முழு உலகையும் ஓர் உள்ளங்கையில் அடக்கி விடும் அளவுக்கு தொடர்பாடல் இன்று வளர்ச்சியடைந்து விட்டது. வீட்டுக்கு ஒரு மரம் இருக்கின்றதோ, இல்லையோ ஆளுக்கு ஒரு கையடக்கத் தொலைபேசி உண்டு.
ஒரு காலத்தில் வசதியுள்ளோருக்கு மட்டும் உரிமையுடையதாக இருந்த இணைய வசதி இன்று கைக்கடக்கமாக சாதாரண கையடக்க தொலைபேசிகளிலும் வலம் வருகின்றது.
பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், வீ செட், டுவிட்டர், டங்கோ என சமூக வலைத்தளங்கள் ஏராளம். இவை இன்றைய மனிதர்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும், உறவுகளுக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு இடைவெளிகளை குறைத்து இணைக்கும் பாலமாகவும் உள்ளது.
ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்களை தமது பழிவாங்குதல்களுக்கும், இழிவான செயல்களுக்கும் சிலர் பயன்படுத்துகின்றனர்.
அதுவும் பெண்களின் புகைப்படங்களை, அந்தரங்கக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்து அதில் ஆனந்தம் காணும் அற்ப மனிதர் கூட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இவர்களை நினைக்கும் போது இவர்களும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் தானா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் தாயும் ஒரு பெண் தானே…..
ஹேமந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்கு தந்தை. தமயந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவளும் திருமணம் முடித்து மூன்று குழந்தைகளின் தாய்.
ஹேமந்த இலங்கை கடற் படையில் இருபது வருடங்களாக தொழில் புரியும் ஒரு படை வீரர்.
இந்த நிலையில் ஹேமந்தவுக்கும் தமயந்திக்குமிடையில் இரு வருடங்களாக இரகசியமான முறையில் கள்ளத் தொடர்பு வளர்ந்து வந்துள்ளது.
இருவருமே ஒரே கிராமமாக இருந்தபடியால் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருந்துள்ளனர்.
இருந்த போதிலும் ஹேமந்த தன் மனைவிக்குத் தெரியாமலும் தமயந்தி தன் கணவனுக்குத் தெரியாமலும் இருவருக்கும் இடையிலான தகாத உறவினைத் தொடர்ந்து பேணி வந்துள்ளனர்.
இனக் கவர்ச்சியிலும், காம உணர்ச்சிகளிலும் திளைத்திருந்த இவர்களுக்கு அடுத்தவர் தங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தனர்.
எனினும் கிராமத்தில் இருந்த ஒரு சிலருக்கு இவர்களின் தொடர்பு தெரிந்தே இருந்தது. அங்கு இங்கு கூடி அக்கம் பக்கத்தினர் அவ்வப்போது இது பற்றி பேசிக்கொண்டே இருந்தனர்.
ஹேமந்தவை விட தமயந்தி ஹேமந்தவை மனப்பூர்வமாக காதலித்து வந்திருக்கிறாள். அதைவிட அவன் மீது அளவு கடந்த நம்பிக்கையும் வைத்திருந்திருக்கிறாள்.
ஹேமந்த தனக்கு எக்காலத்திலும் துரோகம் செய்ய மாட்டான். தன்னை அவனும் காதலிக்கின்றான் என்று மனக் கோட்டையை கட்டியிருக்கிறாள். எனினும் ஹேமந்த அவளின் நம்பிக்கையைப் பொய்யாக்கியுள்ளான்.
இரு வருடங்களாக ஒன்றாகக் கூடி மகிழ்ந்தவன் நாளடைவில் அவளின் உறவில் சந்தேகம் கொண்டான். அவள் தனக்கு தெரியாமல் வேறு எவருடனாவது தொடர்பு வைத்திருக்கலாம் என்று எண்ணினான்.
எனவே சந்தேகம் விபரீதமான பல யோசனைகளை அவன் தலைக்குள் திணித்தது. தமயந்தி எக்காலத்திலும் தன்னை மீறி எங்கும் எவரிடமும் சென்று விடக் கூடாது என்பதற்காக ஒரு தந்திரோபாயத்தைத் தீட்டினான்.
அதற்காக அவன் தீட்டிய திட்டம் மிகவும் கீழ்த்தரமான, இழிவான ஒரு செயலாகும். அவன் தன் உற்ற நண்பனான கயானின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) உதவியை நாடியுள்ளான். கயான் வாகனங்களில் குளிரூட்டிகளை திருத்தும் தொழில் செய்பவன்.
ஹேமந்த கயானிடம் சென்று “மச்சான் நீ எனக்கு உன்னுடைய கெமராவை தா. நானும் தமயந்தியும் களுத்துறையில் ஒரு விடுதியில் அறை ஒன்றை எடுத்து உல்லாசமாக இருக்கப் போகின்றோம். நாங்கள்
இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியை நான் வீடியோ செய்து கொண்டு வருகின்றேன்” என்று தன் திட்டத்தை நண்பனுக்கு கூறி நண்பனிடமிருந்து கெமராவைப் பெற்றுக் கொண்டான்.
கயானும் ஆபாசப் படங்களை இரசித் துப் பார்க்கும் மனோநிலையை கொண்டவன் என்பதால் அந்த ஆர்வத்தில் மறுக்காமல் கெமராவைக் கொடுத்து விட் டான்.
கெமராவை கையில் எடுத்த ஹேமந்த அடுத்த கட்டமாக எப்படி தன் திட்டத்துக்குள் தமயந்தியைப் பலியிடுவது பற்றி யோசித்தான்.
அதன்படி தமயந்திக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “நீ என்னோடு களுத்துறையில் உள்ள விடுதிக்கு வருவாயா? உன்னோடு ஒரு நாள் பொழுதை கழிக்க ஆசையாக இருக்கின்றது” என்று அழைத்தான்.
அவளும் அவன் மீது உள்ள பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் அவன் கூப்பிட்டதும் வருகின்றேன் என்று ஒத்துக் கொண்டாள்.
தனது திட்டங்கள் அனைத்தும் நினைத்தது போல் இனிதே நடைபெற்று வருவதை எண்ணி அவனுக்குள் கொள்ளை இன்பம்.
திட்டமிட்டபடி தமயந்தி ஹேமந்தவுடன் களுத்துறையிலுள்ள விடுதிக்கு வந்தாள். ஹேமந்த தவறாமல் கெமராவையும் கொண்டு வந்துள்ளான். விடுதி அறைக்கு வந்தவுடனே ஹேமந்த கெமராவை எடுத்து அதை இயக்குவதை தமயந்தி கண்டிருக்கின்றாள்.
எனினும் அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே கெமராவை இயங்கச் செய்து வீடியோ பதிவாகும் வகையில் ஒரு மூலையில் வைத்து விட்டு இருவரும் உல்லாசமாக இருந்திருக்கின்றனர்.
தமயந்தி நிர்வாணமாக இருக்கும் காட்சிகளும், இருவரும் ஒன்றாக இருக்கும் படுக்கையறை காட்சிகளும் அதில் பதிவாகிக் கொண்டே இருந்தன.
இதனிடையே ஹேமந்த கெமராவை எடுத்து ஏதோ செய்யத் திடீரென தமயந்திக்கு ஹேமந்த மீது சந்தேகம் எழ ஆரம்பித்தது. அடுத்தடுத்து கேள்விக் கணைகளை அவனை நோக்கித் தொடுத்தாள்
“நீ இப்போ என்ன செய்கின்றாய்?” என்று அவள் கேட்க, அவன் “கொஞ்சம் பொறு பொறு” எனக் கூறினானே தவிர அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. எனவே தமயந்திக்கு சந்தேகம் மேலும் அதிகரிக்க, அவள் அவனோடு முரண்பட ஆரம்பித்திருக்கின்றாள்.
தனது நிர்வாண நிலையை அந்த கெமரா பதிவு செய்து விட்டது. அதை நீக்கி விடுமாறு ஹேமந்தவிடம் அழுது புலம்பி மன்றாடினாள்.
எனினும் ஹேமந்த “இல்லை அப்படி ஏதும் பதிவாகவில்லை” என்று கூறி மறுத்து விட்டான். இறுதியில் இருவரும் அறையிலிருந்து வெளியேறி விட்டனர். தமயந்தி அழுது கொண்டு வீட்டுக்கு சென்று விட்டாள்.
விடுதியிலிருந்து வந்த ஹேமந்த கெமராவைக் கொடுக்க தன் உற்ற நண்பனான கயானை தேடிச் சென்றிருக்கின்றான்.
கயானிடம் “முழுவதையும் எடுக்க கிடைக்கவில்லை எனினும் எடுத்த கொஞ்சம் இதில் இருக்கின்றது பார்” என்று கொடுத்திருக்கின்றான். அது மட்டுமின்றி தன்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கும் அவற்றை அனுப்பி விட்டு கெமராவை கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.
விடுதியில் நடந்த சம்பவத்தையடுத்து குழப்பமடைந்திருந்த தமயந்தி ஹேமந்தவின் பக்கம் தலை காட்டவே இல்லை.
அவனை விட்டு தூர விலகியே இருந்தாள். குறைந்தது ஒரு குறுந்தகவலையேனும் அனுப்பவில்லை. இதனால் ஹேமந்த தன்னிடம் இருக்கும் வீடியோக்களை வைத்து தமயந்தியை மிரட்ட ஆரம்பித்தான்.
“என்னிடம் விடுதியில் எடுத்தவைகள் இருக்கின்றன அதை நான் இணையத்தில் வெளியிடப் போகின்றேன்” என மிரட்டியுள்ளான்.
தன் கணவன் உயிருடன் இருக்க, தன்னை நம்பி மூன்று குழந்தைகளும் இருக்க முறைகேடான தன் நடத்தையால் ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி இரவு பகலாய் கண்ணீர் விட்டழுதாள்.
இனிமேலாவது தான் திருந்தி வாழ வழி பிறக்காதா என எண்ணிப் புலம்பினாள். எனினும் மேலும் மேலும் இச்சம்பவம் பல சிக்கல்களையே தந்து கொண்டிருந்தன.
ஹேமந்த மட்டுமின்றி அவனுக்கு கெமராவினை கொடுத்த நண்பன் கயானும் நண்பனுக்கு தெரியாமல் தமயந்தியை தொலைபேசி யூடாக அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறான்.
“நீயும் ஹேமந்தவும் ஒன்றாக அறை யில் இருந்த வீடியோக் காட்சியை ஹேமந்த என்னிடம் கொடுத்தான்.
இனி நீ நாங்கள் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த வீடியோவை நான் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு காட்டி உன்னை அசிங்கப்படுத்துவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளான்.
அந்த தொலைபேசி அழைப்பினைக் கேட்டதும் தமயந்தி பிரம்மை பிடித்தவள் போல் இருந்திருக்கிறாள். பயம் அவளை ஆட்கொண்டிருக்கிறது.
தொலைபேசி அழைப்பில் மிரட்டல் விடுத்த கயான் குறுகிய நாட்களுக்குள்ளே ஹேமந்த மற்றும் தன் ஏனைய நண்பர்களுடன் இணைந்து அந்த வீடியோ உட்பட புகைப்படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்திருக்கிறான்.
என்ன தான் தமயந்தி தடம் மாறிச் சென்றாலும் அவளும் ஒரு பெண் தானே. அவளின் சுய மதிப்பையும், கௌரவத்தையும் இந்தப் படுபாவிகள் இணையத்த ளத்தில் அரங்கேற்றி இன்பம் கண்டு விட்டார்கள்.
இணையத்தில் படங்கள், வீடியோக்கள் அம்பலமானதைத் தொடர்ந்து தமயந்தியால் முகம் கொடுத்து வீட்டிலும், கிராமத்திலும் இருக்க முடியவில்லை.
தன் கணவர் முகத்தையும், பிள்ளைகள் முகத்தையும் பார்க்கவே வெட்கப்பட்டாள். உலகமே தன் நிர்வாண கோலத்தையும், தன் அந்தரங்கக் காட்சிகளையும் பார்த்திருக்கிறது இணையத்தில் என்ற வேதனையால் நொறுங்கிப்போனாள்.
இனிமேலும் பொறுக்க முடியாது என்று துணிந்தவளாய் பொலி ஸில் முறைப்பாடு செய்யவே பொலிஸார் சாட்சியங்களுடன் குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரி, ஹேமந்த மற்றும் அவனது நண்பன் கயான் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்த துடன் அவர்கள் இருவரையும் பொலி ஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் விசாரித்த னர்.
எனினும் பொலிஸாரின் விசாரணைகளுக்கு முன்பே தந்திரமாக இருவரும் தங்களின் கையடக்கத் தொலைபேசிகளி லும் கணனியிலும் இருந்த தமயந்தியின் நிர்வாணப் படங்களையும், வீடியோக்களையும் நீக்கி விட்டனர்.
எனவே பொலிஸாரின் விசாரணையின் போது “நாங்கள் அவ்வாறு செய்யவில்லை” என்று தாங்கள் செய்ய தவறை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டனர்.
ஆயினும் இருவருமே கெமராவில் இருந்தவற்றை நீக்கி விட மறந்திருந்தமையால் பொலிஸாருக்கு அது பெரும் சாட்சியாக மாறியது.
இருவரும் இன்று தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தால் இக்குற்றவாளிகளைக் காப்பாற்ற எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகக் கூட மாட்டார்கள் என்பதே உண்மை. அந்த அளவுக்கு மோசமான காரியத்தை அவர்கள் செய்திருந்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் இத்தகைய தவறுகளை செய்யும் பெண்களுக்கு சிறந்த பாடமாக அமை கின்றது.
திருமணம் முடித்து மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் பின்னர் வரும் காதலை “காதல்”என்று சொல்லவே நா கூசுகின்றது. கோபம், பாசம், அழுகை, சிரிப்பு போன்ற மனித உணர்வுகளைப் போன்றது தான் காமம் என்பதும்.
ஆனால் அந்த உணர்வுகளை சரியாக நெறிப்படுத்துவதற்காகத்தான் பண்பாடுகளும், கலாசாரங்களும் இருக்கின்றன.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆணும் பெண்களுக்குரிய சுய கௌரவத்தையும் மதிப்பையும் களங்கப்படுத்தும் காரியங்களில் ஈடுபடக் கூடாது.
இதே நிலைமை உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு தரம் சிந்தித்துப் பாருங்கள்.
அத்தோடு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது நன்று…..தம்மோடு சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
-வசந்தா அரசரட்ணம்