வைரமுத்து மீதான பாடகி சின்மயினுடைய பாலியல் குற்றச்சாட்டுதான், தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு. இதுபற்றி, தன்னுடைய முகநூலில் இன்று நேரடியாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் சின்மயி.
இந்த விவகாரத்தில் பலரும் எழுப்பிவரும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அதில் பதில் சொல்லியிருக்கிறார். இதோ… அந்த வீடியோ பதிவு அவரது வார்த்தைகளில்…
“எனக்குத் திருமணமாகும் வரைக்கும் என்னோட கரியர் பத்தி எதையுமே நான் முன்வந்து பேசியதில்லை. எல்லாமே என் அம்மாதான்.
வெளிநாடுகளில் புரோகிராம் நடத்துறதுக்கு சிங்கர்ஸைக் கூட்டிக்கிட்ட போகிற ஆர்கனைசர்ஸ் பற்றி சிங்கர்ஸ்கிட்ட கேட்டீங்கன்னா,
நிறைய கதைகள் சொல்வாங்க. சிங்கர்ஸோட பாஸ்போர்ட்டை வாங்கிவெச்சுட்டு திருப்பிக் கொடுக்காம இருக்கிறது, டிக்கெட்டை புக் பண்றேன்னு சொல்லிட்டு. பண்ணாம இருக்கிறதுன்னு இருப்பாங்க.
இதை நான் பாலியல் வன்முறையாகச் சொல்லலை. ஸோ, இன்டஸ்ட்ரியில் இந்த மாதிரி ஆர்கனைசர்கிட்ட பேசாதீங்கன்னு எல்லோரும் சொல்றதால, மத்தவங்களை மாதிரி நான் நிறைய வெளிநாட்டுப் புரோகிராமுக்குப் போனதில்லை.
`கன்னத்தில் முத்தமிட்டால்’ வந்த புதுசுல, ஒரு தடவை ஸ்டேஜ்ல பாடி முடிச்சுட்டு இறங்கும்போது கீழே விழுந்துட்டேன். அதைப் பார்த்த வைரமுத்து சார், மறுநாள் லேண்ட் லைன்ல அம்மாவுக்குப் போன் பண்ணி, `விழுந்ததுல ஊமைக்காயம் ஏதாவது பட்டிருக்கப் போகுதும்மா. பார்த்துக்கோங்க’னு சொன்னார்.
அவ்ளோ பெரிய மனுஷன், அக்கறையா விசாரிக்கிறாரேன்னு அவர் மேலே மரியாதை வந்துச்சு. இன்டஸ்ட்ரியில் பெரிய மனுஷன், வயசானவரு அவரே, `ஸ்விட்சர்லாந்தில் ஒரு கான்சர்ட். வாங்க’னு சொல்லும்போது, அவநம்பிக்கை வர்றதுக்கு சான்ஸ் இல்லையே.
சுவிஸ் சுரேஷ், எங்க ஆர்கனைசர். 2004-2005-ல் அவருக்குக் கொஞ்சம்கூட ஆங்கிலமே வராது.
சுவிஸில் பேசக்கூடிய ஒரு வகை ஜெர்மன் மொழிதான் தெரியும். நான் அப்பத்தான் ஜெர்மன் மொழியில் டிகிரி வாங்கியிருந்தேன். அதனால், எனக்கு யார் ஜெர்மன்ல என்ன பேசினாலும் நல்லா புரியும்.
நாங்க தங்கியிருந்தது சுரேஷ் சார் வீட்லதான். ஹோட்டல தங்குறது பாதுகாப்பில்லை, அவங்களுக்கு ஃபைனான்ஸியலா இழுத்துவிட வேண்டாம், வெஜிடேரியன் உணவுகள் கிடைக்காது போன்ற காரணங்களால், யுரோப் நாடுகளுக்கு கான்சர்ட் செய்யப்போறவங்க ஆர்கனைசர் வீட்டிலேயேதான் தங்குவாங்க. இதுதான் வழக்கம்.
அப்படி ஜெர்மன் மொழியில பேசிட்டிருக்கும்போது, அவரோட சொந்த மகளையே, வைரமுத்து சார் இருக்கும்போது தனியா அனுப்ப வேணாம்னு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு.
ஏன் அப்படிச் சொன்னாருன்னு அப்போ எனக்குப் புரியலை. கான்சர்ட் சனி, ஞாயிறு முடிவடைஞ்சிருச்சு. ஆர்கனைஸ் ஏற்பாடு பண்ணிட்டிருந்தவங்க, `திங்கள்கிழமையிலிருந்து நாங்க எல்லாம் வேலைக்குப் போகணும்.
உங்களை இன்னொருவர்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்றோம். நீங்க போய் ஹோட்டல்ல இருங்க’ அப்படின்னாங்க. ஆனா, எங்ககூட வந்திருந்த மாணிக்க விநாயகம் ஐயா கிளம்பிட்டாரு. இனியவன் ஐயா கிளம்பினாரான்னு தெரியலை.
ஏன்னா, அவரு எங்ககூட தங்கலை. மாணிக்க விநாயகம் ஐயா கிளம்பினதுக்கு அப்புறம்தான் எங்கம்மா, `எங்களை மட்டும் ஏன் இங்கேயே வெச்சிருக்கீங்க. எங்களுக்கும் டிக்கெட் போட்டு அனுப்புங்க’னு கேட்டப்போதான், இந்த மொத்த நிகழ்வும் நடந்ததாக எங்கம்மா பல நாள்களுக்குப் பிறகு சொன்னாங்க.
அது முடிந்து, கான்ட்ராக்ட் வவுச்சர்ல சைன் பண்ணி பேமென்ட் வாங்கும்போது, வைரமுத்து தகாத முறையில் நடந்துக்கிட்டது, அவங்க வீட்ல இருந்தவங்களுக்குத் தெரியும்,
ஆபீஸ்ல இருந்தவங்களுக்கும் தெரியும். அது உண்மை. இதெல்லாம் நடந்தது 2004-05-ல். அப்போவெல்லாம் பாதிப் பேர் வீட்ல இன்டர்நெட் கிடையாது.
மொபைல்போனும் கொஞ்சப் பேர் கையில்தான் இருந்துச்சு. இதெல்லாம் நடைமுறைக்கு வந்து ஃபேஸ்புக்குல கருத்துச் சொல்றது எல்லாம் கடந்த 3 அல்லது 4 வருடங்களாகத்தான்.
ஸோ, 2004-05-ல் தனியா இருந்த என்னையும் எங்க அம்மாவையும், `ஏன் போலீஸ்கிட்ட சொல்லலை. ஏன் இன்ட்ஸ்டிரியில சொல்லலை’னு கேட்கிறீங்க.
இப்போ நான் இவ்வளவு பிரபலமாகி சொல்லும்போதே, `நீ பப்ளிசிட்டிக்குச் சொல்றேன்னு சொல்றீங்க. 15 வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா இந்தத் தமிழ்ச் சமூகம் அதை ஒத்துண்டிருக்குமா? ஏன் மீடியாவுக்குப் போகலைன்னு கேட்டா, டிவி வாசல் போய் நின்னு, வைரமுத்து ஐயா இப்படி நடந்துக்கிட்டாருன்னு எங்களை கோஷமிடச் சொல்றீங்களா?
பல பேரு இது பொலிடிக்கல் மோட்டிவேட்னு சொல்றாங்க. இப்போ ஏன் சொல்றேன்னா, இப்பத்தான் அதுக்கான மனதைரியம் வந்திருக்கு.
வைரமுத்துவை ஏன் திருமணத்துக்கு அழைச்சீங்கன்னு ஆளாளுக்கு மீம் போட்டுத் தள்றீங்க? இன்டஸ்ட்ரியில் பத்திரிகை வைக்கணும்னா பி.ஆர்.ஓ-களை அணுகணும். அவங்களைக் கூப்பிட்டு, யார் யாருக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு பேசறப்போ, வைரமுத்து பேர்தான் லிஸ்ட்ல டாப்ல இருக்கும். எல்லா பி.ஆர்.ஓ-கிட்டேயும் எனக்கு வைரமுத்துவைக் கூப்பிட இஷ்டமில்லைன்னு சொல்ல முடியுமா? அவங்க குடும்பத்துல எல்லோருக்கும் இன்விடேஷன் வைக்கிறேன். அப்பாவுக்கு வைச்சுட்டீங்களான்னு கேட்டா என்ன சொல்றது? இதையெல்லாம் நீங்க யோசிச்சுப் பார்க்கணும்.
`புரூஃப் எங்கே?’னு கேட்கறீங்க. என்கூட இருக்கிற சிங்கர்ஸுக்கு வைரமுத்து தகாதமுறையில் நடந்துக்கிட்டாருன்னு சொல்றதுக்கு தைரியம் இல்லை.
பொலிடிக்கல் பவரை வெளிப்படையா காட்டுறவரை எதிர்த்து 15 வருஷத்துக்கு முன்னால நான் எப்படிப் போராட முடியும்? 15 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி விஷயத்துக்கு கேஸ் போட முடியாது.
இப்போ சட்டங்கள் மாறி இருக்கு. சின்ன வயசுல ஒரு குழந்தைக்குத் துன்புறுத்தல் நடந்திருந்தா, அவங்க வயதான பிறகும் கேஸ் போடலாம். இதெல்லாம் சமீபத்துல வந்த மாற்றம்.
`நீ என்ன ஒழுக்கமானவளா?’னு கேட்டா, ஆமா, நான் ஒழுக்கமானவதான். நான் சொல்றது நிஜம்தான். நடந்தது வைரமுத்துவுக்குத் தெரியும், சுவிஸ் சுரேஷுக்குத் தெரியும்.
அங்கே இருக்கிற இன்னொரு ஆர்கனைசரும், `வைரமுத்து உங்ககிட்ட தவறா நடந்துகிட்டது எனக்குத் தெரியும்’னு மெசேஜ் அனுப்பினாரு.
இனியவன் இப்படியெல்லாம் நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்றாரு. அவருகூட நின்னு பார்த்தாரா? நான் பத்தினியானு கேட்கிற அருகதை யாருக்கும் இல்லை.
அதை எங்க வீட்ல விட்டுருங்க. பாலியல் துன்புறுத்தல் செஞ்சவங்கதான் வெட்கப்படணும். ஆளானவங்க எதுக்கு வெட்கப்படணும்? எனக்கு வெட்கமில்லை. நன்றி. வணக்கம்!”