2017ஆம் ஆண்டு ஒரு தீர்வுத்திட்டத்தனை நடைமுறைப்படுத்தப்படும் ஆண்டாக சிறுபான்மை மக்களாகிய நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இழுத்தடிப்பு செய்யும் பேச்சுவார்த்தையாக தொடர்ந்து போய்க்கொண்டிருக்காமல் ஒரிரு மாதங்களுக்குள் தீர்வுத்திட்டத்தினை முன்வைத்து சரியான செயல்முறையை நடைமுறைப்படுத்தப்படவேண்டிய தேவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டடக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 08ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 08ஆம் திகதி வரையில் ஜனாதிபதியின் பதவியேற்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்,மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இஙகு தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதன்கீழ் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறந்துவைக்கப்படவுள்ளதுடன் ஜனாதிபதியின் போதையொழிப்பு செயற்றிட்டத்திட்டம் தொடர்பான பிரதான நிகழ்வும் ஏறாவூரில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல முற்றுமுழுதாக போதைப்பொருள் ஒழிப்பதும் மதுபாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பது தொடர்பான செயற்பாடுகள் மற்றும் மர நடுகையினை ஊக்குவித்தல் போன்ற செயற்;பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 01ஆம் திகதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தினை போதைப்பாவனையை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.இது ஜனாதிபதியின் முக்கியமான செயற்றிட்டமாகும்.
சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.
தீர்மானங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துவரும் அதேவேளையில் அதனை குழப்புவதற்கான சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் விளங்கியுள்ளோம்.
இருந்தபோதிலும் 2017ஆம் ஆண்டு ஒரு தீர்வுத்திட்டத்தனை நடைமுறைப்படுத்தப்படும் ஆண்டாக சிறுபான்மை மக்களாகிய நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இழுத்தடிப்பு செய்யும் பேச்சுவார்த்தையாக தொடர்ந்து போய்க்கொண்டிருக்காமல் ஒரிரு மாதங்களுக்குள் தீர்வுத்திட்டத்தினை முன்வைத்து சரியான செயல்முறையை நடைமுறைப்படுத்தப்படவேண்டிய தேவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது.
அதற்கான முழு ஒத்துழைப்பினையும் சிறுபான்மை சமூகம் வழங்கும்.தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இதில் மிகவும் தெளிவாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளது.
மத்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் கடந்த 24ஆம் திகதியே எமக்கு கிடைத்தன.அது தொடர்பில் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலமைச்சர்களை அழைத்து இந்த சட்ட மூலத்தினை திருத்துவதற்கு தயாராகவிருப்பதாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.
மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படாத அபிவிருத்திக்கான சட்டமூலத்திற்கு நாங்கள் தடையாக இருக்கப்போவதில்லை.
மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது அதனை பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்படப்போவதில்லை.
இதேவேளை அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும்போது விசேட அபிவிருத்தி சட்டமூலம் தேவையா என்கின்ற கேள்வியும் உள்ளது.
இதுதொடர்பிலும் நாங்கள் தீவிரமாக ஆராய்வோம் என இங்கு கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.