புனே ஒரு தொழில் நகரம். பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள், கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் நிறைந்த நகரம்.
ஆனால், அதற்குப் பின்னால் சமூகத்தின் மிகமோசமான சடங்குகளில் ஒன்று (வெர்ஜினிட்டி டெஸ்ட்), மறைமுகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது பலருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கலாம்.
எல்லாத் திருமணங்களிலும் நிறையச் சடங்குகள் இருக்கும். ஆனால், ‘வெர்ஜினிட்டி டெஸ்ட்’ என்பது மஹாராஸ்ட்டிரா முழுவதும் குறிப்பிட்ட சில சமூகங்களுக்குள் செய்யப்படும் சடங்கு.
அதாவது, திருமணம் முடிந்த இரவு, கணவனும் மனைவியும் ஊர்ப் பஞ்சாயத்து ஒதுக்கித்தரும் இடத்திலோ, கல்யாண வீட்டுக்காரர்கள் ஏற்பாடு செய்த வீட்டிலேயோ உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு அந்த அறையில் வெள்ளை நிறத்திலேயே பெட்ஷீட்டுகள் கொடுக்கப்படும். அந்தப் பெண்ணின் உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்படும்.
கைகளில் இருக்கும் வளையல்களையும் எண்ணிவிட்டுதான் உள்ளே அனுப்புவார்கள். கைகளில் இருக்கும் வளையலை உடைத்துக் கீறி, ரத்தத்தை வெளியேற்றக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.
மறுநாள் காலை, அவர்கள் அறையில் சோதிப்பார்கள். அவர்கள் இருந்த பெட்ஷீட்டில் ரத்தம் இல்லாவிட்டால், அந்தப் பெண் திருமணத்துக்கு முன்பே யாருடனோ உடலுறவுகொண்டிருக்கிறாள் என்று முடிவுசெய்து, அந்தப் பெண்ணின் மீது வன்முறை செலுத்தப்படும் அல்லது ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிடுவர்.
=================================================================
• மனைவிக்கு முன் மாமியாருடன்… உகண்டா பழங்குடியின் உவ்வேக் கலாச்சாரம்!
• நவயுக திரௌபதி! 5 சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட ஒரே பெண்
=================================================================
”நான் அந்த டெஸ்டில் தோற்பேன் என்பது எனக்கு முன்பே தெரியும். ஏனெனில், திருமணத்துக்கு முன்பிருந்தே என் கணவருடன் நான் உடலுறவில் ஈடுபட்டு வந்தேன்.
எனவே, அன்றைய நாளில் கணவர் என்னை எப்படியாவது பாதுகாப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் பெட்ஷீட்டில் ரத்தம் இல்லை என்று பஞ்சாயத்தில் தெரிவித்தார்.
நான் புனிதமற்றவள் என்று அவர்கள் கூறினார்கள். என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. பல சமூகப் பணியாளர்கள் பேசி, எங்களை இணைத்துவைத்தனர்.
ஆனால், பஞ்சாயத்து எங்களைப் பொய்யான ஜோடி என்று ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டது. நான் கர்ப்பமாக இருந்தபோது, என் கணவர் ‘இது யாருடைய குழந்தை’ என்று கேட்டு என்னை மோசமாக அடித்துத் துன்புறுத்தினார்” என்று இந்தக் கொடுமையை விளக்குகிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண். அவருக்குக் குழந்தை பிறந்ததும், கணவர் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, பெற்றோருடன் வாழ்ந்துவருகிறார்.
பளுதூக்குதல், சைக்கிளிங் என விளையாட்டுத் துறையில் தீவிரமான செயல்பாடு காட்டுவதன் மூலமாகவும் ஒரு பெண், வெர்ஜினிட்டியை இழக்கலாம்.
இதெல்லாம் இல்லாவிட்டாலும், ஓர் ஆண், அந்தப் பெண்ணிடம் உடலுறவு கொள்ளும்போது எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்தும் இது மாறுபடும் என்பது அறிவியல் உண்மை. ஆனால், அதுபற்றி எந்தத் தெளிவும் இல்லாமல் இப்படி ஒரு கொடுமை அரங்கேற்றப்படுகிறது.
“என் பன்னிரண்டாவது வயதில், உறவினர் ஒருவரின் திருமணம் நடந்தது. மறுநாள் காலையில் அந்த மணப்பெண் செருப்புகளால் தாக்கப்பட்டார். அப்போது அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை.
சற்று வளர்ந்த பிறகுதான் புரிந்தது” எனச் சொல்லும் விவேக் என்கிற இளைஞர், அவருடைய திருமணத்தில் இந்தச் சடங்கை செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மேலும், இதற்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியும் வருகிறார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை விவேக்குடன் சேர்த்து, இதற்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் மூன்று இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
”இன்னும் பல இளைஞர்கள் முன்வந்து இந்தச் சடங்கை எதிர்க்க வேண்டும்” என்கிறார் விவேக்.
இதற்கு எதிரான கஞ்சர்பட் ஜாதியின் உள்ளேயே நிறைய போர்க் குரல்கள் எழுந்துவருகின்றன. இந்தப் பஞ்சாயத்துக்களுக்குச் சட்டரீதியான அதிகாரம் கிடையாது என்றாலும், ஜாதி மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை செய்தல், வெர்ஜினிட்டி டெஸ்ட்டுக்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தாக்குதல் என இவர்களின் பஞ்சாயத்து தடையின்றி அரங்கேறி வருகிறது.
”இதுபோன்ற வெர்ஜினிட்டி டெஸ்ட்டுகளை ஆண்களுக்கு நடத்துவார்களா? எங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட பஞ்சாயத்துக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கொதிக்கிறார்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்.