கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் ‘எல் கிளாசிகோ’ நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன.
முத்தம் பரிமாறிக் கொள்ளும் மெஸ்சி, ரொனால்டோ
ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் ‘எல்கிளாசிகோ’ மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள்.
‘எல் கிளாசிகோ’ மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும்.
ரியல்மாட்ரிட்- பார்சிலோனா அணிகளின் மோதல் ரணகளத்தில் முடிவடைய அரசியல் பின்னணியும் இருக்கிறது. ஸ்பெயினுக்கு மாட்ரிட் தலைநகரம்.
ஸ்பெயினில் உள்ள கட்டலான் மாகாணத்தின் தலைநகரம்தான் பார்சிலோனா. ஸ்பெயினிடம் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டுமென்று கட்டலான் மாகாண மக்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஸ்பெயின் அரசு மறுத்து வருகிறது. இதனால், பார்சிலோனா வெற்றி பெற்று விட்டால், ஸ்பெயினையே வீழ்த்தி விட்டது போன்ற மிதப்பில் கட்டலாண் மக்கள் கருதி ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ரியல்மாட்ரிட் வெற்றி பெற்று விட்டால், ‘ஹாலா மாட்ரிட்’ கோஷம் விண்ணைப் பிளக்கும்.
மைதானத்துக்கு வெளியே மட்டுமல்ல உள்ளேயும் மோதல்கள் அரங்கேறும். இது கெளரவத்துக்கான போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வர்.
ஃபவுல் ஆட்டத்தில் ஈடுபடுவது என தண்டனைக்குரிய அத்தனை விஷயங்களும் ‘எல்கிளாசிகோ’ மோதலில் அரங்கேறும். இது தவிர, ரொனால்டோ – மெஸ்ஸி ரசிகர்களும் தனியாக மோதலில் ஈடுபடுவார்கள்.
இணையத்தில் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பார்கள். மெஸ்சியை பற்றி ரொனால்டோ தரப்பும், ரொனால்டோ பற்றி மெஸ்சி தரப்பும் அவதூறுகளைப் பரப்புவது, கெட்ட பெயரை ஏற்படுத்துவது போன்ற படங்களை இணையங்களில் பகிர்வதுதான் இவர்களின் முக்கிய பணி.
இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல் பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட் கேம்ப் நுவில் நடந்தது. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
இரண்டாவது மோதல் மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபு மைதானத்தில் நடைபெறுகிறது. இது ரியல் மாட்ரிட் மைதானம். சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் படுதோல்வியடைந்து பார்சிலோனா அணி ஏற்கனவே வெளியேறி விட்டது.
மாட்ரிட் நகரைச் சேர்ந்த ரியல்மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. எனவே இதனை வைத்தும் ‘ஹாலா மாட்ரிட்’ கோஷம் எழுப்பப்படும்.
பார்சிலோனா அணி வீரர்களை. ரசிகர்களை ரியல்மாட்ரிட் ரசிகர்கள் கேலி செய்யக் கூடும். ரியல் மாட்ரிட்டை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி இழந்த பெருமையை மீட்க பார்சிலோனா முயற்சிக்கும. வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால், மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.