ISIS மோதலில் துருக்கியின் பாத்திரம், உள்நாட்டு போரை மீண்டும் தூண்டிவிட அச்சுறுத்துகிறது
துருக்கியின் இஸ்லாமிய நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) அரசாங்கம் அந்நாடு முழுவதிலும் நடந்த கோபமான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாக நடந்துள்ளது.
கோபானியில் உள்ள சிரிய குர்திஷ்களுக்கு அரசாங்கம் உதவ மறுத்ததன் மீது அப்போராட்டங்கள் எழுந்திருந்தன. குர்திஷ்களின் சரணாலயமாக உள்ள துருக்கியின் தென்கிழக்கு எல்லை ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) படைகளின் வசம் வீழக்கூடிய நிலையில் உள்ளது.
போராட்டக்காரர்களுக்கு எதிராக கலகம்-ஒடுக்கும் பொலிஸ் தண்ணீர்பீச்சிகள், கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தியும் மற்றும் நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தியும் பலவந்தமாக அவர்களை விரட்டியடித்தது.
தடை செய்யப்பட்ட கெரில்லா இயக்கமான குர்திஷ் தொழிலாளர் கட்சி (PKK) அழைப்பு விடுத்திருந்த அந்த ஆர்ப்பாட்டங்கள், இஸ்தான்புல், அன்காரா மற்றும் தென்கிழக்கு துருக்கி நகரங்கள் உட்பட நாடெங்கிலும் பரவியிருந்தன.
பாதுகாப்பு படைகள் குறைந்தபட்சம் 19 பேரை கொன்றது, தியார்பகிர் நகரில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இரண்டு மாகாணங்களில் மற்றும் குர்திஷ் மக்கள் நிறைந்த மிகவும் பாதிக்கப்பட்ட சில நகரங்களில், குறிப்பாக மார்தின், செர்ட், பாட்மன் மற்றும் முஸ் நகரங்களில், அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
துருக்கியின் உள்துறை மந்திரி எஃப்கான் அலா அந்த போராட்டங்களை “தேசத்துரோகமாக” குற்றஞ்சாட்டினார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் “அவர்களின் சொந்த நாட்டையே காட்டிக்கொடுத்து வருவதாக” குற்றஞ்சாட்டியதோடு, அவர் போராட்டங்களை நிறுத்துமாறு அல்லது “ஊகிக்கமுடியா” விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்குமென எச்சரித்தார்.
அந்த வெடிப்பார்ந்த நிலைமை, மத்திய கிழக்கில் அரசாங்கங்களின் இணக்கமற்ற மற்றும் ஆத்திரமூட்டும் கொள்கைக்கு நிரூபணமாக உள்ளது, அது அப்பிராந்தியத்தில் இன்னும் நீண்டு பரந்த மோதலைத் தூண்டிவிடும்.
பெரும்பாலான துருக்கிய மக்கள் ஈராக் அல்லது சிரியாவில் எந்தவொரு இராணுவ தலையீட்டையும் எதிர்ப்பதுடன், வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருவதன் மீது அதிகளவில் கோபமாக இருக்கின்ற நிலைமைகளின் கீழ், துருக்கி அதன் சொந்த குர்திஷ் மக்களுடன் ஓர் உள்நாட்டு போரைப் புதுப்பிக்க இது இட்டுச் செல்லும்.
கடந்த வாரம் துருக்கி நாடாளுமன்றம், ஈராக் மற்றும் சிரியாவில் துருக்கியின் இராணுவ தலையீட்டுக்கு ஒப்புதல் வழங்கி வாக்களித்தது, அதே நோக்கத்திற்காக துருக்கிய மண்ணில் அன்னிய படைகளை நிலைநிறுத்த அனுமதிக்கவும் அத்துடன் ஒப்புதல் அளித்தது.
சிரியா மற்றும் ஈராக்கின் எல்லைகளை ஒட்டி இருக்கும் ஒரே நேட்டோ கூட்டாளி துருக்கி ஆகும், மேலும் ஒரு ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் இல்லாமலேயே, நேட்டோவின் 5ஆம் ஷரத்தின்கீழ் நேட்டோ இராணுவ தலையீட்டை நியாயப்படுத்த, அந்நாட்டின் பாதுகாப்பைக் காரணமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு, அன்காரா வாஷிங்டனின் அணியில் சேர்ந்துவிட்டதை எடுத்துக்காட்டுவதாக தோன்றிய போதினும், பாதுகாப்பு மந்திரி இஸ்மெட் யெல்மாஜ் கூறுகையில், யாரும் எந்தவொரு உடனடி நடவடிக்கையையும் எதிர்பார்க்க வேண்டாமென தெரிவித்தார்.
எவ்வாறிருந்த போதினும் அத்தீர்மானம், எவ்வித இராணுவ தலையீடும் “பயங்கரவாத அமைப்புகளை” நோக்கி திருப்பிவிடப்பட்டதாக இருக்குமென குறிப்பிட்டதுடன், AKP அரசாங்கம் PKK உடன் சமாதான பேரம்பேசல்களில் ஈடுபட்டு வருவதாக அது குறிப்பிட்டிருந்தது, ஆனால் அந்த உள்ளடக்கத்தில் ISIS இருக்கவில்லை.
அனைத்திற்கும் மேலாக, ஜனாதிபதி எர்டோகன் வாஷிங்டனின் கூட்டணியில் பங்குவகிக்க மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தார்: சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதென்பது, நடைமுறையில், இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரிப்பதென்றே அர்த்தமாகும் ஏனென்றால் சிரியாவில் சண்டையிடும் வேறெந்த படைகளும் இல்லை.
மேலும் துருக்கி எல்லையை ஒட்டி சிரியாவிற்குள் 25 சதுர கிலோமீட்டருக்கு ஓர் இடைத்தடை மண்டலத்தை சர்வதேசரீதியில் அமுலாக்குவது, அது ஒரு “விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலமாகவும்” இருக்க வேண்டும், அல்லது சிரியாவினது விமானங்களுக்காகவது தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பவையாகும். இது சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதாகிறது.
ISIS-எதிர்ப்பு நடவடிக்கைகள் சிரியாவிலோ அல்லது துருக்கியிலேயே கூட குர்திஷ் படைகளைப் பலப்படுத்தக்கூடாது என்பதில் அன்காரா தீர்மானமாக உள்ளது, சிரியாவில் குர்திஷ் படைகள் ரோஜாவா என்றறியப்படும் ஒரு சுயாட்சி மண்டலத்தை ஏற்படுத்தி வைத்துள்ளன.
ISISக்கு எதிராக, குறிப்பாக வடக்கு ஈராக்கில் அரை-சுயாட்சி அமைப்பாக விளங்கும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கு (KRG) ஆதரவாக, PKK உடன் வாஷிங்டன் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறை கூட்டணி, PKKஐ ஒரு பயங்கரவாத குழுவின் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்குவதற்கோ அல்லது அதன் அந்தஸ்தை உயர்த்துவதற்கோ இட்டுச் செல்லக்கூடாதென்பதிலும் அன்காரா கவனமாக இருக்கிறது.
Turkish army tanks manoeuver as Turkish Kurds watch over the Syrian town of Kobani
துருக்கி, கோபானியைக் கருத்தில் கொண்டு தான், இதுவரையில் எல்லையோரங்களில் டாங்கிகளையும் துருப்புகளையும் நிலைநிறுத்தி உள்ளது, அதேவேளையில் ISIS படைகள் அந்நகரை கைப்பற்றுவதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தவிர்த்திருந்தது.
அதன் பிரதான நோக்கமே—சிரியா மற்றும் துருக்கி இரண்டினது—குர்திஷ் போராளிகளும் எல்லை தாண்டுவதைத் தடுப்பதும் மற்றும் அந்நகருக்கு (கோபானிக்கு) ஆயுததளவாடங்கள் கிடைக்காமல் செய்வதுமாகும், அதன்மூலமாக ISIS முற்றுகையிடாத பக்கத்தில் கோபானியை முற்றுகையிட்டு தடுப்பது.
கோபானியில் நடந்த மூன்று வாரகால சண்டையில் 400க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள், 160,000 சிரியர்கள் நாட்டைவிட்டு துருக்கிக்கு வெளியேறி இருக்கிறார்கள். அந்நாடு ஏற்கனவே குறைந்தபட்சம் சிரியாவின் ஒரு மில்லியன் அகதிகளுக்கு தஞ்சமளித்து வருகிறது.
குர்திஷ் சரணாலயம் அன்காராவினால் முற்றுகை இடப்படுவது, PKK மற்றும் அதன் ஆதரவாளர்களைக் கொதிப்படைய செய்துள்ளது. ரோஜாவாவின் தலைவிதி துருக்கி உடனான சமாதான நிகழ்முறை பிழைத்திருப்பதுடன் பிணைந்திருப்பதாக பரவலாக பார்க்கப்படுவதுடன், 40,000 பேர் வாழ்வை இழப்பதற்கு இட்டுச் சென்ற 30-ஆண்டுகால போரின் புதுதொடக்கத்தை அது அச்சுறுத்துகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள PKK தலைவர் அப்துல்லாஹ் ஒக்கலான், அவரது இம்ராலி சிறைக்கூடத்திலிருந்து வெளியிட்ட செய்தியில், “கோபானி வீழ்ந்தால், அந்த நிகழ்முறை முடிந்து போகும்,” என்றார். அதன் விளைவாக அதே மாதிரியான “போர் தொடங்கும்” என்ற சேதிகள் ஏனைய குர்திஷ் கட்சிகளிடமிருந்தும் வந்துள்ளன.
ISIS கோபானியைக் கைப்பற்றினால், ஜிஹாதிஸ்டுகள் சிரிய-துருக்கி எல்லையின் ஒரு நீண்டபகுதியைக் கட்டுப்பாட்டில் பிடிப்பார்கள், அதற்காக அவர்கள் சவூதி அரேபியா, கட்டார் மற்றும் இதர வளைகுடா அரசுகள், சிஐஏ ஆகியவற்றால் மற்றும் துருக்கியினாலும் கூட அவர்களுக்கு வாரிவழங்கப்பட்ட ஆதரவுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.
துருக்கி நீண்டகாலமாகவே அவர்களுக்கு இராணுவத்தளங்கள், உளவுசெய்திகள் மற்றும் ஆயுததளவாட வினியோக ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளது.
syria-buffer-zone
ஒருகாலத்தில் குர்திஷ்கள் வசமிருந்த அந்த பகுதியில் தான், ஒரு சர்வதேச இடைத்தடை மண்டலம் அமைக்க அன்காரா பரிந்துரைக்கிறது, அதன்மூலமாக துருக்கிய எல்லைகளில் PKKஉடன் சேர்ந்த குர்திஷ் சுயாட்சி மண்டலத்தின் எவ்வித அச்சுறுத்தலையும் தவிர்க்க கருதுகிறது.
அதேவேளையில் ISIS-கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை சிரியா குர்திஷ்களுக்கு அது ஒரு “பாதுகாப்பான புகலிடமாக” இருக்கிறதென அறிவிப்பதன் மூலமாக, ISISஐ கட்டுப்படுத்த நினைக்கிறது.
இந்த இடைத்தடை மண்டலம் அனேகமாக சுலேமான் ஷாவின் சமாதியைச் சுற்றியுள்ளதாக இருக்கக்கூடும், இது சிரியாவிற்குள் 30 கிலோமீட்டர் கொண்ட ஒரு சிறிய துருக்கிய இறையாண்மை பகுதியாகும், இப்போது இது துருக்கிய சிப்பாய்களால் பாதுகாக்கப்பட்டு, ISISஆல் சூழப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை, அதை துருக்கிய பிராந்தியத்திற்குள் இணைக்க களம் அமைப்பதுடன், அவ்விதத்தில் நடைமுறையில் சிரியாவுடனான எல்லையை மாற்றியமைக்கிறது.
பிரதான எதிர்கட்சி தலைவர் கெமால் கிலெக்டாரோக்லுவின் கெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP), நாடாளுமன்ற தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து இருந்ததற்கு இடையே, அசாத்தைப் பதவியிலிருந்து இறக்க எர்டோகனின் இராணுவ தலையீட்டுக்கான பரிந்துரைகளையும் எதிர்த்தது.
எதிர்காலத்தில் ஒரு சர்வதேச இடைத்தடை பகுதியைப் “பாதுகாக்க”, சிரியா மீதான விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலத்தை அமுல்படுத்த, அமெரிக்காவும், நேட்டோவும் தென்கிழக்கு துருக்கியின் இன்செர்லிக்கிற்கு அருகில் உள்ள அதன் (அமெரிக்க) இராணுவத்தளத்தைப் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்செர்லிக் நகரம், வளைகுடா மற்றும் ஜோர்டனில் உள்ள அமெரிக்க படைத்தளங்களுக்கு நெருக்கமாக இருப்பதை விட, ISIS-கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
(People wave flags of the Kurdistan Workers’ Party (PKK) as Kurdish people carry the coffin of a YPG (People’s Protection Units) fighter during a funeral in the town of Suruc, Sanliurfa province, on October 14, 2014)
எந்தவொரு நிகழ்விலும் ஒரு வெளிப்படையான இரகசியமாக இருந்துள்ள, ISISக்கு அன்காராவின் ஆதரவு குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக பேசியதும் ஒன்றும் குறைந்த விடயமல்ல. துருக்கியிலிருந்து சிரியாவிற்குள் நுழையும் இஸ்லாமியவாத போராளிகளைக் குறிப்பிட்டு, பைடன் கூறுகையில், “’நீங்கள் சரியாகத் தான் கூறினீர்கள், நாம் நிறைய நபர்களை நுழைய விட்டுவிட்டோம்’ என்று … ஜனாதிபதி எர்டோகன் என்னிடம் கூறினார்” என்றார்.
துருக்கிய ஜனாதிபதி எர்டோகன்
துருக்கி இப்போது அதன் எல்லையை மூட முயன்று வருகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார். கூட்டணியில் இணைத்து வைப்பதற்காக—கோபமான எர்டோகனை சமாதானப்படுத்த அவர் நிர்பந்திக்கப்பட்டிருந்ததாக பரவலாக செய்திகள் வெளியான போதினும், இது துருக்கிய ஜனாதிபதி கூறியதை திரும்ப கூறினார் என்பதல்ல, மாறாக அவருக்கும் எர்டோகனுக்கும் இடையிலான பிரத்தியேக கலந்துரையாடலாக கருதப்பட்டதை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறையிலிருந்து பிரதம மந்திரி Ahmet Davutogluக்கும் மற்றும் வெளியுறவு மந்திரி Mevlut Cavusogluக்கும் பல தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்ட பின்னர், கூட்டணியில் துருக்கியின் பாத்திரம் குறித்து பேச ஜனாதிபதி ஒபாமா உலகளாவிய ISIS-எதிர்ப்பு கூட்டணிக்கான அவரது தூதர் ஜெனரல் ஜோன் அலெனை அன்காராவிற்கு அனுப்புகிறார்.
குர்திஷ்களுடன் சேர்ந்து அன்காராவைக் கூட்டணியில் வைப்பது அவரது கடினமான பணியாக இருக்கும். அப்பிராந்தியத்தின் பரந்த எரிசக்தி வளங்களின் கட்டுப்பாட்டைப் பெற இப்போது போட்டியிட்டுவரும் எண்ணற்ற போராளிகள் குழுக்களுக்கு எதிராக, இந்த குர்திஷ்கள் வாஷிங்டனின் சார்பில் சண்டையிடுவதற்கு, “அந்த மண்ணில் இராணுவத்தைத் தரையிறக்க” கேட்டு வருகின்றனர்.
அப்பிராந்தியத்தில் அதன் சொந்த நலன்களுக்காகவும் மற்றும் வாஷிங்டனின் நலன்களுக்காகவும் ஒரு பரந்த யுத்தத்திற்கு காரணங்களைத் தயாரிப்பதற்காக மற்றும் குர்திஷ்களை நசுக்கும் ஒரு அணுகுமுறையாக இரண்டுக்காகவும், எர்டோகன் வெறுப்பூட்டும் விதத்தில் ISISஐ “அச்சுறுத்தலாக” பயன்படுத்துவது, ஓர் அபாயகரமான சூழ்ச்சியாகும், அது துருக்கிக்குள்ளேயே கூட சக்திகளைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகிறது, அதில் அவர் கட்டுப்படுத்த சக்தியற்றவராக நிரூபணமாவார்.
By Jean Shaoul
ISIS–இன் இராணுவ வெற்றிகளும், சிரியா ஈராக் மீதான அமெரிக்க தரை நகர்வு திட்டங்களும் !!