மர்மங்கள் என்றுமே மர்மங்களாக இருப்பதில்லை. அவை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் குற்றவியலை பொறுத்தவரை இது நிதர்சனம். அந்த நிதர்சனத்தை மேலும் ஒரு முறை உறுதி செய்துள்ளது லலனி நதீசாவின் மர்மக்கொலை.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த மே மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மாத்தளை, உக்குவளை, வராபிட்டிய, கட்டுதெனிய பிரதேசத்தை சேர்ந்த லலனி நதீசா என்ற 24 வயது யுவதி அவரது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் உள்ள வயல்வெளிக்கு அருகில் கோப்பிக் காட்டினுள் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி தனது சகோதரனின் திருமண வைபவமொன்றின் பின்னர் இரவு தாயுடன் உறங்கிய யுவதியே அந்த நதீசா. பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவியும் கூட. உடன் பிறந்த சகோதரர்கள் இருவர்.
அவர்களது மனைவிமார் தனது தாய் என உறவுகளுடன் வீட்டில் உறக்கத்துக்கு சென்ற போதே நதீசாவுக்கு துரதிஷ்ட சம்பவம் நடந்தது.
இந்நிலையில் 6 மாதங்கள் வரை நீடித்த மர்மத்தை துலக்கியுள்ளனர் குற்றப் புலனாய்வு பிரிவினர். கடந்த மே மாதம் 24 ஆம் திகதி நதீசாவின் இல்லத்தில் இடம்பெற்ற அவள் அண்ணனின் திருமண வைபவத்தை தொடர்ந்து இரவு படுக்கைக்கு சென்றவளை மறுநாள் 25 ஆம் திகதி காணவில்லை என முதலில் அறிந்தவர் தாய் ரம்யா ஆவார். ஏனெனில் தாய் ரம்யாவும் நதீசாவுமே ஒரே அறையில் நித்திரை கொண்டிருந்தனர்.
இவர்களை தவிர அந்த வீட்டின் மற்றொரு அறையில் நதீசாவின் அண்ணன் ஒருவரும் அவரது பிள்ளை, மனைவியும் மற்றொரு அறையில் புதுமண தம்பதியினரும் வீட்டின் பிரதான அறையில் மணமகனின் தோழனும் உறக்கத்துக்கு சென்றிருந்தனர்.
வீடு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததாக வீட்டிலிருந்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கவே நதீசாவின் கொலை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மே மாதம் 25 ஆம் திகதி முதல் மூன்று பொலிஸ் குழுக்கள் அந்த விசாரணைகளை மேற்கொண்டன.
மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தகுமாரவின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் தஸநாயக்கவின் மேற்பார்வையில் மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமல்சந்த மற்றும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி தர்மகீர்த்தி ஆகியோரின் கீழ் ஒரு குழுவும் மாத்தளை குற்றத்தடுப்புப் பிரிவும் மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவும் இந்த விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
ஸ்தல தடயமாக கால்தடம், கைரேகை ஒன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பட்ட போதும் அவை குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க போதுமானதாக இருக்கவில்லை.
இந்நிலையில் இந்த மூன்று பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை தொடர்ந்தன. சொத்துக்காக குடும்பத்தினரால் நதீசா கொலை செய்யப்பட்டாரா என ஒரு கோணத்திலும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு விட்டு கொலையை செய்தாரா என இன்னொரு கோணத்திலும் வீட்டில் உள்ள ஒருவரின் ஒத்தாசையுடன் நதீசா கொலை செய்யப்பட்டாரா என மற்றொரு கோணத்திலும் இந்த விசாரணைகள் அமைந்திருந்தன.
எனினும் இவை எவற்றுக்கும் இந்த மூன்று பொலிஸ் குழுக்களாலும் 2 மாதங்கள் ஆகியும் விடை காண முடியவில்லை.
இந் நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி நதீசாவின் கொலை சூத்திரதாரியை கண்டறியும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ண மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலன்த ரணவீர ஆகியோரின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல் தெனிய தலைமையில் 20 பேர் கொண்ட விசேட குழு மாத்தளை பயணமானது.
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் நதீசா துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்தது.
அத்துடன் துஷ்பிரயோகம் செய்த நபரின் விந்தணு நதீசாவின் உடலில் இருந்த நிலையில் அதனை டீ.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர். இதனை விட பல பேரை சந்தேகத்தில் ஏற்கனவே பொலிஸார் விசாரித்திருந்ததுடன் பலரின் டீ.என்.ஏ. க்களையும் பெற்றிருந்தனர். எனினும் அந்த டீ.என்.ஏ. யில் இருந்த ஜீன்கள் எதுவும் எந்தவொரு நபரினதும் ஜீன்களுடன் ஒத்துப்போகவில்லை.
உறவினர்கள் எவரேனும் சொத்துக்காக இந்த கொலையை செய்திருப்பின் அவர்கள் ஏன் நதீசாவை துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என சிந்தித்த பொலிஸார் அந்த கொலை தொடர்பில் பலவாறு சிந்தித்தனர்.
இந்நிலையிலேயே மாத்தளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை படித்த புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல் தெனிய அதிலிருந்து விசாரணைகளை பொறுப்பேற்றார்.
நதீசாவை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளியை கண்டறிய புலனாய்வுப் பிரிவினருக்கு இருந்த ஒரே உறுதியான தடயம் குற்றவாளியின் டீ.என்.ஏ. மட்டுமே இந் நிலையில் புலனாய்வுப் பிரிவினர் அதனை மையப்படுத்தியதாகவே விசாரணைகளை தொடர்ந்தனர்.
குற்றவாளிகளை கைது செய்வதில் கைவிரல் ரேகைகளை ஒத்துப்பார்ப்பது போல் பல குற்றச் செயல்களுடன் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் டீ.என்.ஏ. உடன் சந்தேக நபரின் டீ.என்.ஏ. யை விசேட நிபுணர்களுக்கு அனுப்பி ஒப்புவித்து பரீட்சித்தனர்.
இந் நிலையில் மாத்தளை பகுதியில் பல்வேறு குற்றங்கள் தொடர்பிலும் தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்த புலனாய்வுப் பிரிவு அவர்களின் டீ.என்.ஏ. உடன் ஒப்பிட்டு சந்தேக நபரை தேடியது. இதற்கு மாத்தளை பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தான் மாத்தளை நகரில் இரவு நேர வீட்டுத் திருட்டுக்கள் தொடர்பிலான சந்தேக நபர் ஒருவரின் டீ.என்.ஏ. புலனாய்வுப் பிரிவினர் தேடும் கொலையாளியின் டீ.என்.ஏ. யுடன் ஒத்துப் போவது தெரிய வந்தது. எனினும் அப்போது அந்த திருடன் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
குறித்த திருடன் வீடொன்றில் திருடிய போது பயன்படுத்திய பொருட்களின் கழிவுகளில் இருந்தே அவனின் டீ.என்.ஏ. பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நதீசாவின் கொலை சந்தேக நபர் ஒரு திருடன் என்ற அடையாளத்தை புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொண்டனர். எனினும் அவன் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
எனினும் பூட்டப்பட்ட வீட்டுக்குள் எப்படி திருடன் நுழைய முடியும் என்ற கேள்வி எழவே வீட்டாரை மீண்டும் தனித்தனியாக புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கதவை திறந்து வெளித்தேவைகளுக்கு சென்றுள்ளமை தெரிய வரவே திருடன் வீட்டினுள் ஏற்கனவே ஒளிந்திருந்திருக்க வேண்டும்.
அல்லது கதவு சரியாக பூட்டப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு புலனாய்வுப் பிரிவினர் வந்தனர். இந்நிலையில் மாத்தளை நகரில் வீடு புகுந்து திருடுபவர்கள் தொடர்பில் பாரிய தேடல் ஒன்றினை புலனாய்வுப் பிரிவினர் மாத்தளை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டனர்.
அவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்படும் போது அவர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மன்றின் அனுமதியுடன் இரத்த மாதிரி பெறப்பட்டு டீ.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு 15 பேரின் டீ.என்.ஏ. பெறப்பட்ட போதும் அதில் பயனில்லை. இந்நிலையில்தான் நதீசாவின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் வசிக்கும் டென்சில் ஜயவர்தன புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். 31 வயதான அவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். கூலி வேலை செய்யும் அவர் இரவு நேரங்களில் திருட்டுக்களில் ஈடுபடுவார்.
வீடுடைப்பு சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் பொலிஸாரிடம் சிக்கியிருந்த நிலையிலேயே புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு உள்ளாகின்றார். சி.ஐ.டி. (புலனாய்வுப் பிரிவு) விசாரணைகளில் டென்சில் தான் நதீசா கொலை செய்யப்பட்ட தினம் எலவொர பிரதேசத்துக்கு சென்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
டென்சில் சென்றதாக கூறிய இடங்களில் குறித்த தினம் அவர் இருந்தாரா என தேடிய புலனாய்வுப் பிரிவு டென்சில் சொன்னது பொய் என உறுதி செய்து கொண்டது.
இந்நிலையில் டென்சில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறுவது புலனாய்வுப் பிரிவினரின் அவதானத்துக்கு உட்பட்டது. ஏனெனில் ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்ட 15 திருடர்களிலும் இப்படி முன்னுக்கு பின் முரணாக கதைக்கவில்லை.
அதனாலே என்னவோ டென்சில் எதையோ மறைக்க முற்படுவதாக புலனாய்வு பிரிவு சந்தேகித்தது. உடனடியாக டென்சிலின் இரத்த மாதிரி பொரளை ஜீன் டெக் நிறுவனத்துக்கு டீ.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
டீ.என்.ஏ. அறிக்கை கிடைக்கும் வரை புலனாய்வு பிரிவினர் டென்சிலுக்கு தெரியாமலேயே அவரை பின் தொடர்ந்து தகவல் சேகரிக்கலாயினர். இதன்போது, டென்சில் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் மகரகம, ஹோமாகம, மிரிஹான பொலிஸ் நிலையங்களால் வீடுடைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்தும் புலனாய்வுப் பிரிவினர் தேடியதில் சிறைவாசத்தின் பின்னரையே டென்சில் மாத்தளையில் வசித்து வருகின்றமையும் அது பொலிஸாரின் கண்களில் இருந்து மறைந்து வாழ்வதற்கே என்பதும் தெரிய வந்தது.
அத்துடன் மஹரகம, ஹேமாகம, மிரிஹான பொலிஸ் நிலைய தரவுகளை திரட்டிய புலனாய்வு அதிகாரிகள் டென்சில் வீடுடைப்பு மட்டுமன்றி பெண்களின் ஆடை திருட்டு, பெண் மோகம் ஆகியனவும் கொண்டவர் என்பதை அறிந்து கொண்டனர்.
இந்நிலையில் பொரளை ஜீன் டெக் நிறுவனத்திலிருந்து டென்சிலின் டீ.என்.ஏ. அறிக்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெறுகின்றது. அது நதீசாவின் கொலை விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொண்ட 16ஆவது டீ.என்.ஏ. அறிக்கை.
ஏற்கனவே டென்சிலை சந்தேகத்தில் பின் தொடர்ந்த புலனாய்வு பிரிவினர் டீ.என்.ஏ. ஒத்துப்போவதால் கைது செய்வது என முடிவு செய்தனர்.
அது கடந்த ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரியன் காரிருள் மேகங்களுக்குள் ஓய்வெடுக்க செல்லும் பொழுது டென்சில் போதையில் தள்ளாடிய வண்ணம் வராப்பிட்டியவில் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் வரும்வரை காத்திருந்த புலனாய்வு பிரிவின் விசேட குழு வராப்பிட்டியவை அண்மித்த பகுதியில் டென்சிலை வழிமறித்தது. சேர்…. ஏன் என்னை வழிமறிக்கின்றீர்கள்? நான் என்ன செய்தேன் என சி.ஐ.டி. யினரிடம் டென்சில் வினவவே சி.ஐ.டி.யினர் வராப்பிட்டிய நதீசாவை கொலை செய்த நாளில் எங்கிருந்தாய்… என வினவலாயினர்.
சேர்…. அந்நாட்களில் நான் எலஹெர பிரதேசத்தில் இருந்தேன். இதற்கு முன்னரும் நான் உங்களுக்கு அதனை கூறினேன். தானே… ஏன் மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள் என டென்சில் தன்னை நியாயப்படுத்த முயற்சித்தான்.
இந்நிலையில் டென்சிலை டீ.என்.ஏ. மற்றும் எலஹெர, வராப்பிட்டிய பிரதேச வாசிகளின் வாக்கு மூலங்களுக்கு அமையவும் கைது செய்த புலனாய்வு பிரிவு கொழும்பில் உள்ள தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வந்தது.
தலைமையகத்தில் நீண்ட நேர விசாரிப்பில் டென்சிலால் உண்மையை மறைக்க முடியவில்லை. ஆம்… சேர் அந்த கொலை என் கையாலேயே நிகழ்ந்தது. எனினும் எனக்கு அவளை கொல்ல வேண்டியிருக்கவில்லை. மயக்கமடைய வைக்க வேண்டிய தேவை மட்டுமே இருந்தது… என இழுக்கும் போதே புலனாய்வுப் பிரிவினர் அடுத்த கேள்வியை தொடுத்தனர்.
8 கிலோ நிறையுடைய இரும்புக் கட்டையால் அடித்ததால் இறப்பார் என தெரியாதா..? என சி.ஐ.டி. விசாரணை அதிகாரி வினவியுள்ளார். இல்லை…சேர்… நான் அவ்வளவு பலமாக அடிக்கவில்லை.
அவள் கத்தாமல் இருக்கும் நிலையை அடையவே அடித்தேன் என கூறியவாறே நடந்ததை கிளிப் பிள்ளையாய் ஒப்புவித்தான். சேர்…. அந்த கல்யாண வீடு தொடர்பில் நான் அவதானமாக இருந்தேன். எனக்கு தெரிந்த வகையில் கல்யாண வீட்டில் பெறுமதியான பொருட்கள் இருக்கும்.
இரவில் அனைவரும் குடித்து விட்டு தூங்கி விடுவர். அதன்பின்னர் அதனை திருடுவதே எனது நோக்கமாக இருந்தது. நான் அந்த வீட்டினுள் நுழையும் போது அதிகாலை ஒரு மணி இருக்கும். வீட்டுக்கதவை எப்படி திறப்பது என சிந்தித்துக்கொண்டே கதவை தள்ளிய போது அது தானாகவே திறந்து கொண்டது.
கதவு திறந்தே இருந்ததால் நான் மெதுவாக வீட்டுக்குள் புகுந்தேன். ஒரு அறையில் இரவு நேர விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த அறையில் சிறு குழந்தை ஒன்று உறங்குவது தெரிந்தது. அந்த அறையின் வெளிச்சம் பிரதான அறைக்கும் விழுந்தது. அப்போது பிரதான அறையில் சிறிய மேசையில் (ரீப்போ) தொலைபேசி ஒன்று இருப்பதை கண்டேன்.
அந்த போனை நான் எடுத்துக்கொண்டு அதன் ஒளியில் வீடு முழுக்க பெறுமதியான பொருட்களை தேடினேன். அதன்போது புதுமண தம்பதியின் அறைக்கும் சென்றேன். அறை கதவு திறந்தே இருந்தது. அந்த அறைக்குள் நுழைந்து மணமகளின் கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தேன்.
தொலைபேசி வெளிச்சத்தில் அந்த கைப்பையை சோதனை செய்ததில் 3000 ரூபா கிடைத்தது. அதனை எனது சட்டைப்பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீட்டுக்குள் போய் கைப்பையை இருந்த இடத்திலேயே வைத்தேன்.
அதனை வைத்து விட்டு மேலும் பெறுமதியான பொருட்களை தேடினேன். இதன்போதுதான் அந்த யுவதி இருந்த அறைக்குள் போனேன். அந்த அறையில் ஓர் ஓரமாக உள்ள கட்டிலில் அம்மாவும் நடுவில் இருந்த கட்டிலில் அந்த யுவதியும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
அந்த அறையின் மேல் கூரையின் கண்ணாடி வழியே வீட்டினுள் விழுந்த நிலா வெளிச்சத்தில் அவளை நான் தெளிவாக பார்த்தேன். நிலா ஒளியில் அந்த யுவதி எனக்கு தேவதையாக தெரிந்தாள். அவள் உறங்கும் அழகில் நான் வந்த வேலையையே மறந்தேன்.
அந்த யுவதியை அடைய வேண்டும் என அடி மனது சொன்னது. அப்புறம் அவளை மயக்கமுற செய்து இச்சையை தீர்க்கலாம் என தீர்மானித்தேன். ஏனெனில் அவள் கூச்சல் இட்டு நான் மாட்டிக்கொள்வேன் என்ற பயத்தினாலேயே அவ்வாறு தீர்மானித்தேன். மயக்கமுற செய்ய வழி தேடிக் கொண்டிருந்த போதுதான் வீட்டின் வராந்தாவில் இரும்பு கட்டையை கண்டேன். அது கல்யாணத்தில் கூடாரம் அடிக்க கொண்டு வரப்பட்டதாக இருக்க வேண்டும்.
அதனால் யுவதியின் தலையில் மெதுவாக அடித்தேன். அவள் முனங்கியவாறே மறுபக்கம் புரண்டாள். நான் பயந்து ஒதுங்கி அவதானித்தேன். அவளின் அந்த முனங்கலின் பின் எந்த சத்தத்தையும் காணவில்லை. அதனால் தைரியமடைந்தேன்.
பின்னர் அவளை கட்டியணைத்து தோளில் போட்டுக்கொண்டேன். அறையிலிருந்து வெளியேறி பிரதான வாயிலினால் வெளியே செல்ல முனைந்தேன். அப்போது அவளின் கை கதவில் பட்டு பாரிய சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தில் வீட்டார் எழும்பி விட்டனர் என நினைத்து அங்கேயே நான் நின்று விட்டேன். எனினும் எவரும் விழித்துக்கொள்ளவில்லை. பின்னர் அவளை அணைத்தவாறே சுமந்து கொண்டு தோட்டத்தின் கீழ் பகுதிக்கு சென்றேன்.
கீழிறங்கும் போது கால் வழுக்கியது. அதனால் அங்கிருந்த ஓடைக்குள் யுவதியுடன் விழுந்தேன். ஒருவாறு கஷ்டப்பட்டு அந்த யுவதியையும் தோளில் சுமந்து கொண்டு ஓடை நீரிலிருந்து விடுபட்டு கரை ஏறினேன்.
பின்னர் அதன் அருகிலுள்ள காட்டின் மரத்தின் அடியில் யுவதியை கொண்டு போய் சாய்த்தேன். அவள் உடைகளை களைந்தேன். எனது வேலையை முடித்தேன். அப்படியே விட்டுவிட்டு சென்றேன். அவள் இறந்து விட்டது எனக்கு மறுநாளேயே தெரிந்தது. எதுவும் தெரியாதது போல் இருந்தேன் என டென்சில் புலனாய்வு பிரிவினருக்கு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த நவம்பர் 10ஆம் திகதி சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பலப்பிட்டிய முன்னிலையில் புலனாய்வு பிரிவினர் ஆஜர்படுத்தினர்.
நீதிவான் கிஹான் பலப்பிட்டியவின் உத்தரவுக்கமைய மறுநாள் 11ஆம் திகதி மாத்தளை மேலதிக நீதிவான் சிறில் விமலசேன முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்கள் நீடித்த நதீசா கொலையின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன. சொத்துக்காக குடும்பத்தினர் கொலை செய்ததாக பரவிய வதந்திகளும் முற்றுப்பெற்றன. குற்றவாளி சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் இனி நீதி தேவதை அவனை கவனித்துக்கொள்ளட்டும்.
-எம்.எப்.எம். பஸீர்-