இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது.
இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையேயான ஐந்து போட்கடிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1:30 க்கு ஆரம்பமாகியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பாக ரோகித் சர்மா 162 ஓட்டத்தையும், ராயுடு 100 ஓட்டத்தையும், தவான் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.
378 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதற்கமைய சந்திரபோல் ஹெம்ராஜ் 14 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் எதுவித ஓட்டமின்றியும், கிரேன் பவுல் 4 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹேட்மெயர் 13 ஓட்டத்துடனும், ரோவ்மன் பவுல் ஒரு ஓட்டத்துடனும், சாமுவேல்ஸ் 18 ஓட்டத்துடனும், பெய்பியன் அலன் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
இதனால் மேற்கிந்திய அணி 18.5 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை மட்டும் பெற்று தடுமாறியது.
இதற்கடுத்து அணித் தலைவர் ஹோல்டரும் அஸ்லி நர்ஸ்ஸும் ஜோடி சேர்ந்தாட 21.4 ஆவது ஓவரில் மேற்கிந்திய அணி 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் 22 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் நர்ஸ் 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய கிமோ பவுலும் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மேற்கிந்திய அணி 27.5 ஆவது ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்தும் கேமர் ரோச் களமிறங்கி துடுப்பெடுத்தாட, மறுமுணையில் அணித் தலைவர் ஹோல்டர் 61 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 1 நான்கு ஓட்டம் அடங்களாக சர்வதேச கிரிக்கெட் ரங்கில் 7 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ய, 35 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஓட்டங்களை தொட்டது.
எனினும் இறுதியாக மேற்கிந்திய 36.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 224 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. ஆடுகளத்தில் ஹோல்டர் 54 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக கலீல் அஹமட், குல்தீவ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னியில் உள்ளது.