சாவகச்சேரி கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொடிகாமம் – கச்சாய் பகுதியில், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியே, இவ்வாறு அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பாடசாலையில் தரம் 10, 11 மாணவர்களின் பெற்றோருக்கான கூட்டம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை, மைதானத்தில் வைத்து பாடசாலை அதிபர் தண்டித்துள்ளார்.
இதன்போதே முச்சக்கர வண்டியின் கம்பி ஒன்றால் அதிபர் அடித்துள்ளதாக, குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘ஆவா’வை கோட்டைவிட்ட பொலிஸார்
ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, கைது செய்வதற்காக தாம் துரத்தியதாகவும் அதன்போது அவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் தப்பிச் சென்றுள்ளதாகவும், யாழ்ப்பாணப் பொலிஸார், இன்று (20) தெரிவித்தனர்.
இச்சம்பவம், கொக்குவில் சந்தியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை, கொக்குவில் சந்திக்கு அருகில் பொலிஸார் மறிக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற இருவரையும், பொலிஸார் துரத்திச் சென்ற வேளையில், கொக்குவில் சந்தியில் வைத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் நோக்கி வந்து கொண்டிருந்த காருடன் மோதி, இளைஞர்கள் இருவரும் விபத்துக்குள்ளானர்கள்.
இதையடுத்து, குறித்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே, மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஆவா குழுவினருடையது எனவும் தப்பிச்சென்ற இருவரும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.