கே பி இனால் தயாரிக்கப்பட்டு, பிரபாகரனின் கவனத்திற்கு அனுப்பப்பட்ட 16 பக்கத் திட்டத்தை தம்மால் ஏற்க முடியாது என பிரபாகரன் தெரிவித்த நிலையில் பிரச்சனைகள் மேலும் சிக்கலாகிச் சென்றன.
2009ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அப்போதைய வெளியுறவுச் செயலாளர் பாலித ஹோகன அவர்களை அல் ஜ ஜீரா என்ற தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி கண்டது.
அப்போது 2009ம் ஆண்டு பெப்ரவரி நடுப்பகுதிக்கும், ஏப்ரல் நடுப்பகுதிக்கும் இடையேயான காலத்தில் இலங்கை விமானப் படையினர் பாதகாப்பு வலையத்திற்குள் குண்டுகள் வீசியதற்கான ஐ நா செய்மதி ஆதாரங்களைக் காட்டி பதிலை வினவியபோது அத் தாக்குதல்களை ஏற்றுக் கொண்ட செயலாளர், அத் தாக்குதல்கள் புலிகளின் ஏவுகணைகளை இலக்கு வைத்ததாக புதிய விளக்கம் அளித்தார்.
அத்துடன் ஆரம்பத்தில் இவற்றை முற்றாக நிராகரித்து வந்த அவர் தற்போது புதிய நியாயங்களைக் கற்பித்தார்.
இதே போன்று ஜனாதிபதி ராஜபக்ஸ ஒரு முறை ராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்ற தமது விளக்கத்தை ஏற்க முடியாவிடில் அதற்கு மேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற அவர், தாம் அவ்வாறு பயன்படுத்தவில்லை எனக் கூறினால் அதில் வேறு விளக்கம் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் ராணுவம் வைத்திசாலைகளைத் தாக்கியதற்கான சாட்சியங்கள் குறிப்பாக வெளி நோயாளர் பிரிவில் காத்திருந்த 23 நோயாளிகள் கொல்லப்பட்டதோடு, இரண்டு வைத்திய அதிகாரிகள் உட்பட 34 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த வைத்தியசாலை வைத்தியர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைக் கண்காணிப்பகம் இரண்டாவது தாக்குதலின் போது மேலும் 45 பேர் மரணமடைந்ததுடன் 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் எனத் தெரிவித்திருந்தது.
இத் தாக்குதல்களை ராhணுவப் பேச்சாளர் நாணயக்காரவும் மறுத்திருந்தார்.
2009ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி கூட்டுத் தலைமை நாடுகளின் தூதுவர்களை மகிந்த அழைத்திருந்தார்.
அச் சந்திப்பில் ஏப்ரல் 27ம் திகதி முதல் மே 3ம் திகதி வரை இடம்பெற்ற தாக்குதல்களின் செய்மதிப் புகைப்படங்களை அமெரிக்க துணைத் தூதுவர் மகிந்தவிற்கு காட்டினார்.
இவை கனரக ஆயுதங்கள் மூலமான தாக்குதல்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களாகும்.
இச் சாட்சியங்களை நிராகரிக்க முடியாத நிலையில் அப் பகுதியில் வைத்தியசாலைகள் எதுவும் இருக்கவில்லை எனவும் ராணுவம் சிவிலியன்களைத் தாக்குவதில்லை எனவும் அங்கு தெரிவித்தார்.
அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்படும் மாதாந்த அறிக்கையில் களத்திலுள்ள ராணுவ அதிகாரிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். இவற்றை அவர்கள் மேலதிகாரிகளுக்கு மறைத்திருக்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.
செய்மதி புகைப்படங்களைப் பார்த்த பின்னர் ஜனாதிபதியால் எதனையும் மறுக்க முடியாத நிலையில் ராணுவத்தின் செயற்பாடுகள் குறித்த உள்ளக விசாரணையை நடத்தியதாக அவ் அறிக்கை மேலும் கூறியது.
கூட்டுத் தலைமை நாடுகளின் தூதுவர்களோடு அரசு நடத்திய உரையாடலின் போது பிரச்சனையை எவ்வாறு முடித்து வைப்பது? என்ற விபரங்களுக்குள் இறங்கியது.
குறிப்பாக வடக்கு அபிவிருத்தி பற்றிப் பேசியது. அப்போது புலிகள் 6 கிலோமீற்றருக்கும் குறைவான பகுதிக்குள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.
பொது மக்கள் எவருக்கும் துன்பம் நேராது எனவும், கனரக ஆயுத பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மகிந்த அங்கு மீண்டும் கூறினார்.
அதே வேளை புலிகள் தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்காவிடில் இம் முறை மக்களை மீட்க பாரிய அளவில் அரசு முன்னேறும் எனவும் தெரிவித்தார்.
மறு பக்கத்தில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்ல, ராணுவமும் தொடர்ந்து முன்னேறிச் சென்றது.
இச் சமயத்தில் 2009ம் ஆண்டு இலங்கை நிலவரம் தொடர்பான அறிக்கை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அவ் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.
….. 2009ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி அளவில் துப்பாக்கிப் பிரயோகம் அற்ற வலையம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் குறிப்பாக வலைஞர் மடம் என்ற இடத்திலுள்ள வைத்திசாலை மேலாக இலங்கை ராணுவ ஆளில்லா உளவு விமானம் வேவு பார்த்தது.
அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்த வைத்தியசாலை தாக்கப்பட்டு 5 பேர் மரணமடைந்ததுடன், வைத்திய அதிகாரி உட்பட 30 பேர் காயமடைந்தனர். வைத்தியசாலை அமைந்துள்ள இடம் ராணுவத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது….
இவ்வாறு அவ் அறிக்கை தெரிவித்தது.
மே 8ம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் அற்ற வலையம் என்பதை அரசு மீளவும் புதிய விளக்கத்துடன் பிரகடனப்படுத்தியது.
அரசு அவ்வப்போது இவ்வாறான வலையங்களை அறிவிக்கும். மக்களும் அதனை நம்பி அங்கு செல்வார்கள்.
இம் முறை முல்லைத்தீவு வடக்குப் பகுதியிலுள்ள நந்திக் கடல் பகுதியைச் சார்ந்த 3 சதுர கிலோ மீற்றர் பகுதியை துப்பாக்கிப் பிரயோகம் அற்ற வலையம் என அறிவித்தது.
ஆனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ராணுவம் அந்த இடத்தைத் தாக்கி அங்கிருந்த 300 பொது மக்கள் இறந்ததோடு, ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இச் செய்திகளை அரச தரப்பு மறுத்தது. அத்துடன் புலிகளே அதனை மேற்கொண்டதாகவும் கூறியது.
இவ் வேளையில் ஐ நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட சர்வதேச அறிஞர் குழு 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அறிக்கையை வெளியிட்டது.
அதில் போர்க் குற்றம் எனக் கருதப்படும் அம்சங்களுக்கு நம்பத் தகுந்த சாட்சியங்கள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அவற்றில் சில பின்வருமாறு
…… 2008ம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2009ம் ஆண்டு மே 19ம் திகதி வரையிலான காலப் பகுதியில் ராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மிகப் பெரும் தொகையான சிவிலியன் மரணங்களை ஏற்படுத்தியிருந்தது.
இது வன்னி மக்கள் மீதான பழிவாங்கலாகவே கருதப்பட்டது. சுமார் 330,000 மக்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு அஞ்சிய அதே வேளை புலிகள் அம் மக்களைப் பணயக்கைதிகளாகவும் வைத்திருந்தனர்.
இச் செய்திகளை வெளிக் கொணர முயற்சித்த ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பயமுறுத்தப்பட்டு, மௌனமாக்கப்பட்டதோடு பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
துப்பாக்கிப் பிரயோகம் அற்ற வலையம் என புதிய இடங்களை அறிவித்து மக்கள் அங்கு சென்றதும், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியதோடு, ஐ நா உணவு விநியோகத்தைத் தடுப்பது, செஞ்சிலுவைச் சங்க உதவிகளைத் தடுப்பது, மருந்து வகைகளைக் கிடைக்காமல் செய்வது போன்றவற்றை ராணுவம் மேற்கொண்டது.
போரின் இறுதிக் காலத்தில் அதிக மக்கள் இறந்தமைக்கான காரணம் மிக அதிக அளவிலான கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமையே ஆகும்.
ராணுவம் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் வைத்தியசாலைகளைத் தாக்கியது.
இவை அமைந்துள்ள இடங்கள் தெளிவாக தெரிந்த பின்னரும் தாக்கப்பட்டன. மருந்து வகைகள், உணவுகள் போன்றன மக்களுக்குக் கிடைக்காதவாறு தடுத்த அரசு, அங்கு சிக்குண்டிருந்த மக்களின் தொகையைக் குறைத்துக் காட்டி மருந்து, உணவு போன்றவற்றை மேலும் குறைத்து அனுப்பி மக்களைப் பட்டினியாலும், நோயினாலும் அவதியுறும் துன்ப நிலைக்குத் தள்ளியது.
2009ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்திற்குள் பல ஆயிரம் மக்கள் அடையாளம் காணப்படாமலேயே புதைக்கப்பட்டார்கள்.
ராணுவத்திற்கும், தமக்குமிடையே மனிதக் கேடயங்களாக இம் மக்களைப் புலிகள் பயன்படுத்தினர். பலவந்தமாக மக்கள் போருக்குள் இழுத்து வரப்பட்டார்கள்.
தமக்கான பாதுகாப்பு அரண்களை, கிடங்குகளை பொதுமக்களைப் பலவந்தப்படுத்தி அமைத்ததோடு, இம் மக்களை முன் அரங்குகளில் பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தி மரணங்களை ஏற்படுத்தினார்கள். இவை யாவும் தோல்வி அடையும் யுத்தத்திற்காக மக்களைப் பணயமாக்கியதாகவே முடிவடைந்தது.
2009ம் ஆண்டு பெப்ரவரி முதல் தப்பிச் செல்ல முயற்சித்த மக்களை சுட்டுக் கொன்று, இறுதிப் போரில் மரணமடைந்த மக்களின் தொகையை மேலும் அதிகரித்தார்கள்.
அதிகளவு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிக்கு அண்மையில் இருந்தவாறே ராணுவ முகாம்களை நோக்கித் தாக்கினார்கள். ராணுவத்தின் பதிலடிக்கு அப்பாவி மக்கள் பலியானார்கள். ……..
இவ்வாறு அந்த அறிக்கை கூறியது.
இத்தனை இடர்களுக்கு மத்தியிலும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் உணவுகளை வழங்கவும், காயமுற்றோரை வெளியேற்றவும் என வன்னி சென்ற போதிலும் பாதுகாப்பற்ற காரணத்தால் திருகோணமலை சென்றது.
இப் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிக்கை ஒன்றினை 2009ம் ஆண்டு மே 13ம் திகதி வெளியிட்டார். அதில்
… பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் ராணுவத்திற்கும், புலிகளுக்குமிடையே அகப்பட்டுத் தப்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
அம் மக்களிடம் மிகவும் சொற்ப அளவிலேயே உணவு, மருந்து, தங்குமிடம், குடிநீர் என்பன உள்ளன. இதன் காரணமாக அதிக அளவிலான மக்கள் பாதிப்படைவதோடு, பல
நூறு பேர் மரணமடையும் வாய்ப்பும் உள்ளது. இம் மனித அழிவு தடுக்கப்படாவிடில் பேரழிவாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. புலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு, மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும்.
பொதுமக்களை ஆயுதக் குழுவில் இணைப்பது, மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது. இத்தகைய செயல்கள் இவற்றை மேற்கொள்பவர்களையே அந்நியப்படுத்தும்.
அரசாங்கம் கண்டபடி மக்களைத் தாக்குவதால் பல நூறு அப்பாவி மக்கள், வைத்தியசாலைகள் உட்பட பல உயிர்கள் பலியாகின்றன. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதியை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அம் மக்களை அடைவதை உறுதி செய்யும் விதத்தில் ஐ நா மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை அங்கு அனுமதிக்க வேண்டும்.
சுமார் 190,000 மக்கள் நாட்டிற்குள் இடம் பெயர்ந்த நிலையில் அவர்களுக்கு மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன.
இத் துன்பங்களிலிருந்து இலங்கை மக்களை விடுவிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது. தாமதமாவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என நம்புகிறேன்….
என அவரின் அறிக்கை கூறியது.
( அடுத்த வாரம் தொடரும்)