பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவில் நகரின் மைய பகுதியில் 5 பெண்கள் கார் ஒன்றில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் கார் கதவை இழுத்து திறக்க முயன்றுள்ளனர்.
அதிர்ச்சியில் உறைந்து போன பெண்கள் உதவி கோரி அலறியும் ஒருவரும் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. அதனை அந்த பெண்களில் சிலர் தங்களிடம் இருந்த கேமிராவில் படம் பிடித்தும் உள்ளார். இந்த சம்பவம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை கொண்டாட்டம்
கடந்த சனிக்கிழமை வார விடுமுறையை கொண்டாடுவதற்காக கார் ஒன்றில் சென்ற 5 பெண்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக எம்.ஜி. சாலையின் ஓரம் இருந்த ஐஸ்கிரீம் பார்லர் முன் காரை நிறுத்தினர். காரின் ஓட்டுநர் உள்ளே இருந்தவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்குள் சென்றுள்ளார். இரவு 11.30 மணியளவில் நின்ற அவர்களது கார் அருகே திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் வந்துள்ளனர். அதன் பின்பு மேலும் 2 பேர் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
அலறிய பெண்கள்
அவர்கள் காருக்குள் பெண்கள் இருப்பதை பார்த்துள்ளனர். உடனே காரின் கதவை திறக்க அவர்கள் முயன்றுள்ளனர். காரின் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளதால் அதனை திறப்பதற்காக கருவி ஒன்றையும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான காருக்குள் இருந்த பெண்கள் உதவி கோரி கூச்சலிட்டுள்ளனர். அவர்களது அலறலை அடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
வீடியோ படம்
காரில் இருந்த பெண்கள் நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதில் காரை சூழ்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் நிற்பதும் மற்றும் உதவி கோரி தொடர்ந்து பெண்கள் கூச்சல் போட்டு அலறுவதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளதுடன் வீடியோவையும் அந்த பெண்கள் ஒப்படைத்துள்ளனர்.
நன்மதிப்பை குலைத்தல்
இந்த சம்பவம் நடக்கும்போது அவர்களின் கணவன்மார்கள் வேறு ஒரு காரில் சற்று தொலைவில் இருந்துள்ளனர் என்று டி.சி.பி. சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்துதல், நன்மதிப்பு, பொருள் ஆகியவற்றுக்கு சேதம் விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுதல் மற்றும் பெண்களின் நன்மதிப்பை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்று நகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.