தங்களை கவனிக்க ஆள் இல்லாததால் ஆத்திரம் திருமணம் செய்ய பெண் பார்த்த தம்பியை கொல்ல முயன்ற சகோதரிகளால் பரபரப்பு
சென்னை: தங்களை கவனிக்க ஆள் இல்லாததால், திருமணம் செய்ய முயன்ற தம்பியை, அவரது சகோதரிகளே கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். தற்கொலை முயற்சியில் ஒருவர் பலியானார்.
மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் மங்கலநாதன் (65). பவானியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள்கள் மகாதேவி (38), நிர்மலாதேவி (36), மகன் மணிகண்டன் (32). முதல் மனைவி இறந்து விட்டதால் மங்கலநாதன் 2வது திருமணம் செய்தார். இது, பிடிக்காமல் அவரது மகள்கள் மற்றும் மகன் சென்னைக்கு வந்தனர்.
தந்தை உதவியுடன் மகாதேவி பி.பார்ம், நிர்மலாதேவி ஆங்கில இலக்கியம், மணிகண்டன் பிடெக் படித்தனர். சிறிது நாட்கள் வேலைக்கு சென்ற மகாதேவி, பின்னர் வேலைக்கு செல்லவில்லை.
திருமண வயது தங்களுக்கு கடந்து விட்டதாக கூறி மகாதேவி, நிர்மலாதேவி இருவரும் திருமணம் செய்யவில்லை. மேலும், பல வரன்கள் வந்தும் குடும்ப பிரச்னை காரணமாக சரிவர அமையவில்லை.
சைதாப்பேட்டை அடுத்த சின்னமலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மணிகண்டன் இன்ஜினியராக உள்ளார். இவர், சகோதரிகள் திருமணம் செய்யாமல் இருந்ததால், தனக்கு பெண் பார்க்க தொடங்கினார்.
இதை அறிந்த மகாதேவி, நிர்மலாதேவி ‘நீ திருமணம் செய்து கொண்டால் எங்களை, யார் பார்த்து கொள்வார்கள். நாங்கள் இருவரும் உன்னை நம்பித்தானே இருக்கிறோம்‘ என மணிகண்டனிடம் கேட்டனர்.
ஆனால், திருமணம் செய்வதில் மணிகண்டன் உறுதியாக இருந்ததால், தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையால் மணிகண்டன் வீட்டில் சாப்பிடாமல் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். திருமணம் செய்வதை தடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், மணிகண்டனை கொலை செய்ய சகோதரிகள் திட்டமிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வெளியில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, மணிகண்டனின் கழுத்தை கத்தியால் அறுத்தும், தலையில் அயர்ன் பாக்சால் தாக்கியும் மகாதேவியும், நிர்மலாதேவியும் கொலை செய்ய முயன்றனர்.
மேலும் வீட்டில் காஸ் அடுப்பின் மூலம் தீப்பற்ற வைக்க முடிவு செய்து சிலிண்டரை திறந்து வைத்தனர். இந்த தாக்குதலில் மணிகண்டன் அலறி துடித்தார். அவரது அலறல் கேட்டு, மாடியில் வசிக்கும் ஆனந்தன் என்பவர் ஓடி வந்தார்.
ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் கதவை திறந்து கொண்டு ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சாலையில் ஓடினார்.
உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கழுத்து மற்றும் தலையில் 41 தையல்கள் போடப்பட்டன.
தகவலறிந்து, தாம்பரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்து சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய் வாடை வீசியது. போலீசார் திறந்திருந்த ஜன்னல் வழியாக டார்ச் லைட் அடித்து பார்த்தபோது மகாதேவி கையில் கத்தியுடன் கழுத்து மற்றும் கையை அறுத்துக்கொண்டு ரத்தம் பீறிட்டு வெளியேற கட்டிலில் விழுந்தார்.
போலீசார் மின்னல் வேகத்தில் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். சமையலறையில் காஸ் ஸ்டவ் எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு நிர்மலா தேவி சடலமாக கிடந்தார்.
போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகாதேவியை மீட்டு, சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.