நாடு முழுவதும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக 3 ஆண்டுகளில் 4,200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசிவருகின்றது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் புள்ளி விபரம் ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கோடை காலத்தில் 4,200 பேர் வெயில் தாகத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது.
தற்போது ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா,மத்தியப்பிரதேசம், மராட்டியம், ராஜஸ் தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயல்பைக்காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.
ஆந்திரா–தெலுங்கானா மாநிலங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாத்திரம் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் 113 டிகிரி வெப்பம் பதிவானது. இங்கு வெயில் கொடுமை தாங்காமல் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் உச்சகட்டத்தை எட்டுகிறது. ஏப்ரல், மே மாதங்களில்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதேவேளை, வடமாநிலங்களில் குளிருக்கு பலியானவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. அதுபோல் வெயிலுக்கு பலியானவர்களுக்கும் மத்திய அரசு ரூ.1½ லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கிருஷ்ண மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள் ளமை குறிப்பிடத்தக்கது.