20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் மிர்புரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 2–வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதன்படி முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் டீகாக் 6 ரன்களுக்கும் அம்லா 22 ரன்களுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.இதையடுத்து களம் இறங்கிய டூ பிளஸிஸ் அபாரமாக ஆடி 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. டூமினி ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்தார்.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 ஓவர்களுக்கு 22 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் ரகேனாவும் களம் இறங்கினர்.
அணியின் ஸ்கோர் 39 ரன்களாக இருந்த போது ரோகித்சர்மா 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.இதையடுத்து 32 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே ஆட்டம் இழந்தார்.
விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் விராட் கோக்லி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவருடன் இணைந்து சிறிது நேரம் அதிரடி காட்டிய யுவராஜ் சிங் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா தென் ஆப்ரிக்காவின் பந்துகளை சிதறடித்தார்.
10 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 19.1 ஓவர்களில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
விராட் கோக்லி அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.