முல்லைத்தீவு, சாளை கடற்பரப்பிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட ஹெலிகொப்டரின் பாகங்கள், ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்றினுடையது என விமானப்படை உறுதி செய்துள்ளது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகொப்டர், 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரஷ்ய விமானிகள் இருவர் உட்பட 8 விமானிகளுடன் காணாமல் போனது என்றும் விமானப்படை கூறியது.
சாளை கடற்பரப்பிலிருந்து சுமார் ஒரு கடல்மைல் தூரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஹெலிகொப்டரின் பாகங்களை ஆய்வு செய்யுமாறு விமானப்படைத் தளபதி கோலித்த குணதிலக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட அதிகாரிகளினால் இந்த ஹெலிகொப்டர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமாக எம்.ஐ 24 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் சி.எச்.614ஆம் இலக்கத்தைச் சேர்ந்ததாகும் என அவ்வதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த ஹெலிகொப்டர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக விமானப்படை தெரிவிக்கின்றது.
இந்த ஹெலிகொப்டரில், விமானப்படையைச் சேர்ந்த விமானிகளான மேஜர் வோவா மில்லர் (ரஷ்யா), மேஜர் வை.ராமனொவ் (ரஷ்யா), ஏ.மலலசேகர (இலங்கை), எல்.ஏ.சி.அருணசாந்த (இலங்கை), எல்.ஏ.சி.சமரகோன் (இலங்கை), பி.எச்.ஏ.சேனசிங்க (இலங்கை), கோப்ரல் நந்தசேன (இலங்கை) மற்றும் எல்.ஏ.சி.லியனகே ஆகியோரே இறுதியாகப் பயணித்துள்ளனர்.
ஊயிரிழந்தவர்களில் இருவரின் உடல்கள் மாத்திரமே அக்காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
பலாலி விமானப்படைத் தளத்திலிருந்து ஹிங்குரங்கொட விமானப்படைத் தளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்தது.