திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், 4வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழியை தோண்ட பயன்படுத்தப்பட்ட ‘ரிக்’ இயந்திரத்தின் செயல்திறன் இதற்கு போதவில்லை என்பதால் நேற்று இரவு இரண்டாவது ‘ரிக்’ இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.
“100 அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் இந்த விஞ்ஞானம் எதற்காக?” – ஹர்பஜன் சிங் கேள்வி
சுஜித்தை பத்திரமாக மீட்க 98 அடி இலக்கு வைக்கும் பேரிடர் மீட்பு குழு
இந்நிலையில், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமை கு. மதன் பிரசாத்
அந்த இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று எமது செய்தியாளர் மு.ஹரிஹரன் களத்தில் இருந்து தெரிவித்தார். இதனால் சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழி தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வந்தாலும் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (திங்கள்கிழமை) காலையில் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த நடிகர் தாமு, அங்கு சிறுவன் சுஜித் மீட்புக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்.
கு. மதன் பிரசாத்
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார்.
சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
”தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறு, நீரின்றி போனதால் முடப்பட்டது. ஆனால், தற்போது மழை பெய்வதால், மண்ணால் மூடப்பட்டிருந்த இந்த ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் அகன்றுள்ளது. அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சுஜித் உள்ளே விழுந்துள்ளான்,” என்று சம்பவத்தை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
முன்னதாக, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுஜித்தின் தற்போதைய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அங்குள்ள கள நிலவரத்தை 10 முக்கிய தகவல்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
1. சிறுவன் சுஜித் சுமார் 80 லிருந்து 90 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கீழே சென்றுவிடாமல் இருக்க சிறுவனின் கைகள் பிடித்து (ஏர் லாக்) வைக்கப்பட்டிருக்கின்றன.
2. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து சுமார் 3 மீட்டர் தூரத்தில் ரிக் இயந்திரங்கள் கொண்டு ஒரு புதிய துளை போடப்படுகிறது. அந்த குழி ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் விட்டம் உடையதாகதோண்டப்படுகிறது.
3. முதலில் குழித் தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்துவிட்டதால், நேற்று இரவு இரண்டாவது ‘ரிக்’ இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.
4. ரிக் இயந்திரம் பழுதானதற்கு ஒரு முக்கிய காரணம் புதிதாக தோண்டப்படும் இடத்தில் இருக்கும் பாறைகள். 10 அடி ஆழத்திலேயே பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தின் பற்கள் சேதம் அடைந்துள்ளன.
5. புதிதாக தோண்டப்படும் ஆழ்துளை கிணறு சுமார் 100 அடிக்கு தோண்ட பேரிடர் மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
6. நூறு மீட்டர் தோண்டியவுடன் பக்கவாட்டில் சிறுவன் சுஜித் விழுந்த குழியை நோக்கி டிரில் செய்யப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
7. புதிதாக தோண்டப்படும் குழியில் 2 தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று சிறுவன் அகப்பட்டிருக்கும் குழிக்கு செல்வதற்கான டிரில்லிங் வேலையை செய்ய உள்ளனர்.
8. இந்த மீட்புப்பணியில் சுமார் 70 பேர் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
9. சுஜித் மீட்கப்பட்டவுடன் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு தயார் நிலையில் மருத்துவ குழு இருக்கிறது.
10. சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.