பெங்களூர் : சென்னை, பெங்களூரில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்றுடன் முடிந்தது.
இந்த வழக்கில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா அறிவித்துள்ளார். அன்றைய தினம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து சேர்த்ததாக ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசுவாமி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். அதையேற்று விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்திய பின், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னையில் 1996 முதல் 2003 வரை விசாரணை நடந்தது.
பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2004ம் ஆண்டு பெங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 18 ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூரில் நடந்த இந்த வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதற்கு முன்பாக, 42 நாட்களுக்கு மேலாக குற்றவாளிகள் தரப்பில் இறுதிவாதம் செயயப்பட்டு வந்தது.பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் தங்களுடைய இறுதிவாதத்தை வியாழனன்று கண்டிப்பாக முன்வைக்க வேண்டும்’ என்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா கெடு விதித்தார்.
அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்களிக்கக் கோரி வக்கீல் சி.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 12.15 மணி வரை குற்றவாளிகள் தரப்பில் வக்கீல் பி.குமார் இறுதிவாதம் செய்தார்.
அப்போது, ‘‘இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டது என்பதை ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் தனிப்பட்ட சொத்து, அவர்கள் சார்ந்த கம்பெனிகள் மூலம் கிடைத்த வருவாய் அனைத்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்ததிலும் தவறான கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்’’ என்று வக்கீல் குமார் வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து அரசு வக்கீல் முருகேஷ் எஸ்.மரடி வாதம் செய்தபோது கூறியதாவது: வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மூலம் வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து,குற்றவாளிகளுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்து சேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் உரிய சாட்சி, ஆதாரங்களுடன் குற்றபத்திரிகையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிரிகள் சொல்வதை போல், இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடரப்பட்டதல்ல.
நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம்.உதாரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு சந்தா மூலம் ஸி14 கோடி கிடைத்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சந்தா பெற்றதற்காக ஆவணங்கள் அனைத்தும் ஓரிஜினலாக இல்லாமல் நகலாக இருந்தது. இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஓரிஜினல் ஆவணங்கள் காரில் எடுத்து சென்றபோது திருடு போய்விட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பு சாட்சியத்தின் போது ஓரிஜினல் சந்தா படிவங்கள் காட்டப்பட்டது. காணமால் போன சந்தா படிவம் எப்படி கிடைத்தது? உண்மையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ரூ.14 கோடி சந்தா மூலம் வருவாய் கிடைக்கவில்லை.
ஜெயலலிதாவின் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை சந்தா என்ற பெயரில் முதலீடு செய்துள்ளனர். அதேபோல், சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்திற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் ஸி6 கோடி சந்தா (ழிஷீஸீஸிமீயீuஸீபீணீதீறீமீ) மூலம் பெற்றதாக கூறியுள்ளனர்.
ஆனால், கேபிள் டி.வி.நெட்வொர்க் கட்டுப்பாடு சட்டம் 1995ன்படி, கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மூலம் முதலீடாக பெறப்படும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த பணமும் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதில் முதலீடு செய்யப்பட்டவைதான்.
மேலும், வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் பொருளாதார பின்னணியை பார்க்கும்போது, அவரது தந்தை வழியில் பூர்வீக சொத்து 5 ஏக்கர் நிலம் இருந்தது.
அவரது கண்வர் அரசு துறையில் பணியாற்றியுள்ளார். 3 மற்றும் 4வது குற்றவாளிகளின் பொருளாதாரமும் பெரியளவில் இல்லை. வருவாய் துறை அதிகாரி கொடுத்துள்ள வருமான சான்றிதழில் சுதாகரனின் ஆண்டு வருமானம் ஸி40 ஆயிரம் என்றும், இளவரசியின் ஆண்டு வருமானம் ஸி48 ஆயிரம் எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு குறைவாக பொருளாதார நிலையில் உள்ளவர்கள் எப்படி பல கம்பெனிகளில் இயக்குனராகவும், பங்குதாரராகவும் இருந்து கோடிக்கணக்கில் எப்படி முதலீடு செய்ய முடியும்?மேலும், அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் வழக்கு காலத்திற்கு முன் தொடங்கப்பட்டிருந்தாலும், வழக்கு காலத்தில்தான் வங்கி கணக்கு தொடங்கி பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஏஜென்டுகளாக மற்ற மூன்று பேரும் செயல்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆகவே, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகம் சொத்து சேர்த்துள்ளது உண்மை என்பதால், குற்றவாளிக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு மரடி வாதிட்டார்.
தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி: அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் 15 புத்தகங்கள் அடங்கிய ஆவணங்களை எழுத்து மூலமாக நீதிபதியிடம் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கொடுத்தார். பின்னர், ஜெயலலிதா தரப்பில் வக்கீல் பரணிகுமார், சசிகலா தரப்பில் வக்கீல் மணிசங்கர், சுதாகரன் தரப்பில் வக்கீல் ஜெயராமன், இளவரசி தரப்பில் வக்கீல் அசோகன் ஆகியோர் எழுத்து மூலமான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் வக்கீல்கள் இராம.தாமரைசெல்வன், சரவணன், நடேசன் ஆகியோர் எழுத்துபூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இவ்வழக்கு தொடர்பாக அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. மேலும், எழுத்து மூலமாக கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டடுள்ளது.
விசாரணை முடிந்துள்ள நிலையில், கர்நாடக குற்றப்பிரிவு சட்ட விதியின்படி விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வழக்கில் சாட்சிகள், எழுத்து பூர்வமான ஆதாரங்கள் அதிகம் உள்ளதால், கூடுதலாக ஒருவாரம் அவகாசம் எடுத்து கொண்டு செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன்.
தீர்ப்பு வழங்கும் நாளில் குற்றவாளிகள் நான்கு பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்படும்’’ என்று கூறினார்.இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
‘நீதி கிடைக்கும்’
தி.மு.க முன்னாள் எம்.பி. இரா.தாமரைசெல்வன் கூறும்போது, ‘‘சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக திசை திரும்பியதை பார்த்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் க.அன்பழகன் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தேன்.
அதன் மூலம் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் நீதிமன்ற அனுமதியுடன் அரசு வக்கீல்கள் பவானிசிங், முருகேஷ் மரடி ஆகியோருக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
தற்போது விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பினால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
நேற்று விசாரணையின் கடைசி நாள் என்பதால் கர்நாடகா தி.மு.க அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் அக்கட்சியினரும், மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி தலைமையில் அக்கட்சியினரும் நீதிமன்றத்தில் குவிந்தனர்.