மற்றும் பாழடைந்த இடங்களில் வைத்து சந்தேகநபர்கள் பலர் தனித்தனியாகவும் கூட்டாகவும் பலாத்காரம் செய்துள்ளமை தெரியவந்தது.
வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி தர்ஷி, அன்றைய தினம் பகல் வேளையில் மட்டும் அதாவது 8 மணி நேரத்துக்குள் பிட்டபத்தர மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளில் 9 பேரினால் இரக்கமே இல்லாமல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அன்றைய தினம் இரவு இனிதும பகுதியில் வீடொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள குறித்த சிறுமி அங்கு வைத்து பல மனித மிருகங்களால் கூட்டாக பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவை தொடர்பிலான அனைத்து விபரங்களையும் விசாரணையாளர்கள் தற்சமயம் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மறுநாள் அதாவது ஜுலை 11 ஆம் திகதி குறித்த சிறுமி தர்ஷியை பலாத்காரம் செய்தோர் மாத்தறை பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தான் இத்தனை பலாத்கார கொடூரங்களையும் தாண்டி இச்சிறுமி இறுதியாக தனது தாய் அடிக்கடி தன்னை அழைத்துச் சென்று வந்த மாத்தறை பிரதேசத்தின் விஹாரை தொடர்பில் ஞாபகம் வந்து அந்த விஹாரைக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார்.
சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த தேரர்
“அந்த விஹாரையின் தேரரிடம் தனக்கு நடந்த கொடூரங்களைக் கூறிய நிலையில், குறித்த சிறுமியையும் அவரது குடும்பத்தையும் நன்கு அறிந்த அத்தேரர் அச்சிறுமியை தனது விஹாரை அறைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளார். பின்னர் அந்த அறையிலேயே அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்”.
இந்நிலையில் ஒருவாறு விகாரையில் இருந்து தப்பியுள்ள குறித்த சிறுமியை, மேலும் பலர் பலாத்காரம் செய்துள்ளனர். அத்தனை பேரும் சிறுமியிடம் நடந்த கொடூரங்களை கேட்ட பின்னர் அவருக்கு உதவுவதாக கூறி அழைத்துச் சென்றே இந்த கொடூரத்தை புரிந்துள்ளனர்.
இந்நிலையில் அச்சிறுமியை அறிந்த பலரும் அச்சிறுமியை காலி, பூஸா பகுதிகளில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்கு அவளை விற்பனைச் செய்ய முயன்றுள்ளனர்.
எனினும் சிறுமியின் வயதைக் கருத்தில் கொண்டு பல ஹோட்டல்கள் சிறுமியை கையேற்க மறுத்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் செய்துள்ள மேலதிக விசாரணைகளின்படி குறித்த சிறுமி அவரது 7 வயதில் முதன் முறையாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தர்ஷியின் சகோதரனின் நண்பர் ஒருவரே இவ்வாறு அவரை முதன் முதலாக பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின்னர் 10 வயதில் வயதுக்கு வந்துள்ள அச்சிறுமியை, ஒரு நாள் வீட்டுக்குள் நுழைந்த பிரதேசத்தின் இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின்னர் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தந்தை நடத்தி வந்ததாக கூறப்படும் வேலைத் தளத்தில் வேலை செய்த பல இளைஞர்களும் சிறுமியை வீட்டிலும் அருகில் உள்ள புதர்களுக்கும் அழைத்துச் சென்று தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.
குறைந்த பட்சம் 9 இளைஞர்களால் இவ்வாறு சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளார். இந் நிலையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பட்டியலானது 30 இற்கும் அதிகமானது என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்காக உதவி ஒத்தாசை புரிந்தோரின் பட்டியல் 50 ஐயும் தாண்டுகிறது. இவர்கள் தொடர்பிலும் தற்போது சிறப்பு விசாரணை நடைபெறுகிறது.
இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த எவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் வயது வந்தோரே.
இந் நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பல்வேறு சுற்றுலா விடுதிகளையும் பல பிரதேசங்களையும் தொடர்ச்சியாக பொலிஸார் சுற்றிவளைத்து வருகின்றனர்.
விஹாரையில் இருந்து தப்பிச் சென்ற பின்னரேயே சிறுமி ஏனைய பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தோரில், பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல மட்டங்களைச் சேர்ந்தோரும் அடங்குகின்றனர்.
தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு அவர்களது அரவணைப்பில் இருந்து விடுபட்ட ஒரு சிறுமிக்கு இந்த சமூகம் செய்த உதவி, அரவணைப்பு இது தான்.
இத்தனை கொடூரமான மிருகத்தனமான நடவடிக்கைகளை செய்துவிட்டு சமூகத்துக்குள் வலம்வரும் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டியவர்கள். இல்லையேல் அந்த விஷமிகளால் சமூகத்தில் உள்ள ஏனைய சிறுவர் சிறுமியரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
இலங்கையைப் பொறுத்தவரை சிறுவர்கள் மீதான வன்முறை அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திராவின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2015 ஆம் ஆண்டு 10732 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
இது கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பையே காட்டுகின்றது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 10315 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
2015 ஆம் ஆண்டின் துஷ்பிரயோக சம்பவங்களில் 2317 சம்பவங்கள் கொடுமைப்படுத்துதலுடன் தொடர்புடையது என சுட்டிக்காட்டும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை,1463 சம்பவங்கள் கல்வி உரிமை மறுக்கப்பட்டமையுடன் தொடர்புடையது என தெரிவிக்கின்றது.
அத்துடன் 433 பலாத்காரங்களும் 735 பாலியல் தொல்லைகள் தொடர்பிலான சம்பவங்களும் 365 பாலியல் ரீதியிலான துஷ்பிரயோக சம்பவங்களும், 885 பாலியல் சேஷ்டைகளுடன் தொடர்புபட்ட சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டில் கொழும்பு பகுதியிலேயே கூடுதலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்மாவட்டத்தில் மட்டும் 1,522 முறைப்பாடுகளும் கம்பஹா, குருநாகல், காலி, களுத்துறை, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முறையே 1187, 827, 700, 634, 622 ,573 , 540 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது.
வித்தியா, சேயா, சரண்யா என சிறுவர்கள் மீதான கொடூரங்கள் பட்டியல் படுத்தப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்த போதும் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை.
எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகக் கவனமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அதீத கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.
-எம்.எப்.எம்.பஸீர்-